4 ஆண்டு விசாரணை... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல்
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டது குறித்து தனி நபர் ஆணையம் நடத்திய விசாரணையின் இறுதி அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் இயங்கி வந்த காப்பர் உருக்கு ஆலையால் அப்பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட கொடிய பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி பல நாட்களாக அப்பகுதி மக்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துப்பாக்கிச்சூடு
இந்த போராட்டத்தில் ஏராளமான எதிர்க்கட்சிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர். தேசியளவில் கவனம் ஈர்த்த இந்த போராட்டத்தின் 100 வது நாளான மே 22 2018 அன்று ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2 பெண்கள் 13 பேரை காவல் துறை சுட்டுக்கொன்றது நாட்டையே அதிர வைத்தது.

அருணா ஜெகதீசன் ஆணையம்
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசால் அமைக்கப்பட்டது. கடந்த 2018 ஜூன் 4 ஆம் தேதி தொடங்கப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் உறவினர்கள், போராட்டக்குழுவினர், தூத்துக்குடி மக்கள், நேரடி சாட்சிகள், மறைமுக சாட்சிகள், போலீசார் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இடைக்கால அறிக்கை
பல்வேறு கால நீட்டிப்புகளை கடந்த சுமார் 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த விசாரணை நிறைவடைந்ததை அடுத்து கடந்த ஆண்டு மே 14 ஆம் தேதி இடைக்கால அறிக்கையை அருணா ஜெகதீசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்தார். இதனை தொடர்ந்து ஆணையத்தின் விசாரணை காலம் கால அவகாசம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இறுதி அறிக்கை தாக்கல்
இந்த நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தனிநபர் விசாரணை ஆணைய தலைவர் நீதிபதி அருணா ஜெகதீசன், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications