கமலின் 'இந்து தீவிரவாதி' பேச்சை முன்வைத்து 'குளிர்காயும்' பாஜக?
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் இந்து தீவிரவாதி பேச்சை தங்கள் மீதான விமர்சனங்களை திசைதிருப்பும் ஒரு ஆயுதமாக பாஜக பயன்படுத்தி வருகிறது.
கமல்ஹாசன் கட்சி தொடங்கியது முதலே என்னுடைய களம் தமிழகம் என்றுதான் பேசி வருகிறார். தேசிய அளவிலான எந்த பிரச்சனைகளுக்கும் கமல்ஹாசனின் பதில் இதுவாகத்தான் இருந்தது.
பிரதமர் மோடி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில், சுதந்திர இந்தியாவில் ஒரு இந்து கூட தீவிரவாதி இல்லை என்றார். அதற்கு பதிலடியாக கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து.. காந்தியை கொலை செய்த கோட்சேதான் என்றார்.
பாஜகவுக்கு கை கொடுத்த கமல்
உடனடியாக பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இதனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டன. அதுவும் பிரதமர் நரேந்திர மோடியின் ரேடார், டிஜிட்டல் கேமரா, இ மெயில் பொய்கள் உச்சத்தில் இருந்த நேரத்தில் திருதிருவென விழித்த பாஜக பரிவாரங்களுக்கு இது வரப்பிரசாதம் போல் அமைந்துவிட்டது.
சோடா பாட்டில் கோஷ்டி
உச்சகட்டமாக தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என மிரட்டல் விடுத்தார். மன்னார்குடி ஜீயர் வகையறாக்கள் மீண்டும் சோடா பாட்டில் வீசுவோம்,நடமாட விட மாட்டோம் கோஷங்களை கையிலெடுத்துள்ளன.
பிரதமர் மோடி பதில்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சேடிஸ்ட் என்றும் விமர்சித்திருக்கிறார். அப்போது கூட திருவாய் திறக்காத பிரதமர் மோடி, கமல்ஹாசனுக்கு இப்போது உடனடியாக பதில் தருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாஜகவினர் இப்போது கமல்ஹாசனின் பேச்சைத்தான் கையில் எடுத்துக் கொண்டு கலகலப்பாக பொழுது போக்க ஆரம்பித்துள்ளனர்.
பாஜகவுக்கு நிம்மதி
லோக்சபா தேர்தல் பிரசாரங்கள், பேட்டிகளில் பிரதமர் மோடியின் உளறல்களை எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் கடுமையாக விமர்சித்து பாஜகவுக்கு மிகப் பெரும் நெருக்கடியை உருவாக்கின. இந்த நேரத்தில் கமல்ஹாசனின் பேச்சை முன்வைத்து இந்துக்களின் ஹோல்சேல் பிரதிநிதியாக பாஜக தம்மை உயிர்ப்பித்துக் கொள்ள மிகவும் மெனக்கெடுகிறது என்பதுதான் நிதர்சனம்.
அரசியல் கட்சிகள் மவுனம்
அதே நேரத்தில் மதச்சார்பின்மை பேசும் தமிழக அரசியல் கட்சிகள் கமல்ஹாசனுக்கு எந்த ஒரு ஆதரவும் தெரிவிக்கவில்லை. பாஜகவினருக்கு உதவும் வகையில்தான் கமல்ஹாசன் பேசியிருக்கிறார் என நினைப்பதாலேயே தமிழக அரசியல் கட்சிகள் கனத்த மவுனத்தை வெளிப்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது.