எடப்பாடி டெல்லி போக அண்ணாமலை காரணமா? "அலர்ட்டான" மோடி?.. புட்டு புட்டு வைத்த ரவீந்திரன் துரைசாமி
சென்னை: எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றது ஏன்? முதல்வர் ஸ்டாலின் திடீரென எம்ஜிஆர் பற்றி பேசியது ஏன்? அதிமுக மெகா கூட்டணி அமையுமா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பதில் அளித்துள்ளார்.
ஜி 20 கூட்டம் தொடர்பான ஆலோசனையில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமி நேற்று முதல்நாள் டெல்லி சென்றார். பாஜகவிற்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் கருத்து வேறுபாடு நிலவும் நிலையில் இந்த டெல்லி பயணம் அதிக கவனம் பெற்றது.
அரசியல் ரீதியாக இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் மெகா கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி கூறி உள்ள நிலையில்தான் அவரின் இந்த டெல்லி பயணம் இருக்கிறது.
எல்லோருக்கும் வீடு! கனவை நிஜமாக்கிய முதலமைச்சர் ஸ்டாலின்! ஒரே நாளில் 4,644 குடியிருப்புகள் திறப்பு!
பேட்டி
இந்த நிலையில்தான் எடப்பாடியின் டெல்லி பயணம் குறித்தும், அதிமுகவின் கூட்டணி திட்டங்கள் குறித்தும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா அரசியல் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ,
கேள்வி: எடப்பாடி டெல்லி போக அண்ணாமலைதான் காரணம்.. அண்ணாமலை சிபாரிசுதான் இதற்கு காரணம் என்கிறார்களே?
பதில்: அதெல்லாம் இல்லை. அவர் அதிமுகவின் மெகா கூட்டணியை ஏற்றுக்கொள்வேன் என்று கூறியுள்ளார். அவர் எடப்பாடி - ஓ பன்னீர்செல்வம் இருவரையும்தான் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார். எடப்பாடிக்கு அண்ணாமலை உதவுவதாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர்கள் கட்சியில் தேசிய தலைமைதான் கூட்டணியில் எல்லாம் முடிவு எடுக்கும். அதனால் அண்ணாமலை பற்றி இப்படி சொல்ல முடியாது.
கூட்டணி எப்படி?
கேள்வி: அதிமுக + பாஜக கூட்டணி வெல்லும் என்று எடப்பாடி உறுதி அளிக்கும் பட்சத்தில் எடப்பாடியை பாஜக ஒற்றை தலைமையாக ஏற்றுக்கொள்ளாதா?
பதில்: மோடிதான் பிரதமர் என்று எடப்பாடி பழனிசாமியால் சொல்ல முடியுமா? சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம். அவர் கூட்டணியை விட்டு வெளியேறலாம் என்று பார்த்துக்கொண்டு இருக்கிறார். தேசிய அரசியலில் இதற்கு முன் பல கூட்டணிகள் உடைந்துள்ளன. அதேபோல் பாஜகவை கழற்றிவிட்டுவிட்டு போகலாம் என்று பார்த்துக்கொண்டு இருக்கிறார். இது மோடிக்கும் தெரியும். எடப்பாடி நம்மை கைகழுவ போகிறார். அலர்ட்டாக இருங்கள் என்று மோடியிடம் சொல்லிக்கிட்டு இருக்கிறார்.
ஸ்டாலின் எம்ஜிஆர்
கேள்வி: ஸ்டாலின் திடீரென எம்ஜிஆர் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளாரே?
பதில்: 1977ம் ஆண்டு எம்ஜிஆர் 30.3 சதவிகிதம் வாக்குகளை பெற்றார். நான்கு முனை போட்டி காரணமாக ஆட்சிக்கு வந்தார். குறைவான வாக்கு எடுத்துதான் அவர் ஆட்சிக்கே வந்தார். மும்முனை போட்டி இருந்திருந்தால் அப்போது ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார். இதுதான் டேட்டா. இதுதான் அரசியல் பாடம். அந்த அளவிற்குதான் எம்ஜிஆருக்கு செல்வாக்கு இருந்தது. ஆனால் 1989ல் எம்ஜிஆரை விட அதிக வாக்கு, அதிக சீட்டு பெற்று கருணாநிதி வென்றார். 38 சதவிகித வாக்குகளை கருணாநிதி பெற்றார். அப்போதும் நான்கு முனை போட்டி நிலவியது. 1977ல் எம்ஜிஆர் பெற்றதை விட கருணாநிதி அதிக வாக்குகளை 1989ல் பெற்றுள்ளார் என்றால், கருணாநிதியை மக்கள் ஏற்றுக்கொண்டனர் என்றுதானே அர்த்தம். இதன் அர்த்தம் எம்ஜிஆர் மறைவிற்கு பின் அவரின் வாக்குகளில் 5 சதவிகிதம் கருணாநிதிக்கு சென்றது என்பதுதான்.
