அத்தைக்கு எதிராக சதி செய்ய எனது தாய் கருணாநிதியை நேரில் சந்தித்தாரா? .. ஜெ தீபா பரபரப்பு தகவல்
சென்னை: என் தாய் விஜயலட்சுமி, முன்னாள் முதல்வர் கருணாநிதியை சந்தித்து எனது அத்தைக்கு எதிராக செயல்பட்டதாக சசிகலா தெரிவித்துள்ளார். உண்மையில் என் தாய் முன்னாள் முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்ததே இல்லை என ஜெ தீபா மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை கடந்த இரு தினங்களுக்கு முன்பு சட்டசபை வெளியானது. இது குறித்து அரசியல்வாதிகள் பல்வேறு கருத்துகளை கூறி வருகிறார்கள். இதில் ஆணையத்தின் கருத்துகளுக்கு பிறகு அதிக முக்கியத்துவம் கொடுப்பது சசிகலா கொடுத்த வாக்குமூலம்தான்.
இந்த வாக்குமூலத்தில் ஜெயலலிதாவை தனக்கு எப்படி தெரியும் என்பது முதல் அவர் இறந்த பிறகு நடந்தது வரை தேதியுடன் விளக்கியுள்ளார். இந்த வாக்குமூலத்தில் ஜெ தீபாவை ஜெயலலிதாவுக்கு பிடிக்கவே பிடிக்காது என சசிகலா தெரிவித்துள்ளார்.

விஜயலட்சுமி
ஜெ தீபாவின் தாய் விஜயலட்சுமி ஜெயலலிதாவுக்கு எதிராக சதி செய்துக் கொண்டிருந்தார். அவரை போல் ஜெ தீபாவும் இருக்கிறார் என அக்கா அடிக்கடி என்னிடம் சொல்லியதுண்டு. இதனால் ஜெ தீபாவிடம் இருந்து அக்கா விலகியே இருந்தார். அதற்கு காரணம் நான்தான் என எண்ணிக் கொண்டு ஜெ தீபா காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் என் மீது பொய் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

பிரதமர்
ஜெ தீபான் தாயார் விஜயலட்சுமி பிரதமராக இருந்த நரசிம்மராவை சந்தித்து அக்காவின் நன்மதிப்பிற்கு கேடு விளைவிக்கும் வகையில் உயிருக்கு ஆபத்து எனவும் பாதுகாப்பு தேவை என்றும் பொய் புகார் அளித்தார். அது போல் திமுக தலைவராக இருந்த கருணாநிதி மற்றும் காங்கிரஸ் தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோரையும் சந்தித்து அக்காவுக்கு எதிராக செயல்பட்டார் என சசிகலா வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

தீபக் மீது நல்ல அபிப்ராயம்
சசிகலா ஜெ தீபக் குறித்து நல்லவிதமாகவே கூறியுள்ளார். ஜெ தீபக் தனது அண்ணன் ஜெயராமனை போன்றவர் என அக்கா அடிக்கடி கூறுவார். தீபக் எப்போதும் அக்காவுடன் அனுசரணையாக இருந்தார். நானும் அவரும் சேர்ந்துதான் அக்காவுக்கு வீட்டில் செய்ய வேண்டிய சடங்குகளையும் மெரினாவில் செய்ய வேண்டிய சடங்குகளையும் செய்தோம் என சசிகலா தெரிவித்துள்ளார்.

ஜெ தீபா மறுப்பு
இதை ஜெ தீபா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் எனது தாய் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியை நேரில் சந்தித்ததே கிடையாது. நாங்கள் அவரை இதுவரை டிவியில்தான் சந்தித்திருக்கிறோம் என தீபா மறுப்பு தெரிவித்துள்ளார். அது போல் சசிகலா உண்மையை மறைத்து பொய் தகவல்களை தெரிவித்துள்ளார் என்றும் தீபா குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications