கல்வி உதவித் தொகையை ஒரு செலவாக பார்க்காதீர்! மத்திய அரசுக்கு முஸ்லீம் மாணவர் பேரவை வேண்டுகோள்!
சென்னை: கல்வி உதவித் தொகையை ஒரு செலவாக மத்திய அரசு பார்க்கக்கூடாது என இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கின் மாணவர் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.
PRE METRIC SCHOLARSHIP இல்லை என்று ஒன்றிய அரசு அறிவித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐயூஎம்எல் -ன் முஸ்லீம் மாணவர் பேரவை விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
முஸ்லிம் லீக் கோரிக்கை
காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கோரிக்கையை ஏற்று அன்று அமைக்கப்பட்ட சர்சார் கமிட்டி தனது பரிந்துரையில் சிறுபான்மையினர் உயர் கல்வி பயில்வோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மேலும் பள்ளி கல்வியை பாதியில் நிறுத்தும் (இடை நிற்றல்) எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
சிறுபான்மை சமூகங்கள்
குறிப்பாக சிறுபான்மை சமூகங்கள் ஆன கிருஸ்துவர்கள், பார்ஸிக்கள் , ஜெய்னர்கள், சீக்கியர்களை விட முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி நிலை மிகவும் மோசமாக உள்ளது என்பதை சுட்டிக் காட்டி பள்ளி கல்வியை ஊக்குவிக்கவும், இடைநிறுத்ததை தடுக்கவும் PRE METRIC SCHOLARSHIP உருவாக்கப்பட்டது. இதில் முஸ்லிம்கள் கிருஸ்துவர்கள், பார்ஸிக்கள், ஜெய்னர்கள், சீக்கியர்கள் என அனைத்து சிறுபான்மையினர் பயன்பெறுகின்றனர். தற்போது அது 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இல்லை என்று ஒன்றிய அரசு அறிவித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
முஸ்லிம் மாணவர் பேரவை
முஸ்லிம் மாணவர் பேரவை இதுவரை வழங்கப்பட்டு வந்த தொகையை உயர்த்த வேண்டும், குறிப்பாக மக்கள் தொகை 2001 ஆம் ஆண்டு கணக்கீட்டின் கீழ் வழங்கப்பட்டு வந்த பயனாளிகளின் எண்ணிக்கை உயர்த்தி தர வேண்டும், அரசு பரவலாக விளம்பரம்படுத்தி பயன் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும், தனியார் பள்ளிகளில் இதற்கென தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முஸ்லிம் மாணவர் பேரவை தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் தற்போது ஒன்றிய அரசு 1 முதல் 8 வரை உதவித் தொகையை நிறுத்தியிருப்பது சிறுபான்மை மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது.
செலவாக கருதாமல்
கல்வி உதவித்தொகை வழங்குவது என்பது ஒரு அரசு செலவாக கருதாமல் எதிர்கால நல் வாழ்விற்கான முதலீடாக கருத வேண்டும். எனவே ஒன்றிய அரசு pre matric scholarship உதவித் தொகையை மீண்டும் வழங்க வேண்டுமென முஸ்லிம் மாணவர் பேரவை கோரிக்கை வைக்கிறது.