ஸ்டாலினுக்கு தெரியும்
இந்த கணக்கு ஸ்டாலினுக்கும் தெரியும். எம்ஜிஆர் வாக்குகள் திமுக பக்கம் வரும் என்பது ஸ்டாலினுக்கும் தெரியும். ஸ்டாலினுக்கும் இந்த உண்மை தெரியும். அதிமுகவிற்கு வாக்கு போடும் மக்கள் திமுகவிற்கு போடுவார்கள். இது வரலாற்றில் நடந்து இருக்கிறது. அதிமுக வாக்குகள் திமுக பக்கம் சென்றதே இதற்கு முன் நடந்துள்ளது. ஸ்டாலின் இதை நம்புகிறார். ஸ்டாலின் இதனால்தான் தற்போது எம்ஜிஆர் பெயரை கையில் எடுத்துள்ளார். ஸ்டாலின் vs மற்றவர்கள் என்ற நிலைமைதான் இருக்கிறது.
ஸ்டாலினை வெறுமனே எடப்பாடி எதிர்க்கிறார். ஸ்டாலினை எதிர்க்க எடப்பாடி ஏதாவது அஸ்திரத்தை எடுக்க வேண்டும். ஆனால் இஸ்லாமியர்கள் பற்றி பேசுவது இல்லை, பரந்தூர் விமான நிலையம் பற்றி பேசுவது இல்லை, இஸ்லாமிய சிறை கைதிகள் பற்றி பேசுவது இல்லை, தலித் மக்கள் பற்றி பேசுவது இல்லை, சமூக நீதி பற்றி பேசுவது இல்லை. இதை எல்லாம் எடப்பாடி பேசாமல் வெறுமனே ஸ்டாலினை எதிர்த்தால் எடப்பாடி எப்படி வெற்றிபெற முடியும். எடப்பாடி வெறுமனே ஸ்டாலினை எதிர்க்கிறேன் என்று கூறினால், எப்படி மக்கள் வாக்களிப்பார்கள்.
எடப்பாடி தினகரன்
கேள்வி: எடப்பாடி தினகரனை எதிர்காலத்தில் ஏற்றுக்கொள்வாரா?
பதில்: இதெல்லாம் கேம்தான். டிடிவி தினகரன் மற்றும் பன்னீரை மொத்தமாக கழற்றிவிட தற்போது எடப்பாடி பார்த்துக்கொண்டு இருக்கிறார். அவர் சிங்கம் என்று வைத்துக்கொள்ளுங்கள். தினகரன் மற்றும் பன்னீரை முடித்துவிடலாம். அடுத்து பாஜக, பாமகவை அடித்துவிடலாம். பின்னர் ஸ்டாலினை தனியாக எதிர்கொள்ளலாம் என்று எடப்பாடி நினைக்கிறார். ஜெயலலிதா, கருணாநிதி போல ஆக வேண்டும் என்று எடப்பாடி நினைக்கிறார். ஆனால் தினகரன், பன்னீர் எல்லாம் எடப்பாடியின் இந்த திட்டத்தை உணர்ந்து கொண்டனர். இதனால்தான் எடப்பாடியை இவர்கள் ஒன்றாக சேர்ந்து எதிர்க்கிறார்கள்.
மோடியை பிரதமராக ஏற்றுக்கொண்டு, மற்ற கட்சிகளை ஏற்றுக்கொண்டு அந்த அணிக்குள் எடப்பாடி சீட் வாங்க வேண்டும். அவர் மற்ற கட்சிகளை ஏற்றுக்கொண்டு இறங்கி வர வேண்டும். இல்லையென்றால் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது. ஆனால் எடப்பாடி தான் தனிப்பட்ட தலைவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. அவர் தனிப்பட்ட தலைவராக ஸ்டாலினை எடுக்க வாய்ப்பே இல்லை, என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.