"எச்சரிக்கிறேன்.. அருகதை இல்லை.." சசிகலா சொன்ன அந்த ஒரு வார்த்தை.. பொங்கி எழுந்த ஜெ.தீபா! பரபர ஆடியோ
சென்னை: ஜெ. தீபா மீதும் அவரது தாயார் மீதும் சசிகலா சில அதிர்ச்சி குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தார். இதற்கு விளக்கமளித்துள்ள ஜெ. தீபா, சசிகலாவை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். கடந்த முறை சட்டசபை கூடும்போது, இந்த அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் ஜெயலலிதா மரணம் தொடர்பாகப் பல முக்கிய தகவல்கள் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக விசாரணையின் போது பெங்களூர் சிறையில் இருந்த சசிகலா அங்கிருந்தபடி எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குமூலம் குறித்த தகவல்களும் இருந்தது.
அரசியலே எனக்கு பிடிக்கவில்லை.. தமிழகத்தில் இனி அதிமுகவே இருக்காது.. போயஸ் கார்டனில் ஜெ தீபா பேட்டி
சசிகலா பகீர்
அதில் சசிகலா, "ஜெயலலிதா கடைசி வரை ஜெ.தீபா மீது நல்ல மதிப்பு கொண்டிருக்கவில்லை. ஜெ தீபா அவரது தாயைப் போலவே நடந்து கொள்கிறார் எனப் பல முறை ஜெயலலிதா என்னிடம் சொல்லியுள்ளார். இதன் காரணமாகவே ஜெ.தீபா மீது ஜெயலலிதாவுக்கு நல்ல மதிப்பு ஏற்படவில்லை.நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது, ஜெ. தீபாவின் தாயார் விஜயலட்சுமி ஜெயலலிதாவின் நன்மதிப்புக்குக் கெடுக்கும் வகையில், உயிருக்கு ஆபத்து, பாதுகாப்பு தேவை எனப் பொய் புகார் கொடுத்தார். மேலும், அவர் கருணாநிதி, வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோரை சந்தித்து ஜெயலலிதாவுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளார். இதேபோல ஜெ.தீபாவும் உள்ளதால் அவரிடம் இருந்து ஜெயலலிதா விலகி இருந்தார்" என்று தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.
அருகதை இல்லை
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் ஜெ தீபா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "சசிகலா சொல்வதெல்லாம் உண்மை.. உண்மையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று இங்கு அனைவரும் நம்புவதாகத் தெரிகிறது. அப்படி அவர் உண்மையை மட்டுமே சொல்லும் நபராக இருந்தால்.. ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் என்பதே எழுந்திருக்காது. எனது தாய் விஜயலட்சுமி... அவரைப் பற்றிப் பேச எங்கள் குடும்பத்திற்கு எந்த ஒரு தொடர்பும் இல்லாத சசிகலாவுக்கு எந்தவிதமான அருகதையும் இல்லை.
