அமித்ஷா இருக்கட்டும்.. திட்டங்களுக்கு அம்பேத்கர் பெயரை திமுக அரசு சூட்டுமா? டாக்டர் ராமதாஸ் கேள்வி
சென்னை: அண்ணல் அம்பேத்கரின் பெருமைகளை காப்பதற்காக பிறந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுக அண்ணல் அம்பேத்கருக்காக என்ன செய்தது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சென்னை கிண்டி மருத்துவ மனை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளிட்ட கட்டிடங்களுக்கும், அரசின் திட்டங்களுக்கும் அண்ணல் அம்பேத்கரின் பெயரை திமுக அரசு சூட்ட வேண்டும். திமுக அரசு செய்யுமா? எனவும் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் அறிக்கை: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைவழிகாட்டி. இந்தியாவிலேயே பட்டியலினத்தவர் அல்லாதவரால் தொடங்கப் பட்ட கட்சிக்கு அண்ணல் அம்பேத்கரை கொள்கை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். அவர் மீது கொண்ட மதிப்பால் எங்கள் வீட்டு வளாகத்தில் அவரது உருவச் சிலையை அமைத்திருக்கிறோம்.

அம்பேத்கர் சிலைகள் திறப்பு
தமிழ்நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட சிலைகளை திறந்திருக்கிறோம். அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 7 இடங்களில் அம்பேத்கர் சிலைகளை நான் திறந்தேன். ஆனால், அண்ணல் அம்பேத்கரின் பெருமைகளை காப்பதற்காக பிறந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுக அண்ணல் அம்பேத்கருக்காக என்ன செய்தது?
சட்டப் பல்கலைக் கழக பெயர் பின்னனி
1949-ஆம் ஆண்டில் திமுக தொடங்கப்பட்டது. அதன்பின் 1989ஆம் ஆண்டில் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. இடைப்பட்ட 40 ஆண்டு காலத்தில் அண்ணல் அம்பேத்கரைப் பற்றி திமுக எத்தனை முறை பேசியது. இந்தியா முழுவதும் சட்டக் கல்லூரிகளுக்கு அம்பேத்கர் பெயர் சூட்டும் வழக்கம் ஏற்பட்ட பிறகு தான் 1990-ஆம் ஆண்டில் சென்னை சட்டக்கல்லூரிக்கும், 1997-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சட்டப்பல்கலைக்கழகத்திற்கும் அம்பேத்கரின் பெயரை திமுக சூட்டியது.
அம்பேத்கர் சிலை, அம்பேத்கர் திட்டம்?
இன்று வரை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கருக்கு சிலை அமைக்கப்படவில்லை. 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 40-க்கும் மேற்பட்ட திட்டங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு கலைஞர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கலைஞரின் பெயர் மட்டுமல்ல, தமிழகத்தின் நலனுக்கு எந்த பங்களிப்பும் செய்யாத அவரது தாயார் பெயரிலும் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், எந்த புதிய திட்டத்திற்கும், கட்டிடங்களுக்கும் அண்ணல் அம்பேத்கர் பெயர் சூட்டப்படவில்லை. இது தான் அண்ணலுக்கு செலுத்தும் மரியாதையா? என திமுக அரசு விளக்க வேண்டும்.
தமிழக அரசு பெயர் சூட்ட தயாரா?
சென்னை கிண்டி மருத்துவ மனை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளிட்ட கட்டிடங்களுக்கும், அரசின் திட்டங்களுக்கும் அண்ணல் அம்பேத்கரின் பெயரை திமுக அரசு சூட்ட வேண்டும். திமுக அரசு செய்யுமா? இவ்வாறு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அமித்ஷா விவகாரமும் பாமகவும்
அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோருகிறது திமுக. இதற்கான போராட்டங்களை நடத்தியது திமுக. பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக, அம்பேத்கரை ஏற்றுக் கொண்டிருக்கிற கட்சி. இந்த பின்னணியில்தான் அமித்ஷா விவகாரத்தைக் குறிப்பிடமால் அம்பேத்கருக்காக வரிந்து கட்டும் திமுக, அரசு திட்டங்களுக்கு ஏன் அண்ணல் அம்பேத்கர் பெயரை சூட்டவில்லை என கேள்வி எழுப்பி இருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications