இந்த 3 பேரையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்... அதிமுக தலைமைக்கு ஜெ. உதவியாளர் பூங்குன்றன் யோசனை..!
சென்னை: எம்.ஜி.ஆர். காலத்து சீனியர்களான சைதை துரைசாமி, ஆதி ராஜாராம், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகிய மூவருக்கும் அதிமுகவில் முக்கியப் பதவி கொடுக்கப்பட வேண்டும் என ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உற்சாகம் என்ற டானிக் தான் அதிமுகவினரின் இன்றைய தேவை என அவர் கூறியிருக்கிறார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆன்மிகம் பக்கம் நாட்டம் செலுத்தத் தொடங்கியுள்ள பூங்குன்றன் அவ்வப்போது இது போன்று அதிமுக தலைமைக்கு யோசனை கூறி வருகிறார்.
அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில்;
இந்த வாரம் இவரா?? கடைசியில் இருப்பதில் போட்டியிடுபவர் பட்டியல்
எல்லோரும் சமம்
ஆளுங்கட்சியாக இருப்பது என்பது வேறு. எதிர்க்கட்சியாக இருப்பது என்பது வேறு. எதிர்க்கட்சியிலிருந்து ஆளுங்கட்சியாக வர வேண்டுமென்றால் கசப்பான நடவடிக்கைகளை எடுத்துதான் ஆகவேண்டும். எதிர்க்கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்பதை கட்டாயமாக்கினால் தான் கழகத்தின் வளர்ச்சிக்கு நல்லது. பதவி இல்லாதவருக்கு பதவி கொடுங்கள். தொண்டர்களை சந்தியுங்கள். கருத்துக்களை கேளுங்கள். அவர்கள் சொல்லும் நல்லவற்றை நடைமுறைப் படுத்துங்கள். முக்கியமாக எல்லோரையும் சமமாக பாருங்கள்.
நிறைய எதிர்பார்ப்பு
தொண்டர்கள் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். எதிர்பார்ப்பு குறைய குறைய குழப்பங்கள் அதிகரிக்கும். அதற்குள் அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது. ஒட்டு மொத்த தொண்டர்களும் எதிர்பார்ப்பது கழகத்தின் கம்பீரம் ஒரு போதும் குறையக் கூடாது என்பதுதான். ஒன்று சேர்ந்தால் வலிமையாகுமா? பழைய கம்பீரம் எப்படியாவது திரும்ப கிடைக்குமா? ஒன்று சேரமாட்டார்களா? யாராவது எதையாவது செய்யமாட்டார்களா? இப்படி தொண்டர்கள் அங்கலாய்க்கிறார்கள்.
குமுறல்
பலர் என் பதிவுகளை பார்த்து நான் விமர்சனம் செய்வதாக நினைக்கிறார்கள். சிலர் குழப்புவதாக நினைக்கிறார்கள். என் பதிவுகள் கழகம் வலிமையாக இருக்க வேண்டும் என்பதற்கான ஆலோசனையே தவிர விமர்சனம் அல்ல. துதி பாட நினைப்பவர்களுக்கு என் பதிவுகளை பார்த்து இவருக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை என்று திட்டத் தோன்றும். கழகம் வலிமை பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது நல்ல ஆலோசனையாகத் தோன்றும். நான் என் மனதில் இருப்பதை பதிவிடவில்லை, தொண்டர்களின் குமுறலைத்தான் பதிவிடுகிறேன்.
நம்பிக்கை விதை
அம்மாவின் பாசறையில் பயின்ற எனக்கு நீங்கள் அனைவரும் ஒன்றுதான். இவர் வேண்டாதவர், இவர் வேண்டியவர் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. என்னை வசைபாடியவர்களுக்கும் நான் உதவிகளை செய்திருக்கிறேன். எனக்கு வேண்டாதவர் என்று பார்த்ததைவிட இவர் கட்சிக்கு தேவையானவர் என்பதைத்தான் நான் பார்த்தேன். நீங்களும் அப்படித்தான் பார்க்க வேண்டும். சமீபத்தில் கும்பகோணம் சென்றிருந்தேன். தொண்டர் ஒருவரை சந்தித்தேன். அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் இறந்த பிறகு இன்று வரை மாவட்டச் செயலாளர் போடவில்லை என்று வருத்தப்பட்டார். மாவட்ட செயலாளர் இல்லாமல் தேர்தலை சந்தித்தால் எப்படி? இப்படி சொல்ல நிறைய இருக்கிறது. உங்களுக்கே தெரியும். தொண்டர்களின் உள்ளத்தில் நம்பிக்கையை விதையுங்கள்.
ஆர்வமிக்கவர்
அனுபவமும், அறிவும் நிறைந்த சைதை துரைசாமி அவர்களுக்கு தலைமைக்கழகத்தில் உயர்ந்த பதவியை கொடுத்து டெல்லி தொடர்புகளை பார்க்கச் சொல்லலாம். அவரிடம் உள்ள தொடர்புகளை வைத்து கழகத்திற்கு உதவுவார். JCD பிரபாகரன் அவர்களுக்கு தலைமை நிலையச் செயலாளர் பதவி கொடுங்கள். நுணுக்கமான அறிவு கொண்ட பிரபாகரன் அவர்கள் தலைமைக் கழகத்திலேயே முழுநேரமும் இருந்து பணியாற்றும் ஆர்வம் கொண்டவர். அற்புதமான ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவார்.
வழி விடுங்கள்
எனக்கு தெரிந்து ஆளும் கட்சியை பயமில்லாமல் விமர்சனம் செய்யும் ஆதி ராஜாராம் போன்றவர்களை ஊக்குவியுங்கள். இல்லை இவர்களை விட திறமையானவர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு பதவி கொடுங்கள். பதவியை பிடுங்கி தாருங்கள் என்று சொல்லவில்லை இருக்கும் பல பதவிகளில் ஒன்றை வைத்துக்கொண்டு மற்றதை இல்லாதவர்களுக்கு கொடுங்கள் என்றுதான் சொல்கிறேன். இளைஞர்களுக்கும் வழி விடுங்கள்.