அடுத்த அதிபர் எலான் மஸ்க்? டெஸ்லா பங்குகள் 15% உயர்வு! டிரம்ப் மெகா திட்டம்
சென்னை: இந்தியாவில் நடப்பதைப்போலவே ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் பழக்கம் அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் நடைமுறையில் உள்ளது என்ற ஒரு உண்மையைப் பங்குச் சந்தை நிபுணர் பி.ஆர்.சுந்தர் வெளிப்படுத்தி இருக்கிறார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அவரது குடியரசுக் கட்சிக்கு அதிக பெரும்பான்மை கிடைத்துள்ளது. அது போக செனட் அவையிலும் ஹவுஸ் சபையிலும் இவரது கட்சி மெஜாரிட்டியை பதிவு செய்துள்ளது. இதனால் உலக அளவில் டிரம்ப் செல்வாக்கு கூடியுள்ளது. கடந்த முறை டிரம்ப் அதிபராக இருந்தபோது நடந்த தேர்தலில் பைடன் வெற்றி பெற்றார். அப்போது வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மாட்டேன் என்று டிரம்ப் அடம்பிடித்த சம்பவம் நடந்தது. ஆனால், இந்த முறை ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அதிபர் ஜோ பைடன், 'வெள்ளை மாளிகைக்கு வந்து பதவியேற்கும் படி' டிரம்புக்கு நாகரிகமாக அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாற்றம் அமெரிக்க அரசியல் வரலாற்றில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டிரம்ப் வெற்றியைப் பற்றியும் உலக வர்த்தகம் பற்றியும் பேசியுள்ள பங்குச் சந்தை நிபுணர் பி.ஆர். சுந்தர் சில முக்கியமான புள்ளிவிவரங்களைச் சுட்டிக் காட்டி பேசியுள்ளார். அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ,"டிரம்ப் எப்போதும் அமெரிக்கக் குடிமக்களுக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடியவர். சொந்த நாட்டு மக்கள் நலன் சார்ந்தே அரசியல் முடிவுகளை எடுக்கக் கூடியவர். முன்பு அமெரிக்காவில் ஒரு குழந்தை பிறந்தால், உடனே அந்த நாட்டின் குடியுரிமை வழங்கப்படும். ஆனால், அந்தக் கொள்கை முடிவை டிரம்ப் மாற்றம் செய்வார் என்று சொல்கின்றனர்.
விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், முகேஷ் அம்பானி ஒரு இந்தியர். அவரது மகளும் ஒரு இந்தியர். அவருக்கு சில வருடங்கள் முன் திருமணம் நடந்தது. அவரது பிரசவம் அமெரிக்காவில்தான் நடந்தது. அந்தக் குழந்தை இப்போது அமெரிக்கப் பிரஜை. ஆக, ஒரு அமெரிக்காவில் குழந்தை பெற்றுக் கொண்டால், அக்குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்படும். அவர் என்ன காரணத்திற்காக வந்தார்கள் என்பது எல்லாம் இதுவரை ஒரு காரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டது இல்லை. இப்போது இதில் சில வரையறைகளைக் கொண்டுவர டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
இதை ஏன் டிரம்ப் மாற்றுகிறார் என்றால், அமெரிக்காவில் சட்டவிரோதமாக மில்லியன் கணக்கான மக்கள் குடியேறியுள்ளனர். அவர்கள் குடியேற்றம் சட்டவிரோதமாக இருந்தாலும், குழந்தை அமெரிக்காவில் பிறந்துவிட்டால் அது அமெரிக்கப் பிரஜையாகிவிடும். ஆகவே, அதை ஒழிக்க டிரம்ப் விரும்புகிறார். இது ஒருவகையில் இந்தியர்களைப் பாதிக்கும். உலக அளவில் அமெரிக்காவுக்கு அதிகம் வேலைக்குச் செல்பவர்கள் இந்தியர்கள்தான். குறிப்பாக ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்தான். எனவேதான் குடியுரிமை பெற்ற இந்தியர்களே டிரம்பை ஆதரித்து ஓட்டுப்போட்டுள்ளனர். அதிகாரப்பூர்வமாகத் தகவல் யார் எந்தக் கட்சிக்கு வாக்களித்தார்கள் என்பது வெளிப்படையாகத் தெரியாது. ஆனால், கணிப்புகள் அதையே தெரிவிக்கின்றன.
அமெரிக்கத் தேர்தல் என்பது இந்தியத் தேர்தலைப் போலத்தான். அங்கேயும் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரம் இருக்கிறது. டிரம்ப் பெரிய பணக்காரர். அவர் நண்பர் எலன் மஸ்க் உலகப் பணக்காரர். எனவே பணத்திற்குப் பஞ்சமே இல்லை. ஒருநாளில் எலன் மஸ்க் டெஸ்லா நிறுவன பங்கு 15% ஏறியுள்ளது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை ஒருவர் 2 முறை மட்டுமே அதிபராக வர முடியும். டிரம்ப் 2 முறையை நிறைவு செய்துவிட்டார். 4 ஆண்டுகள் கழித்து எலன் மஸ்க் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் என்றும் ஊடகங்கள் எழுதி இப்போதே எழுதத் தொடங்கியுள்ளனர். அதற்காக தகுதியும் பணமும் வயதும்கூட அவரிடம் உள்ளது. எனவே அடுத்த அதிபராக எலன் மஸ்க் வரலாம். அமெரிக்காவில் இரு கட்சி ஆட்சி முறைதான். ஒன்று ஜனநாயகக் கட்சி. அடுத்து குடியரசு கட்சி. இதைவிட்டால் வேறு வழியில்லை.

அதிபர் மாளிகை எந்த சட்டத்தைக் கொண்டுவந்தாலும் அது செனட் மற்றும் ஹவுஸ் ஆகிய இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும். அப்போதுதான் அது சட்ட வடிவம் பெறும். கடந்த ஆட்சியில் செனட் அவையில் ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் தலா 50 உறுப்பினர்கள் இருந்தனர். ஆகவே, ஒரு சட்டத்தை நிறைவேற்றப் பெரும்பான்மைக்குச் சிக்கல் வந்து. அவையில் சமமான பலம் உள்ளபோது ஒரு ஓட்டு துணை ஜனாதிபதிக்கு உண்டு. அதைப் போட்டால் அந்த அணி வெற்றி பெறும். இப்போது டிரம்ப் இரண்டு அவைகளிலும் பலமாக இருக்கிறார்.
டிரம்ப் வருகையால் இந்தியாவுக்கு லாபமும் இல்லை. நஷ்டமும் இல்லை. இதனால் இந்தியப் பங்குச் சந்தை பாதிக்காது. டாலரின் மதிப்பு நேற்று கூடியதால், தங்கத்தின் விலையில் சற்று சரிவு ஏற்பட்டது. உலக பங்குச் சந்தையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1900 டாலராக இருந்த ஞாபகம். இப்போது 2700 டாலராக அது அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட50% உயர்ந்துள்ளது. அதில் 3% தான் இறங்கி இருக்கிறது. இது ஒரு நஷ்டம் இல்லை. இனி வருங்காலங்களில் தங்கம் விலை குறைய வாய்ப்பு இல்லை. டிரம்ப் வெற்றியால் டாலரின் மதிப்பு லேசாக உயர்ந்ததால்தான் இந்த விலை இறக்கம் ஏற்பட்டுள்ளது" என்கிறார்.












Click it and Unblock the Notifications