"அவர் மன்னிப்பே கேட்கலையே".. ஜெய் பீம் இயக்குனர் விளக்கம்.. காயத்திரிக்கு நெட்டிசன்கள் பரபர பதில்!
சென்னை: ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த. செ ஞானவேல் அளித்த விளக்கம் குறித்து பாஜக நிர்வாகி காயத்திரி ரகுராம் தெரிவித்த இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த. செ ஞானவேல் படத்தின் சர்ச்சை குறித்து இன்று விளக்கம் அளித்தார். எந்த ஜாதியினரையின் புண்படுத்தும் வகையில் காட்சிகள் வைக்கவில்லை என்று படத்தின் இயக்குனர் த. செ ஞானவேல் விளக்கம் அளித்துள்ளார்.
4 KM தூரம் நின்ற வாகனங்கள்; முடிவு தெரியாமல் கலைய மறுத்த மக்கள்; ஸ்தம்பித்த சென்னை -பெங்களூர் ஹைவே!
1995 காலத்தைப் பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கமே அன்றி, குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக அதைக் காட்ட வேண்டும் என்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல. இந்த காட்சி யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.
விளக்கம்
யாரும் கேட்பதற்கு முன்பே, அந்த காலண்டர் படம் மாற்றப்பட்ட பிறகு, எங்களுக்குத் தனிப்பட்ட உள்நோக்கம் எதுவும் இல்லை என்பது எல்லோருக்கும் புரியும் என்று நம்பினேன். இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்திற்கு சூர்யா அவர்களைப் பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது, என்று இயக்குனர் ஞானவேல் விளக்கம் அளித்துள்ளார்.
காயத்திரி ரகுராம்
இந்த நிலையில் இயக்குனரின் விளக்கம் குறித்து நடிகையும் பாஜக நிர்வாகியுமான காயத்திரி ரகுராம் செய்துள்ள ட்வீட்டில், இயக்குனர் சொன்ன இந்த பொன்னான வார்த்தைகளை சூர்யா சொல்லி இருக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறேன். மாறாக அவர் தனது ரசிகர்ளுக்கு நன்றி சொல்லி, வன்னியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டார். மன்னிப்பதை விட, மன்னிப்பு கேட்கிறார்கள் தான் பெரிய மனிதர்.
மன்னிப்பு
இயக்குனர் இப்படி மன்னிப்பு கேட்டதை வரவேற்கிறேன். இனிமேலாவது சூர்யாவும் குடும்பத்தினரும் தங்கள் திரைப்படத்தை விளம்பர நோக்கத்திற்காக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். அதோடு இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த வார்த்தையே இல்லை
ஆனால் ஜெய் பீம் இயக்குனர் த. செ ஞானவேல் தன்னுடைய விளக்கத்தில் எங்கும் மன்னிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. மாறாக வருத்தம் தெரிவிக்கிறேன் என்றே குறிப்பிட்டுள்ளார். இத்திரைப்பட ஆக்கத்தில் எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.
நெட்டிசன்கள் பதில்
இதன் பொருட்டு மன வருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் என் உளப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று இயக்குனர் குறிப்பிட்டு இருக்கிறார். இதையடுத்து நெட்டிசன்கள் பலர் காயத்திரி ரகுராமிற்கு இது தொடர்பாக பதில் அளித்து வருகிறார்கள். இயக்குனர் எங்கேயும் மன்னிப்பு கேட்கவில்லை. அவர் வருத்தம்தான் தெரிவித்து இருக்கிறார். அதேபோல் இதில் சூர்யா வருத்தமோ, மன்னிப்போ கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று பதில் அளித்து வருகிறார்கள்.