ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தில் விஜய பிரபாகரன்! பார்த்ததுமே தமிழிசை தோளை தட்டி சொன்ன வார்த்தை!
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும் பார்த்தசாரதியும் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், விஜய பிரபாகரனை பார்த்ததும் என்ன சொன்னார் தெரியுமா?
குடியரசு தினம், சுதந்திர தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து வைக்கப்படும். இதற்கு அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த முறை 79 ஆவது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இந்த முறை தேநீர் விருந்தில் கலந்து கொள்ளுமாறு அரசியல் கட்சிகளுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார். இந்த தேநீர் விருந்தை திமுக, அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டது.
அது போல் எதிர்க்கட்சிகளான பாஜக, அதிமுக உள்ளிட்டவை கலந்து கொள்ளும் என அறிவித்திருந்தன. அந்த வகையில் நேற்று ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம், டிஜிபி சங்கர் ஜிவால், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பி இன்பதுரை, எம்எல்ஏக்கள் பாண்டியன், மரகதம் குமரவேல், பாஜக சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் எச்.ராஜா, மாநில செயலாளர் அஸ்வத்தமன், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசன், தேமுதிக சார்பில் இளைஞர் அணி செயலாளர் விஜயபிரபாகரன், முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாமக எம்எல்ஏக்கள் சிவகுமார், வெங்கடேஸ்வரன், சதாசிவம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், மதுரை ஆதீனம் ஸ்ரீஞானசம்பந்த சுவாமி, தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுக்கு வந்திருந்தவர்களை ஆளுநர் ரவி, அவரது மனைவி லட்சுமி ஆகியோர் வரவேற்றனர்.
கொள்கை, கோட்பாடுகளில் வேறுபாடு இருந்தாலும் அரசியல் கட்சித் தலைவர்கள் பொது இடங்களில் சந்தித்துக் கொள்ளும் போது சிரித்து பேசுவர். அதை பார்க்கும் போது இவர்களா இப்படி ஒருவர் மீது ஒருவர் விமர்சனம் செய்தது என்ற கேள்வி வரும்.

அந்த வகையில் நிகழ்வுக்கு வந்தவர்களுடன் நயினார் நாகேந்திரன் வரவேற்று நலம் விசாரித்தார். அப்போது அந்த இடத்தில் 3 பேர் நின்றிருந்தனர். நடுவில் விஜய பிரபாகரன், வலது புறம் யாரோ நின்றிருந்தார்கள். அவருக்கு இடது புறம் பார்த்தசாரதி இருந்தார்.
அப்போது அங்கு வந்த நயினார் நாகேந்திரன், இருவருக்கும் வணக்கம் வைத்துவிட்டு விஜய பிரபாகரனை கவனிக்கவில்லை. உடனே பார்த்தசாரதி, நயினார் நாகேந்திரனை அழைத்து காட்டியவுடன், "ஆ வாங்க வாங்க" என கைகுலுக்கிவிட்டு, மீண்டும் ஒருமுறை அவருடன் கைகுலுக்கி நலம் விசாரித்தார்.
அப்போது அங்கு வந்த தமிழிசை சவுந்திரராஜன், விஜய பிரபாகரனை பார்த்ததும் "எப்படி இருக்கீங்கப்பா?, பார்க்கிறேன் பார்க்கிறேன், பிரமாதமா அப்பா மாதிரியே பேசுறீங்களே" என தோளில் தட்டிக் கொடுத்து பாராட்டினார்.












Click it and Unblock the Notifications