"விடமாட்டேன், ரிப்போர்ட் எங்கே".. அதிரடியில் ஸ்டாலின்.. கிலியில் "கறுப்பு ஆடுகள்?" உட்கட்சி தேர்தல்?
கறுப்பு ஆடுகள் யார் என்ற ரிப்போர்ட் கேட்டுள்ளாராம் ஸ்டாலின்
சென்னை: விரைவில் தேர்தல் என்பதால், திமுக மேலிடம் பெரும் பரபரப்பாக செயல்பட ஆரம்பித்துள்ளது.. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினே நேரடியாக கண்காணிப்பில் இறங்கி உள்ளார்..!
சட்டசபை தேர்தல், 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி என மொத்த தேர்தலிலும் மண்ணை கவ்விக் கொண்டுவிட்டது அதிமுக.
மற்றொரு புறம் சசிகலாவின் எழுச்சியும் வேகம் எடுத்து வருவதால், மிகப்பெரிய நெருக்கடிக்கு அதிமுக ஆளாகி உள்ளது.. எனவே, சசிகலாவின் வளர்ச்சியை மட்டுப்படுத்தவும், அதிமுகவின் பலத்தை நிரூபிக்கவும், உட்கட்சி தேர்தல் என்ற அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது அதிமுக..
எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு..அரசியல் ரீதியாக பழிவாங்கத் துடிக்கிறது திமுக.. அதிமுக கடும் கண்டனம்
இரட்டை தலைமை
அரசியல் கட்சிகள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சித் தேர்தலை நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி... அந்த வகையில், உட்கட்சி தேர்தலை இந்த மாதத்திற்குள் முடித்து, அடுத்த மாதம் பொதுக்குழுவை கூட்டிவிடலாம் என்பதே இரட்டை தலைமைகளின் தற்போதைய பிளானாக இருக்கிறது.. ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.
ஓபிஎஸ்
தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும், கிளை செயலர் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், பேரூராட்சி, ஒன்றிய, நகர, மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் மட்டும் இன்னும் நடத்தப்படாமல் உள்ளது.. இதைதான் சசிகலாவின் சுற்றுப்பயண நேரத்தில் பயன்படுத்தி கொள்ளவும் அதிமுக யோசித்து வருகிறது.. அதேபோல நகர்ப்புற தேர்தலில் ரிக்கார்ட் பிரேக் வெற்றி பெற்ற திமுகவும், உட்கட்சி தேர்தலை இப்போதே நடத்திவிடலாம் என்ற யோசித்து வருகிறது..
கொரோனா
திமுகவை பொறுத்தவரை கடந்த வருடமே இந்த தேர்தலை நடத்தியிருக்க வேண்டும்.. ஆனால் கொரோனா காரணமாக இந்த தேர்தல் நடத்தப்படவில்லை.. இது தொடர்பாக திமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் விளக்கமும் தரப்பட்டு, போதிய அவகாசமும் கேட்கப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் மாதத்துக்குள் இத்தேர்தலை நடத்த வேண்டிய சூழலுக்கு திமுக ஆளாகி உள்ளது.. வரும் 18-ம்தேதி பட்ஜெட் கூட்டம் நடக்க உள்ளது.. அந்த கூட்டத்தொடருக்கு பிறகு, உட்கட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.
திமுக
அதேசமயம், இந்த தேர்தல் விஷயத்தில் முதல்வர் இப்போதே கவனம் செலுத்தி வருகிறாராம்.. காரணம் நடந்து முடிந்த தேர்தலில், கூட்டணி கட்சிகள் விஷயத்தில் சில திமுகவினர் நடந்து கொண்ட விதம், கட்சியின் மேலிடத்துக்கு தர்மசங்கடத்தை பெற்று தந்துவிட்டது.. அதிலும் திருமாவளவன், பகிரங்கமாகவே செய்தியாளர்களிடம் இந்த புகாரை சொல்லி ஆதங்கப்பட்டார்.. இதற்கு பிறகுதான், சம்பந்தப்பட்ட திமுக பிரமுகர்களிடம் கண்டிப்பு காட்டி, விஷயத்தை சுமூகமாக கொண்டு வந்தார்.
உள்ளடி வேலை
எனினும் கூட்டணி கட்சிகளுக்கு இது ஒரு மனக்குறையாகவே இருந்து வருவதாக தெரிகிறது.. அதனால்தான், முதல்வர் நேரடியாகவே இந்த விஷயத்தை கையில் எடுக்க உள்ளதாக கூறுகிறார்கள்.. அதுமட்டுமல்ல, சட்டசபை தேர்தலிலேயே, ஒருசிலர் உள்ளடி வேலைகளில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.. யாரெல்லாம் உள்ளடி வேலைகள் பார்த்தனர்? குறிப்பாக, கொங்குவில் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் யார் என்பது குறித்து முதல்வர் உளவுத்துறையிடம் ஒரு ரிப்போர்ட் கேட்டிருந்தார்..
விமர்சனம்
அதன்படியே, முழு விவரமும் முதல்வர் கைக்கு சென்றது.. ஆனால், ஆட்சி அப்போதுதான் அமைந்திருந்ததாலும், இவர்கள்மீது நடவடிக்கை எடுத்தால் அது விமர்சனமாகிவிடும் என்பதாலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை.. ஆனால் அவர்களுக்கு ஸ்ட்டிரிக்ட்டாக வார்னிங் தந்தார்.. எனினும், நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தலிலும் இதேபோல உள்ளடி வேலைகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
கட்டுப்பாடுகள்
இவர்கள், இனி நடக்க போகும் தேர்தலிலும் ஈடுபடக்கூடும் என்பதால், இத்தகைய கறுப்பு ஆடுகள் யார்? கட்சிக்கு கட்டுப்படாமல் செயல்பட்டவர்கள் யார்? என்பது குறித்தெல்லாம் ரிப்போர்ட் கேட்டுள்ளாராம் முதல்வர். இந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில், களையெடுப்பும், புறக்கணிப்பும் திமுகவுக்கள் விரைவில் நடக்கலாம் என்கிறார்கள்... இதனால் சம்பந்தப்பட்ட கறுப்பு ஆடுகள் கிலியில் இருந்தாலும், திமுக மேலிடம் படுமும்முரமாக தேர்தல் பணியில் இறங்கி வருகிறது.