அண்ணே! நீங்களும் ஸ்டாலினும் கூடதான் முதல் தேர்தலில் தோற்றீர்கள்.. கேசிஆருக்கு அண்ணாமலை பதிலடி
சென்னை: தெலுங்கானா சட்டசபையில் தன்னை முதல்வர் சந்திரசேகர ராவ் கலாய்த்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகம், தெலுங்கானா, கேரளா, மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட மாநில முதல்வர்கள் மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அது போல் அந்தந்த மாநில பாஜகவும் அந்த மாநில அரசுக்கு கிடுக்கிப்பிடி கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் வைத்து வருகிறது.
அந்த வகையில் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசை கலைத்தது போல் தமிழகத்திலும் திமுகவிலிருந்து ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார் என பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு திமுகவில் ஏக்நாத் ஷிண்டே மட்டுமல்ல சாயாஜி ஷிண்டே கூட இல்லை என மூத்த நிர்வாகிகள் பதிலடி கொடுத்தனர்.
சொந்த சீட்ல தோத்துட்டு! ஸ்டாலின் ஆட்சியை அண்ணாமலை கலைப்பாரா? தெலுங்கானா சட்டசபையில் கலாய்த்த கேசிஆர்
பிரதமர் மோடி
இந்த நிலையில் அவ்வப்போது பிரதமர் மோடியை சந்திக்காமல் தவிர்ப்பது, பாஜகவை கடுமையாக விமர்சிப்பது உள்ளிட்டவைகளால் கோபம் கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் கேசிஆரை விமர்சித்திருந்தார். மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவுக்கு ஏற்பட்ட நிலைதான் கேசிஆருக்கு ஏற்படும் என அண்ணாமலை விமர்சித்திருந்தார்.
தெலுங்கானா
இந்த நிலையில் அண்ணாமலைக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சட்டசபையிலேயே பதிலடி கொடுத்துள்ளார். அதில் தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சியை கவிழ்க்க போவதாக பாஜக கூறுகிறது. தமிழகத்திலிருந்து கூட ஏக்நாத் ஷிண்டே வர போவதாக அண்ணாமலை சொல்கிறார். ஆனால் அவரால் அவரது சொந்த தொகுதியில் (அரவக்குறிச்சி) கூட வெற்றி பெற முடியவில்லை. இவர் தமிழகத்தின் ஆட்சியை கவிழ்க்க போவதாக கூறுகிறார்.
103 எம்எல்ஏக்கள் பலம்
எங்களுக்கு 103 (சொந்த கட்சி) + 7 (நட்பு கட்சி ) என 110 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். எங்கள் அரசை கவிழ்ப்போம் என அண்ணாமலை கூறுகிறார். இதுதான் ஜனநாயகமா என சரமாரியாக கேசிஆர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவுக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
நீங்கள் முதல் தேர்தலில் ஜெயித்தீர்களா
இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டரில் கூறுகையில், தெலுங்கானாவில் நடைபெறும் அனைத்து பிரச்சினைகளுக்கும் கேசிஆரின் குடும்ப ஆட்சியே காரணம். இந்த நிலையில் தெலுங்கானா சட்டசபையில் என்னை பற்றி பேசி கேசிஆர் நேரத்தை செலவிட்டுள்ளார். நீங்களோ (கேசிஆர்) தமிழக முதல்வர் ஸ்டாலினோ முதல் தேர்தலிலேயே வெற்றி பெறவில்லை என்பதை கேசிஆருக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். நமது பணிகள் மூலம் மக்களின் நம்பிக்கையை பெறுவதை இலக்காக கொண்டிருந்தால் தேர்தலில்களில் வெற்றி தோல்வி என்பதெல்லாம் ஒரு விஷயமாகவே இருக்காது. தெலுங்கானா மக்களின் நம்பிக்கையை முழுவதுமாக நீங்கள் (கேசிஆர்) இழந்துவிட்டீர்கள் என நான் நினைக்கிறேன் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.