இன்று சந்திர கிரகணம்! அற்புதமாக ஜொலிக்க போகும் "ரத்த நிலா.." வெறும் கண்களால் பார்க்கலாமா! முழு தகவல்
சென்னை: இன்று முழு சந்திர கிரகணம் நிகழும் நிலையில், இதை வெறும் கண்களால் பார்க்கலாமா என்பதே இங்குப் பலருக்கும் உள்ள கேள்வியாக உள்ளது.
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலையில், இப்போது நாம் இந்தாண்டின் கடைசி சந்திர கிரகணத்தைப் பார்க்க உள்ளோம்.
சந்திர கிரகணத்தின் சமயத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் மாறும். இந்தாண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று ஏற்படுகிறது.

சந்திர கிரகணம்
கடைசியாக இந்தியாவில் கடந்த நவம்பர் 19, 2021இல் சந்திர கிரகணம் தெரிந்தது. இருப்பினும், அந்த சமயம் அது முழு சந்திர கிரகணமாக இல்லாமல் பகுதி சந்திர கிரகணமாகவே இருந்தது. இப்போது மீண்டும் நமக்குச் சந்திர கிரகணத்தைப் பார்க்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. இதையும் நீங்கள் மிஸ் செய்துவிட்டால்.. அடுத்து அக்டோபர் 28, 2023 வரை காத்திருக்க வேண்டும்.

ரத்த நிலா
சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவே பூமி வரும்போது, அதுவே சந்திர கிரகணம் என அழைக்கப்படுகிறது. சந்திரன் பூமி சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படும்.. இந்த கிரகணத்தின் போது சந்திரனை பிளட் மூன் என அழைப்பார்கள். ஏனென்றால் அப்போது சந்திரன் ரத்தச் சிவப்பு நிறத்தில் மாறிவிடும். இதை நாம் பூமியில் இருந்தபடி பார்க்கலாம்.

வெறும் கண்களால்
ஆனால், இதை வெறும் கண்ணால் பார்க்கலாமா? ஏனென்றால் சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு சூரிய கிரகணம் ஏற்பட்ட போது, அதை வெறும் கண்களால் கண்டிப்பாகப் பார்க்கக் கூடாது என ஆய்வாளர்கள் எச்சரித்து இருந்தனர். ஏனென்றால் சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதா கதிர்கள் நமது கண்களைப் பாதிக்கும் ஆபத்து உள்ளது. இதன் காரணமாகவே வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்றார்கள்.

ஆபத்தானதா
அதேநேரம் நிலவில் இருந்து வரும் கதிர்கள் சூரிய கதிர்கள் அளவுக்குத் தீவிரமானவை இல்லை. எனவே, சூரிய கிரகணத்தைப் போல இல்லாமல் சந்திர கிரகணத்தை நாம் வெறும் கண்ணால் பார்க்கலாம். இதனால் நமக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படப் போவதில்லை. இது முற்றிலும் பாதுகாப்பானது.. இருந்தாலும் உங்களுக்கு எதாவது தயக்கம் இருந்தால்... நேரடியாகப் பார்க்காமல், டெலஸ்கோப் உதவியுடன் அதை நீங்கள் இன்னும் கூட தெளிவாகப் பார்க்க முடியும்.

எங்குத் தெரியும்
2022ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் உலகின் பல பகுதிகளில் தெரியும். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ரஷ்யா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா பகுதிகளில் இந்த சந்திர கிரகணம் தெளிவாகத் தெரியும். அதேநேரம் இந்தியாவில் இந்த சந்திர கிரணம் பகுதி சந்திர கிரணமாகவே தெரிய உள்ளது. சென்னையிலும் கூட இது பகுதி சந்திர கிரகணமாகவே தெரிய உள்ளது.

நேரம்
இந்த அற்புதமான முழு சந்திர கிரகணம் நிகழ்வு இன்று மாலை 3:46 மணிக்குத் தொடங்கும். மாலை 4.29 மணி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பகுதி சந்திர கிரகணம், அதாவது சூரியனைப் பூமி மறைக்கத் தொடங்கும் நிகழ்வு பிற்பகல் 2:39 மணிக்கே தொடங்கிவிடும். மாலை 5:11 வரை இந்த நிகழ்வு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னையில் சந்திர கிரகணம் மாலை 5:39 மணிக்குத் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications