கட்சி துவங்குவதை தவிர்க்க.. "நாடகமாடுகிறாரா ரஜினிகாந்த்.." நிருபருக்கு நறுக் பதில் சொன்ன கமல்ஹாசன்
சென்னை: அரசியல் கட்சியை துவங்காமல் தவிர்க்க, உடல்நலப் பிரச்சினையைத் சொல்லி ரஜினிகாந்த் நாடகமாடுகிறார் என்று பேசப்படுகிறதே, என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அசத்தலாக பதிலளித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுக்க தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று திருச்சிக்கு வருகை தந்த அவருக்கு தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செய்தியாளர் சந்திப்பில், கமல்ஹாசன் பங்கேற்றார்.
ஊழல் புகார்
அப்போது தமிழகத்தில் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக கமலஹாசன் குற்றம் சாட்டிப் பேசினார். பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக கமல்ஹாசன் பதிலளித்தார். இதோ அந்த செய்தியாளர் சந்திப்பின் தொகுப்பை பாருங்கள்: திமுக சார்பில் ஆளுநரை சந்தித்து அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களை பட்டியலாக கொடுத்துள்ளார்கள். அதே போன்று நீங்கள் கூறக்கூடிய லஞ்ச குற்றச்சாட்டுகள் பற்றி ஆளுநரிடம் மனு அளிக்கலாமே, என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல் ஹாசன் உங்களிடம் கொடுத்தது அதற்கு சமம் என்று நினைக்கிறேன். நீங்கள் கொண்டு சென்று சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில் நான் இந்தப் பட்டியலை உங்களிடம் கொடுக்கிறேன், என்றார் கமல்ஹாசன்.
ரஜினிகாந்த் பற்றி பதில்
மற்றொரு நிருபர், ரஜினிகாந்த் கட்சி துவங்குவதை தவிர்ப்பதற்காக உடல்நலக் குறைவு என்று சொல்லி நாடகம் வருவதாக ஒரு பெரிய பேச்சு, இருக்கிறதே, அது உண்மையா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், நீங்கள் 'ஹேசியங்ககளை' எல்லாம் பதிலாகவோ, கேள்வியாகவோ என் வாயில் திணித்து விடாதீர்கள். தயவுசெய்து.. இது அவரது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம். அது அதுதான் முக்கியம் என்பதை நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன். செய்தி வந்தவுடனேயே நான் சொல்லிவிட்டேன். 40 ஆண்டு கால நண்பருக்கு நான் கூறக்கூடிய வாழ்த்துக்கள் என்பதெல்லாம், உடல்நிலை முதலில் சரியாக வேண்டும். அதற்கு பிறகு தான், எல்லாம் சரியாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
லஞ்சத்தை விட முடியாது
நீங்கள் லஞ்ச பட்டியலை வாசிக்கிறீர்கள். இதெல்லாம் பல காலமாக நடைமுறையில் இருக்கிறது. பொதுமக்கள் பெரும்பாலானோர் இதற்கு பழகிவிட்டனர். எனவே உங்கள் கொள்கை மக்கள் மத்தியில் சென்று சேரும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல் ஹாசன், மக்கள் வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டதால் அதை அப்படியே விட்டுவிட வேண்டுமா? கண்டிப்பாக மக்களிடம் நாங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு சென்று சேரும். லஞ்சம் இல்லாமல் செய்வதற்கு எளிதான வழி இருக்கிறது.
மாற்று யோசனை
மக்கள் வரிசையில் நின்று தங்களுக்கு தேவையான சேவைகளை பெறுவதுதான் தற்போதைய நடைமுறையில் உள்ளது. ஆனால் மக்களையே சேவைகள் சென்று சேர வேண்டும். கோரிக்கை வைக்காமல் மக்களிடம் அவர்கள் தேவைகளை நிறைவேற்றி கொடுக்கப்படும். எனவே இடைத்தரகர்களும் தேவைப்பட மாட்டார்கள் .லஞ்சமும் தேவைப்படாது. இதுதான் எங்கள் கொள்கையின் பிரதானம். இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.