கள்ளக்குறிச்சி வன்முறை: "ஜாதி பார்த்து கைது செய்வதை எதிர்த்து போராட்டம்!" திருமாவளவன் பரபர அறிவிப்பு
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட தனியார் பள்ளி மாணவி மர்மமரணம் தொடர்பாக ஏற்பட்ட வன்முறையில் ஜாதி பெயரால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை கண்டித்து தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் 12ம் தேதி பிளஸ் 2 மாணவி இறந்தார். மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். மேலும் பள்ளி நிர்வாகம் சரியாக பதில் அளிக்கவில்லை எனக்கூறி தொடர்ந்து போராட்டம் நடந்தது.
கடந்த மாதம் 17 ம் தேதி போராட்டம் வன்முறையானது. பள்ளி முன்பு திரண்டிருந்த ஏராளமானவர்கள் பள்ளி வாகனம், போலீஸ் வாகனத்தை தீவைத்து எரித்தனர். ஆவணங்கள், சான்றிதழ்களையும் தீக்கிரையாக்கின. இந்த பிரச்சனை எல்லை மீறி சென்றதால் வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடரும் கைது நடவடிக்கை
வன்முறை தொடர்பாக கலெக்டர், எஸ்பி, டிஎஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். வழக்கு தொடர்பாக பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக 350 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 64 மாணவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

திருமாவளவனை சந்தித்த மக்கள்
இதற்கிடையே தான் வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்பில்லாத நபர்களை ஜாதியின் பெயரில் கைது செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் டிஜிபியிடம் புகார் அளிக்க கனியாமூர் மக்கள் சென்றனர். முதல்வர் உடனான ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்றதால் அவரை சந்திக்க முடியவில்லை. இதையடுத்து சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்துக்கு சென்று திருமாவளவனிடம் கோரிக்கை வைத்தனர்.

தொடர்பில்லாதவர்கள் கைது
இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி மாணவி சந்தேகப்படும் படியாக இறந்துள்ளார். இதுதொடர்பான போராட்டம் வன்முறையானது. சிறப்பு புலனாய்வு குழு அந்த வன்முறையில் துளியும் தொடர்பில்லாதவர்களை எல்லாம் வேட்டையாடி கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசின் போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டுள்ள மாணவர்கள் தவறாக கைது செய்யப்பட்டுள்ளனர். எண்ணற்ற பல தலித் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. 15 வயது மாணவன் 19 வயது என மாற்றி சிறையில் வைக்கப்பட்டுள்ளார். பள்ளியில் மீது நடந்த தாக்குதல்களில் தொடர்பில்லாதவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் தொடர்பில்லாதவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

ஆகஸ்ட் 13ல் ஆர்ப்பாட்டம்
பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களை சேர்ந்த தலித் மக்கள் டிஜிபியை சந்திக்க சென்னை வந்த நிலையில் அவரை சந்திக்க இயலவில்லை. நேர்மையான முறையில் விசாரணை நடைபெற வேண்டும். சாதியின் பெயரால் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். இதுதொடர்பாக ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications