ஆந்திர போலீசுக்கு போன மெசேஜ்.. கண்கள் சிவந்த பவன் கல்யாண்! பரிதாபங்கள் கோபி - சுதாகர் விரைவில் கைது?
சென்னை: திருப்பதி லட்டு விவகாரம் பெரிய சர்ச்சையாகி உள்ள நிலையில் இந்த விவகாரத்தில் காமெடி வீடியோ வெளியிட்ட பரிதாபங்கள் யூ டியூப் சேனல் நிர்வாகிகள் கோபி - சுதாகர் ஆகியோர் சர்ச்சையில் சிக்கி உள்ளனர்.
திருப்பதி லட்டுவில் செய்யப்பட்ட சோதனைகள் மாட்டுக் கொழுப்பு தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் முடிவுகளை வெளியிட்டு உள்ளன. ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதியில் லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார். முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

புகார் என்ன?: 2019 முதல் 2024 வரையிலான ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆட்சியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. உலகம் முழுக்க மக்களால் மிகவும் மதிக்கப்படும் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி உள்ளனர். திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில் நமது மிகவும் புனிதமான கோவில்.
ஜெகன் நிர்வாகம் திருப்பதி பிரசாதத்தில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஜெகன் மற்றும் ஒய்எஸ்ஆர்சிபி அரசை பார்த்து வெட்கப்படுகிறேன் என்று சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார். இதையடுத்து திருப்பதி லட்டுவில் செய்யப்பட்ட சோதனைகளில் அதில் மாட்டுக் கொழுப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
திருப்பதி லட்டு விவகாரம் பெரிய சர்ச்சையாகி உள்ள நிலையில் இந்த விவகாரத்தில் பரிதாபங்கள் யூ டியூப் சேனல் நிர்வாகிகள் கோபி - சுதாகர் காமெடி வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டு இருந்தனர். இந்த விவகாரத்தில் சில பிரிவினரை கிண்டல் செய்து அவர்கள் வீடியோ வெளியிட்டனர். இந்த வீடியோ பெரிய அளவில் சர்ச்சையானது. அதேபோல் ஒரு தரப்பினர் மத்தியில் வரவேற்புகளையும் பெற்றது.
இதையடுத்து அந்த வீடியோவை நீக்கிய பரிதாபங்கள் குழுவினர், கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை அதையும் மீறி சிலர் மணம் புண்பட்டிருப்பதால்.. அதற்க்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கி உள்ளோம்.. இது போல் வருங்காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.. என்று கூறி உள்ளனர்.
ஆந்திர பிரதேச போலீஸ்: ஏற்கனவே இந்த விவகாரத்தில் ஆந்திர பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் கடும் கோபத்தில் உள்ளார்.
திருப்பதியில் உள்ள திருமலா கோயிலில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதற்காக பிராயச்சித்தமாக ஸ்ரீ தசாவதார வெங்கடேஸ்வரா சுவாமி கோயிலில் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாள் உண்ணாவிரதம் தொடங்கி உள்ளார். அவரின் உண்ணாவிரதம் இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கியது.
சனாதனத்தை காக்க வேண்டும் என்று பேட்டி கொடுத்த இவர்.. காவி உடை அணிந்து கொண்டு பேட்டிகளை கொடுத்து வருகிறார். இந்த கோவில் நிர்வாகத்தில் இருப்பது எல்லாம் இந்துக்கள்.. லட்டுவை பிடித்தது குறிப்பிட்ட சிலர் மட்டுமே அப்படி இருக்க.. இந்த சம்பவத்தில் தேவையில்லாமல் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களை இழுத்து பேசி காமெடி செய்தார் பவன் கல்யாண். இது போக இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் கோவில்களில் செய்வீர்களா என்று தேவையில்லாமல் இழுத்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
பரிதாபங்கள் மீது புகார்; இப்படிப்பட்ட நிலையில் பரிதாபங்கள் குழுவை ஆந்திர போலீஸ் கைது செய்ய வேண்டும். இதில் சர்ச்சையை அவர்கள் ஏற்படுத்துகிறார்கள் என்று தமிழக பாஜக நிர்வாகிகள் சிலர் ஆந்திர போலீசுக்கு மெசேஜ் அனுப்பி உள்ளனர். ஆந்திர போலீசுக்கு ட்விட்டரில் டேக் செய்து.. இந்த விவகாரத்தை வைத்து கலவரத்தை உண்டாக்கும் வகையில் பேசியதாக பரிதாபங்கள் குழு மீது தமிழக பாஜக நிர்வாகிகள் சிலர் ஆந்திர போலீசுக்கு மெசேஜ் அனுப்பி உள்ளனர்.












Click it and Unblock the Notifications