கே.எஸ்.அழகிரியை சுயமாக செயல்பட விடுவார்களா?.. சிங்கம் போல சிங்கிளாக கலக்குவாரா??
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட கே எஸ் அழகிரி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். கோஷ்டிப் பூசலுக்கு பெரும்பெயர் பெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இவர் வேறு அழுத்தங்கள் இன்றியும் எதிர்ப்புகளை சமாளித்தும் சுதந்திரமாக செயல்பட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு முன்னர் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் சில நாட்களுக்கு முன்னர் பேசும்போது கூட நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை தான்தான் தலைவர் என்று பேசினார். ஆனால் தேர்தல் நெருக்கத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவரது பதவி பறிக்கப்பட்டது. எந்த தேர்தலையும் சந்திக்காமலேயே அவரது பதவி காலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.

திமுக தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம், காங்கிரசில் உள்ள பல்வேறு கோஷ்டி தலைவர்களை கண்டு கொள்ளாமல் ஒதுக்கியது, மாநில நிர்வாகிகள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரன் கை காட்டியவர்களுக்கே வாய்ப்பு என்ற நிலையை உருவாகியது என்று பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. இருந்தாலும் திருநாவுக்கரசர் பதவியேற்றதில் இருந்து தனது அதிருப்தி தலைவர்களை எந்த விதத்திலும் அவர் கண்டு கொள்ளவே இல்லை. அனைத்து விசயங்களிலும் அவரும் அவருடைய மகனுமே பிரதானமாக இருந்தனர். இதனால் இவர் பதவியேற்ற முதல் நாளில் இருந்தே அகில இந்திய தலைமைக்கு புகார் மேல் புகார்களாக பறந்தன.
இந்த நிலையில் தமிழக காங்கிரசின் முக்கியத் தலைவர் ஒருவரின் சிபாரிசின் பேரில் கே எஸ் அழகிரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவர் இந்த தலைமைப் பொறுப்புக்கு தகுதியானவர் இல்லை என்ற புகார் பட்டியல் இப்போதே டெல்லிக்கு பறக்க ஆரம்பித்து விட்டது. வரும் 18 –ம் தேதி கே எஸ் அழகிரியின் சொந்த மாவட்டமான கடலூரிலேயே இவருக்கு எதிராக போராட்டம் நடைபெறவுள்ளது. இவரது தலைமையை எதிர்த்து காந்தி சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டமும் நடைபெறவுள்ளது. இப்படி எதிர்ப்புகள் ஒருபுறம் என்றால் திருநாவுக்கரசரை மாற்றிவிட்டு வேறு தலைவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் முன்வைக்கப்பட்டபோது பீட்டர் அல்போன்ஸ் அல்லது முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நியமிக்கப்படலாம் என்றே கூறப்பட்டது.
ஆனால் யாரும் எதிர்பாராத நிலையில் மாநில அளவில் பெரிய பிரபலமும் இல்லாத கே எஸ் அழகிரி திடீரென நியமிக்கப்பட்டது பலரது புருவத்தையும் உயர வைத்துள்ளது. இவரது நியமனம் இந்த கட்டுரையில் முன்னரே குறிப்பிட்டுள்ளது போல தமிழகத்தின் சக்தி வாய்ந்த ஒரு தலைவரின் பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்பதால் காங்கிரஸ் தொண்டர்களும் நிர்வாகிகளும் இப்போதே அதிருப்தியான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
திருநாவுக்கரசர் தலைவராக இருந்தபோது அவரை சந்திக்கவேண்டும் என்றால் அவரது மகனிடம் அப்ப்பயின்மென்ட் வாங்க வேண்டிய நிலை இருந்தது. இவையெல்லாம் திருநாவுக்கரசருக்கு பெரும் சறுக்கல்களாக மாறின. அதுபோல இப்போது பொறுப்பேற்றிருக்கும் கே எஸ் அழகிரியும் தன்னை பரிந்துரைத்தவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டியிருக்கும் என்பதால் இவரால் சுதந்திரமாக செயல்பட முடியாது என்றே கூறுகின்றனர். அது பல இவரது சொந்த மாவட்டத்திலேயே இப்போதே இவருக்கு எழுந்திருக்கும் எதிர்ப்புகள் எல்லாவற்றையும் இவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற கேள்வியை எழுப்புகின்றன. இதற்கு இவரது பதவிஏற்ப்பு நிகழ்வின்போது ஈ.வி.கே எஸ் இளங்கோவன் கூறியது போல இவர் முஷ்டியை தூக்குவாரா என்பது போக போக தெரியும்












Click it and Unblock the Notifications