திமுக கூட்டணியில் 3 கட்சிகள் அப்செட்.. “சிதறப்போகுது”.. கொளுத்திப் போட்ட ஈபிஎஸ் டீம் மாஜி!
சென்னை : திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் அதிருப்தியில் இருக்கின்றன என கொளுத்திப் போட்டிருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
திமுக, அதிமுக, பாஜக என அனைத்துக் கட்சிகளும், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. கடந்த சில நாட்களாக கூட்டணி தொடர்பான பேச்சுகளும் அரசியல் அரங்கில் உலவி வருகின்றன.
யார் வலிமையான கூட்டணியை அமைப்பது என்பதில் திமுக - அதிமுக இடையே போட்டி தொடங்கியுள்ளது. தற்போதைய கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகக்கூடும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், திமுக கூட்டணி சிதறப் போகிறது எனக் கூறியுள்ளார்.
கோவை செல்வராஜ் விலகல் ஏன்? ஓபிஎஸ் அல்லது எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்காதது ஏன்?
கூட்டணி பேச்சுகள்
பாஜக தலைமை, 2024 எம்.பி தேர்தலுக்கு தமிழ்நாட்டில் கூட்டணி அமைப்பது பற்றிய பேச்சுகளை ஏற்கனவே தொடங்கி விட்டிருப்பதால், அரசியல் களத்தில் கட்சிகளிடையே கூட்டணி பற்றிய பேச்சுகள் வெளிப்படையாக எழுந்து வருகின்றன. திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணியைத் தொடர்ந்து வரும் நிலையில், அவற்றில் சில கட்சிகளை தங்கள் அணிக்குக் கொண்டு வர அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.
மெகா கூட்டணி
எடப்பாடி பழனிசாமி, மெகா கூட்டணி அமைக்கப்படும் என பேசி வருவதற்குப் பின்னணியில், திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதும் தான் நோக்கம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஆனால், விசிக தலைவர் திருமாவளவனும் சரி, காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரியும் சரி, அதிமுக கரைந்துபோய்விட்டது என்கிற ரீதியில் பேசி வருகின்றனர். இந்நிலையில், திமுக கூட்டணியில் சில கட்சிகள் அப்செட்டில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் ஈபிஎஸ் அணியின் ஜெயக்குமார்.
காமாலை கண்ணுக்கு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "காமாலை கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரிவது போன்று சிலர் அங்கும் இங்கும் பதவி சுகத்திற்காக செல்வார்கள். ஆனால் எம்.ஜி.ஆரின் உண்மையான தொண்டர்கள் ஒருவர் கூட கட்சியை விட்டு வெளியேறவில்லை. அதிமுக, தொண்டர்களின் கட்சி. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும்.
திமுக கூட்டணியில் குழப்பம்
நாடாளுமன்ற தேர்தலிலும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறுவது நிச்சயம். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அதிருப்தியில் இருக்கின்றன. அந்தக் கூட்டணியில் உள்ள 11 கட்சிகளும் கட்டி வைத்துள்ள நெல்லிக்காய் மூட்டை. அதை அவிழ்த்து விட்டால் சிதறிப் போய்விடும். திமுக கூட்டணி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்குள் தேய்ந்து போய்விடும்." எனத் தெரிவித்துள்ளார்.
பொங்கல் திட்டம்
மேலும் பேசிய ஜெயக்குமார், பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. நெசவாளர்களின் துயரத்தை போக்க எம்.ஜி.ஆர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். அதனை ஜெயலலிதா கடைப்பிடித்தார். இந்த திட்டத்தின் காரணமாக நெசவாளர்கள் பயனடைந்தனர்.
5,000 ரூபாய் வழங்க வேண்டும்
அதேபோன்று கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா காலகட்டத்தில் பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கியபோது குறை கூறிய திமுக தற்போது ஆட்சிக்கு வந்தபின் ரூ.1000 மட்டும் வழங்கினால் போதும் என்று நினைக்கிறது. இதனால், கரும்பு, மஞ்சள், பச்சரிசி, வெல்லம் போன்றவற்றை விளைவித்த ஏழை விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். விவசாய தொழிலுக்கு மூடுவிழா செய்துவிட்டு ஏழைகள் வயிற்றில் அடிக்கக்கூடாது. எனவே அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.