’பச்சை ஆரஞ்ச் சிகப்பு’ முதல்வர் டேபிளுக்கு போன மா.செ.கள் பட்டியல்! இத்தனை பேர் நீக்கமா? பரபர திமுக!
சென்னை : திமுகவில் தற்போது உட்கட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இறுதி கட்டமாக மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. முதலில் மாவட்ட செயலாளர்கள் மாற்றம் இருக்காது என தகவல்கள் வெளியான நிலையில் தற்போது 10க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.
தேர்தல் ஆணையத்தை பொருத்தவரை தேசிய கட்சிகளாக இருந்தாலும் மாநிலக் கட்சிகளாக இருந்தாலும் கட்சியின் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு அவற்றை தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் அப்போதுதான் கட்சிகளுக்கான அங்கீகாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் உட்கட்சி தேர்தல் நிறைவடைந்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆளும் கட்சியான திமுகவிலும் நீண்ட மாதங்களாக உட்கட்சி தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இலவசங்களுக்கு எதிரான வழக்கு-3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி என்.வி.ரமணா பெஞ்ச் உத்தரவு
திமுக உட்கட்சி தேர்தல்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிளை, பேரூர், ஒன்றியம், நகரம், மாநகர அளவிலான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதை அடுத்து தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்று இறுதி பட்டியலானது தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். கடந்த சூழலில் மாவட்ட செயலாளர்களை பொறுத்த வரை பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது என்றே கூறப்பட்டது.
மாவட்ட செயலாளர்கள்
ஆனால் தற்போது திமுகவில் இருந்து வெளியாகியிருக்கும் தகவல் தான் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களை பலத்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காரணம் முதல்வர் ஸ்டாலின் முறையாக செயல்படாத மாவட்ட செயலாளர்களை மாற்றலாம் என்ற தகவலால்தான் இந்த அதிர்ச்சி. இதனால் கட்சிக்குள் இருக்கும் நிர்வாகிகள் பலர் அதிர்ச்சி கலந்த பயத்துடனேயே பல மாவட்டங்களில் வலம் வருகின்றனர்.
பெரும் போட்டி
ஆளுங்கட்சியில் அமைச்சராக இருப்பதும் திமுகவில் மாவட்ட செயலாளராக இருப்பதும் ஒன்றுதான் என நீண்ட காலமாகவே தமிழக அரசியலில் ஒரு பேச்சு இருக்கிறது. அந்த அளவுக்கு திமுகவில் மாவட்ட செயலாளர் பதவி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திண்டுக்கல் ஐ பெரியசாமி திருச்சி கே என் நேரு உள்ளிட்ட சீனியர்கள் மாநில பதவிகளுக்கு சென்ற நிலையில் அவர்களது ஆதரவாளர்களே தொடர்ந்து மாவட்ட செயலாளராக இருக்கின்றனர்.
தயாரான பட்டியல்
இருந்தும் சில மாவட்டங்களில் அவ்வப்போது மாவட்ட செயலாளர்கள் மாற்றம் நடைபெற்றது. அதிமுகவில் இருந்து புதிதாக வந்த செந்தில் பாலாஜி, தேனி தங்கத் தமிழ்செல்வன் உள்ளிட்டவர்களுக்கு மாவட்ட செயலாளர் மாவட்ட பொறுப்பாளர் உள்ளிட்ட பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்ட செயலாளர் அமைச்சர் இடையேயிலான மோதல், ஒரே மாவட்டத்தில் இருக்கும் இரு அமைச்சர்கள் என சில மாவட்டங்களில் திமுக உட்கட்சி விவகாரம் குறித்த தகவல் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது.
மூன்று வண்ணங்கள்
சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய செயல்பாடுகள், சட்டமன்றத் தேர்தலின் போது மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பணி, தற்போது நிர்வாகிகளின் செயல்பாடுகள் என்ற அடிப்படையில் மாவட்ட செயலாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அது சிகப்பு ஆரஞ்சு பச்சை என மூன்றாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. பச்சை லிஸ்டில் இருக்கும் மாவட்ட செயலாளர்கள் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள். ஆரஞ்சு பட்டியலில் இருக்கும் மாவட்ட செயலாளர்கள் ஓரளவு பரவாயில்லை. சிகப்பு என்பது மிகவும் மோசம் என்ற அடிப்படையில் இந்த பட்டிலானது தயாரிக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய கிடைத்திருக்கும் தகவலின் படி சிகப்பு பட்டியலில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களின் பெயர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
நீக்கப்பட வாய்ப்பு
மேலும் கடந்த சில நாட்களாக நடந்த நிகழ்ச்சி தேர்தலில் சிகப்பு பட்டியலில் இருக்கும் அமைச்சர்களின் பெயர் சற்று அதிகமாகவே அடிபட்டதாகவும் நிர்வாகிகள் தேர்வில் அவர்கள் அதிக அளவு தலையிட்டதாக கூறப்படுகிறது. மேலும் நிர்வாகிகளும் விசாரித்த போது அவர்களது செயல்பாடுகள் சரியில்லை எனவும் தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவர்களது செயல்பாடுகள் காரணமாகத்தான் பல தொகுதிகளில் அதிமுக வென்றது என்ற புகார் தலைமைக்கு சென்று இருக்கிறது .
நிர்வாகிகள் பீதி
வருகின்ற மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டுமானால் மாவட்ட செயலாளர்களை கண்டிப்பாக மாற்றிய தீர வேண்டும் என அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் வேறு வழியின்றி அதனை செயல்படுத்த முதல்வர் ஆகி வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த தகவல் பெற்றுள்ள மோசமான செயல்பாடுகளை கொண்ட மாவட்ட செயலாளர்கள் தங்கள் பதவிகளை காப்பாற்றிக் கொள்வதற்காக என்ன செய்யலாம் என தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.