12-16 வாரம்.. கோவிட்ஷீல்ட் டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை அதிகரித்த மத்திய அரசு.. என்ன காரணம்?
சென்னை: கோவிட்ஷீல்ட் வேக்சினின் முதல் டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ் எடுத்துக்கொள்வதற்கு இடையிலான இடைவெளி 12-16 வாரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு காரணம் என்ன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்வதற்காக கோவிட்ஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பு மருந்துகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கோவிட்ஷீல்ட் வேக்சின் ஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகா நிறுவனங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு சீரம் இன்ஸ்டிடியூட் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவிட்ஷீல்ட் வேக்சினின் இரண்டு டோஸ்களுக்கு இடையிலான கால இடைவெளியை தேசிய வேக்சின் வல்லுநர்கள் குழு அதிகரித்துள்ளது. நிதி ஆயோக் உறுப்பினர் விகே பால் தலைமை தாங்கும் இந்த குழு மூலம் புதிய பரிந்துரை வெளியிடப்பட்டுள்ளது.
எப்படி
இதற்கு முன் கோவிட்ஷீல்ட் வேக்சினின் முதல் மற்றும் இரண்டாம் டோஸ் 6-8 வாரங்கள் இடைவெளியில் போடப்பட்ட நிலையில் தற்போது தற்போது 12-16 வாரங்கள் இடைவெளியில் இதை போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு கொரோனா நோயில் இருந்து குணமடைந்தவர்கள் 6 மாதங்களுக்கு பின்பே வேக்சின் எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சந்தேகம்
மத்திய அரசின் இந்த முடிவு பெரிய சந்தேகங்களை ஏற்படுத்தியது. முக்கியமாக ஆக்ஸ்போர்ட் மற்றும் ஆஸ்டர்செனக நிறுவனம் 12-16 வார இடைவெளியில் கோவிட்ஷீல்ட் வேக்சினை சோதனை செய்யாத நிலையில் மத்திய அரசு இந்த பரிந்துரையை செய்துள்ளது. ஒருவேளை வேக்சின் தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு இப்படி இடைவெளியை அதிகப்படுத்தி உள்ளதோ என்று வல்லுநர்கள் பலர் இதனால் சந்தேகம் அடைந்தனர்.
உண்மை என்ன
ஆனால் உலக சுகாதார மைய பரிந்துரையைத்தான் மத்திய அரசு பின்பற்றியுள்ளதாக என்று கூறப்படுகிறது. உலக சுகாதார மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் சவுமியா சாமிநாதனின் பரிந்துரையின்படி கோவிட்ஷீல்ட் வேக்சினின் 2 டோஸ்களுக்கு இடைப்பட்ட காலம் 12 வாரமாக இருந்தால், அதன் திறன் சிறப்பாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது முதல் டோஸ் எடுத்து 12 வாரம் கழித்து இரண்டாவது டோஸ் எடுத்தால் நல்ல பயன் அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆற்றல்
இதன் மூலம் கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சகதி அதிகரிக்கும். அதேபோல் இரண்டு டோஸ்களுக்கு இடையில் அதிக இடைவெளி இருந்தால் அதிக ஆற்றல் இருக்கும் என்றும் பிரபல மருத்துவ ஆராய்ச்சி இதழான தி லான்செட் குறிப்பிட்டுள்ளது. அதோடு 12 வாரங்கள் இடைவெளி விட்டால் கோவிட்ஷீல்ட் ஆற்றல் 81.3% ஆக இருக்கும், அதுவே 6 வாரம் இடைவெளி விட்டால் இதை எதிர்ப்பு ஆற்றல் 55.1% இருக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
அதிகம்
12 வார இடைவெளியில் இரண்டாவது டோஸ் எடுக்கும் நபருக்கு, எதிர்ப்பு சக்தி இரண்டு மடங்கு அதிகம் இருக்கும் என்று இதில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தற்போது மத்திய அரசும் உலக சுகாதார மையத்தை பின்பற்றி கோவிட்ஷீல்ட் டோஸ் இடைவெளியை உயர்த்தி உள்ளது என்கிறார்கள். ஸ்பெயினில் இதே இடைவெளி கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்தியா எப்படி
இந்தியாவில் முதலில் 4-6 வாரங்களில் கோவிட்ஷீல்ட் டோஸ்கள் கொடுக்கப்பட்ட நிலையில் அது கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது கோவிட்ஷீல்ட் வேக்சினின் டோஸ்களுக்கு இடையிலான இடைவெளி 12-16 வாரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், பலன் அதிகமாக இருக்கும் என்று தேசிய வேக்சின் வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.