சீமானின் தாய் மதம் திரும்புங்க பேச்சு-நவ.5-ல் நாம் தமிழர் தலைமை அலுவலகம் முற்றுகை:இந்திய தேசிய லீக்
சென்னை: நாங்கள் இந்துக்கள் அல்ல; எங்கள் மதம் சைவம், மாலியம் (வைணவம்); இஸ்லாம் அரேபிய மதம்; கிறிஸ்தவம் ஐரோப்பிய மதம்; அனைவரும் தாய் மதம் திரும்புங்க என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து நவம்பர் 5-ந் தேதி சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ஜெ ரஹீம் அறிவித்துள்ளார்.
Recommended Video
சென்னையில் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், எங்கள் மதம் சைவம், சிவனியம், சிவமதம், எங்கள் மதம் மாலியம். அதாவது வைணவம். எங்கள் வீட்டு பத்திரத்திலும் சிவமதம் என்றுதான் உள்ளது. ஆங்கிலேயர்கள்தான் இந்துக்கள் என்றனர். கிறிஸ்தவம் என்பது ஐரோப்பிய மதம்; இஸ்லாம் மதம் அரேபிய மதம். மரச்செக்கு எண்ணெய்க்கு திரும்பியதைப் போல, கருப்பட்டிக்கு திரும்பியதைப் போல தாய்மதத்துக்கு திரும்ப வேண்டும் என கூறியிருந்தார். சீமானின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

சீமான் விளக்கம்
இதனையடுத்து இது தொடர்பாக பெரம்பலூர் கூட்டத்தில் சீமான் விளக்கம் கொடுத்தார். அதில், நான் என்ன மதம் பரப்ப வந்தவனா? இனம் பரப்ப வந்தவன்.. என் எச்சிலில் சிலர் கட்சி நடத்துகின்றனர். அவர்களுக்கு கொள்கை, கோட்பாடு எதுவும் கிடையாது. எங்களை எதிர்ப்பதுதான் அவர்களுக்கான கொள்கை, கோட்பாடு என கூறியிருந்தார். சீமானின் இந்த பல்டி பேச்சும் சர்ச்சையானது.

தேசிய லீக் கட்சி கண்டனம்
சீமானின் இந்த சர்ச்சை பேச்சுகளுக்கு இந்திய தேசிய லீக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ஜெ ரஹீம், இஸ்லாமிய கிறித்தவ மக்கள் தாய் சமயமான சைவம், மாலி, சிவ சமயங்களுக்கு மரசெக்கு போல மாறி வர வேண்டும் என்ற கருத்துக்கு சீமான் இன்னும் வருத்தம் தெரிவிக்கவில்லை. மாறாக தனது எச்சிலில் இருந்து அரசியல் செய்வதாக மீண்டும் கொச்சைப்படுத்தி உள்ளார்.

நவ.-5ல் முற்றுகை போராட்டம்
நான் அப்படி சொல்லவில்லை... இப்படி சொல்லவில்லை என்ற தங்களின் பசப்புத்தனமான மறுப்பு தங்களை குருட்டுதனமாகப் பின்பற்றும் தம்பதிகளுக்கு வேண்டுமானால் திருப்தியாக இருக்கலாம். இது போன்ற கடும் சொற்களை வேறு யாருக்காவது பயன்படுத்திக் கொள்ளுங்க. எங்கள் சமுதாயத்திடம் பயன்படுத்தினால் அதன் பலனை மிக விரைவாக அனுபவிப்பீர் என எச்சரிக்கிறேன். உங்களுக்கு உங்க சமயம் பெரியது என்றால் எங்களுக்கு எங்க சமயம் (இஸ்லாம்) உயர்ந்தது. வருகின்ற 05-11-21 வெள்ளிக்கிழமை மாலை 3-00 மணிக்கு நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

வீரலட்சுமியின் அறிவிப்பு
ஏற்கனவே நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் முற்றுகையிடப்படும் என தமிழக முன்னேற்றப் பாதுகாப்புப் படையின் நிறுவனத் தலைவர் வீரலட்சுமி அறிவித்திருந்தார். ஆனால் இந்த போராட்டத்தை கைவிட நடிகை விஜயலட்சுமி வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து முற்றுகைப் போராட்டத்தை வீரலட்சுமி திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications