உதயநிதி பதவியேற்பில் பாசமான பாலு மாமா மிஸ்ஸிங்! அதிருப்தி? கூடவே கூட்டிட்டு போனாரே! இப்போ என்னாச்சு?
சென்னை : அமைச்சரவை மாற்றத்தின்போது பதவி கிடைக்காததால் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் பலர் அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவும் கடுமையாக அப்செட் ஆனதாகக் கூறப்படுகிறது.
இந்த அமைச்சரவை மாற்றத்தில் தனது மகனும், மன்னார்குடி தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக எம்.எல்.ஏவாக இருப்பவருமான டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவியை எதிர்பார்த்தாராம் டி.ஆர்.பாலு.
ஆனால், ஏற்கனவே இருக்கும் அமைச்சர்களில் ஒருவரையும் தூக்குவதற்கு முதல்வர் ஸ்டாலின் விரும்பவில்லை. உதயநிதி ஸ்டாலின் மட்டுமே அமைச்சரவையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால், டிஆர் பாலு அப்செட் ஆனதாகவும், அதன் காரணமாகவே, பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

டிஆர் பாலு மிஸ்ஸிங்
உதயநிதி ஸ்டாலின், அமைச்சராகப் பதவியேற்ற விழாவில், திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்கவில்லை. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அவர் டெல்லியில் இருந்ததால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், கட்சியின் முன்னணி தலைவர்கள் அனைவரும் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் டிஆர் பாலு பங்கேற்காதது சலசலப்புகளை ஏற்படுத்தியது.

அதிருப்தி?
தனது மகனும், மன்னார்குடி தொகுதியில் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருப்பவருமான திமுக ஐடி விங் செயலாளர் டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தார் டிஆர் பாலு. ஆனால், ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களில் யாருக்குமே அமைச்சரவையில் இடம் தரப்படவில்லை. அடுத்து அமைச்சரவை மாறும்போதாவது, தனது மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் எனக் கருதினார் டிஆர்.பாலு.

ஸ்டாலினின் குட்புக்
அதற்கேற்ற வகையில், டிஆர்பி ராஜாவும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் குட்புக்கில் இடம்பெற்று வந்தார். பிடிஆர் கவனித்த ஐடி விங் செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார் டிஆர்பி ராஜா. செப்டம்பர் மாதத்தை திராவிட மாதம் என மாதம் முழுவதும் விழா நடத்தி முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை உரையாட வைத்தார். மேலும் தமிழக அரசின் மாநில திட்டம் குழு உறுப்பினராகவும், தமிழக சட்டப்பேரவையின் மதிப்பீட்டுக் குழு தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார் டிஆர்பி ராஜா.

காட்டமாக ட்வீட்
எந்த பிரச்சனைகளும் எழாமல் சிறப்பாக பணியாற்றி முதல்வரின் கவனம் ஈர்த்து வந்த நிலையிலும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை. இது டிஆர்பி ராஜாவின் ஆதரவாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைப்பது ஒரு அமைச்சராலேயே தட்டிப்போனதாக கூறப்படுகிறது. இதையொட்டியே சமீபத்தில், "ஒரு கட்சி மேடையில் இருந்துகொண்டே இன்னொரு கட்சிக்கு தீப்பந்தம் பிடிப்பதில் டபுள் டிகிரி! யார் இந்த பொழப்பை பெருமையாக சுமக்கும் அந்த பூமர் அங்கிள்?" என காட்டமாக ஒரு ட்வீட்டை பதிவிட்டிருந்தார் டிஆர்பி ராஜா.

பாலு வருத்தம்
எனினும், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பதவியேற்ற அன்று, ஐடி விங் சமூக வலைதளங்களில் சிறப்பாகப் பணியாற்றியது. டிஆர்பி ராஜாவும், உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை விமர்சித்து ட்வீட் செய்திருந்தார். ஆனால், டி.ஆர்.பாலு, தனது மகனுக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை என்ற வருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே அவர் உதயநிதி ஸ்டாலினின் பதவியேற்பு விழாவிலும் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

உதயநிதி - டிஆர் பாலு
இத்தனைக்கும் உதயநிதி ஸ்டாலினோடு பல ஆண்டு காலமாக மிகவும் நெருக்கமானவர் டி.ஆர்.பாலு. டிஆர் பாலுவை பொது மேடைகளிலேயே 'மாமா' என்று பாசமாக அழைப்பார் உதயநிதி. உதயநிதிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என வலியுறுத்துபவர் பாலு. சமீபத்தில் கூட, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு அஞ்சலி செலுத்த, உதயநிதி ஸ்டாலினையும் அழைத்துக்கொண்டு சென்றார் பாலு. உதயநிதியை தேசிய அளவில் கவனப்படுத்த வேண்டும் என்பதற்காகவே டி.ஆர்.பாலு, அவரையும் அழைத்துச் சென்றதாகப் பேசப்பட்டது.

வருத்தம்
இப்படியாக, உதயநிதி மீது பாசம் கொண்ட டிஆர் பாலு, அவர் முதல்முறையாக அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்ட விழாவையே புறக்கணித்தது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் காரணமெல்லாம் சும்மா ஒப்புக்குச் சொல்வது தான், தன் மகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்காததில் ஏக வருத்தத்தில் இருக்கிறார் பாலு என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.












Click it and Unblock the Notifications