14 வருட வழக்கு.. வாபஸ் பெற்ற வீரமணி! கொளத்தூர் மணி “ரிலாக்ஸ்” -பெரியார் கருத்து யாருக்கும் சொந்தமில்லை
சென்னை: தந்தை பெரியாரின் கருத்துக்களை தொகுத்து புத்தகங்களாக வெளியிட தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி திட்டமிட்ட நிலையில், அதை எதிர்த்து பெரியாரின் எழுத்துக்களும், கருத்துக்களும் தங்களுக்கே சொந்தம் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தற்போது அதனை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாட்டில் சுயமரியாதை கொள்கைகளையும், சாதி மத ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராக அடக்குமுறைகளை எதிர்த்தும் திராவிட கொள்கையை முன்வைத்து குரல் கொடுத்தவர் தந்தை பெரியார்.
தந்தை பெரியாரின் சுயமரியாதை கொள்கைகளின் விளைவாகவே தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் சாதி, மத ஒடுக்குமுறைகளும், பதற்றங்களும் குறைவாக இருந்து வருகிறது.
விடாது கறுப்பு! 150 பேர் உயிரை குடித்த குஜராத் மோர்பி ஆறு- 1979-ல் 2000 பேரை பலி கொண்டது- சாபமோ?
பெரியாரின் அரசியல்
இவர் பேசிய அரசியலையும் திராவிட கொள்கையையும் முன்வைத்தே தமிழ்நாட்டில் தற்போது ஆளும் திமுகவும், எதிர்க்கட்சியாக அதிமுகவும் உருவாக்கப்பட்டன. இவர் பேசிய கருத்துக்களை மையப்படுத்திய இன்றளவும் தமிழ்நாடு அரசியல் இயங்கி வருகிறது. அந்த அளவுக்கு தமிழ்நாட்டின் முற்போக்கு நிலைக்கும், சமத்துவத்தற்கும் பெரியார் ஆற்றிய பங்கு மகத்தானது.
கொளத்தூர் மணி திட்டம்
இந்த நிலையில், கொளத்தூர் மணியை தலைவராகக் கொண்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம், தந்தை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது 1925 ஆம் ஆண்டு முதல் 1938 ஆம் ஆண்டு வரை குடியரசு பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரைகளையும், கருத்துக்களையும் தொகுத்து புத்தகங்களாக வெளியிட திட்டமிட்டது.
கி.வீரமணி வழக்கு
இதனை எதிர்த்து கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வழக்குத் தொடர்ந்து இருந்தார். அதில், சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் செயலாளராக தான் இருந்து வருவதால் தந்தை பெரியாரின் எழுத்துக்களும், கருத்துக்களும் தங்களுக்கே சொந்தமானவை.
தடை விதிக்க கோரிக்கை
பெரியாரின் கருத்துக்களை வெளியிடுவதற்கான காப்புரிமை எங்களிடமே இருக்கிறது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் பெரியாரின் கருத்துக்களை புத்தகங்களாக தொகுத்து வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், புத்தகம் வெளியிட தந்தை பெரியார் திராவிடர் கழகத்துக்கு இடைக்கால தடை விதித்து இருந்தது.
நீதிபதி சந்துரு உத்தரவு
பின்னர் அந்த வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி சந்துரு "கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை என்று பிரச்சாரம் செய்தவர் தந்தை பெரியார். சமூகத்தில் மண்டிக்கிடந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். தனது கருத்துக்களும், எழுத்துக்களும், பேச்சுக்களும் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே பெரியாரின் நோக்கம்." என்று சொல்லி தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
கி.வீரமணி மேல்முறையீடு
தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து இருவர் நீதிபதிகள் அமர்வில் கி.வீரமணி மேல்முறையீடு செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதிகள் இப்ராஹிம் கலிஃபுல்லா, கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு "தந்தை பெரியார் தனது காப்புரிமையை யாருக்கும் எழுதி கொடுக்கவில்லை.
வாபஸ் பெற்ற வீரமணி
தந்தை பெரியாருடைய எழுத்துகளும் பேச்சும் பொது தளத்திற்கு வந்துவிட்டது." என்று கூறி தனி நீதிபதி உத்தரவில் தலையிட மறுத்துவிட்டனர். உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்தத வழக்கு நீதிபதி எஸ்சுந்தர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திராவிட கழக தலைவர் கி.வீரமணி சார்பில், இந்த வழக்கை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.