எச்சரிக்கிறேன்
இதை நான் எச்சரிக்கையாகவே அவரிடம் விடுக்கிறேன். எனது தாயைப் பற்றிப் பேச சசிகலாவுக்கு எந்த ஒரு உரிமையும் அருகதையும் இல்லை. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவிடம் டெலிகிராம் மூலம் புகார் கொடுத்தாக கூறுகிறார்கள். அது உண்மை தான். ஆனால் அது எங்கள் அத்தை ஜெயலலிதா மேல் இல்லை. சசிகலா மற்றும் அவரை சுற்றி இருப்பவர்களால் ஜெயலலிதாவுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதாலேயே அந்த டெலெகிராமை கொடுத்தோம். இதை மூத்த பத்திரிகையாளரிடம் கூட கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
உறவு முறிய என்ன காரணம்
எங்களுக்கும் எங்கள் அத்தை ஜெயலலிதாவுக்கும் இடையே இருந்த உறவில் பாதிப்பும் இல்லாமல் தான் இருந்தது. அவரது வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்தின்போது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகவே எங்கள் உறவு முறிந்தது. ஆனால் இதை மறைத்து.. முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் வேலையை சசிகலா செய்து வருகிறார். எங்களிடம் அப்போது எதுவுமே இல்லை.. நாங்கள் சாதாரண ஒரு நடுத்தர வருடத்தைச் சேர்ந்தவர்களாகவே வாழ்ந்து கொண்டிருந்தோம். சசிகலா சொல்வதைப் போல எங்கள் அம்மா கருணாநிதி சந்தித்ததே இல்லை
சட்ட ரீதியான நடவடிக்கை
வாழப்பாடி ராமமூர்த்தியை மட்டுமே ஒரே ஒருமுறை சந்தித்துள்ளேன்.. அதுவும் நான் தான் சந்தித்துள்ளேன், எனது அம்மா அவரை சந்தித்தது இல்லை.. அதுவும் நடராஜனின் வீட்டில் வைத்துத் தான் சந்தித்தேன். இப்படிப் பல சம்பவங்களை மாற்றி மாற்றிக் கூறி வருகிறார்.. உண்மை இப்படி இருக்கும் பொழுது எனது தாயாரைப் பற்றி இன்னொரு முறை சசிகலாவிடம் பேசக்கூடாது. துணிச்சல் இருந்தால் சசிகலா என்னிடம் வந்து எனது தாயாரைப் பற்றிப் பேசட்டும். நீங்கள் (சசிகலா) எந்த தவறும் செய்யவில்லை என்றால் அதை போலீசாரிடமும் தமிழக மக்களும் நிரூபியுங்கள்.. அதை விட்டுவிட்டு என்னைப் பற்றியும் எனது தாயாரைப் பற்றியும் தேவை இன்றி பேசக்கூடாது. எனது தாயார் பற்றி எனது அத்தை தவறாகக் கூறினார் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. இதுகுறித்து சசிகலா மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
எல்லாமே பொய்
எங்கள் அத்தைக்கு என்னைப் பிடிக்காது.. எனது சகோதரரை மட்டுமே பிடிக்கும் என்று சொல்வதெல்லாம் சுத்தப் பொய்.. மத்திய சிறைச்சாலையில் ஜெயலலிதா இருந்த போது, சென்று அவரை நானும் என் தம்பியும் ஒன்றாகவே சென்று சந்தித்தோம். எனவே சசிகலா சொல்லும் குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லை. சுதாகரன் திருமணம் நடந்த உடனேயே எனது தந்தை இறந்து போனார் அவரது இறப்பிலும் கூட மர்மம் நீடிக்கவே செய்கிறது.. அவர் எப்படி இறந்தார் என்பது இன்னுமே எங்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இப்படிப் பல சந்தேகங்கள் இருக்கிறது. உண்மையில் எங்கள் அத்தை மேற்கு மேல் ஏற்பட்ட அனைத்து களங்கங்களுக்கும் சசிகலாவும் அவரது உறவினர்களும் மட்டுமே காரணம்.
தனிப்பட்ட ஆதாயம்
அவர் மீது நான் மட்டும் சந்தேகம் எழுப்பவில்லை. ஒட்டுமொத்த மக்களும் அவரை சந்தேகத்துடனேயே பார்க்கிறார்கள். இவர்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றால் என்ன யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.. சிசிடிவி கேமராக்களை ஏன் ஆப் செய்தார்கள். சசிகலா அவரது தனிப்பட்ட ஆதாயத்திற்காகவே இது அத்தனையும் செய்துள்ளனர். அனைத்து உண்மைகளும் நிச்சயம் ஒரு நாள் வெளியே வரும். உண்மைகள் எப்போதும் மறைத்து வைக்க முடியாது. அதே நேரம் எனது குடும்பத்தைப் பற்றியும் எனது தாயார் குறித்தும் பேசிக் கொண்டிருந்தால் நான் அமைதியாக இருக்க மாட்டேன். இதற்குத் தொடர்பாகச் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன்" என்று அவர் அதில் பேசியுள்ளார்.