சிகாகோ வீதி முதல் சோவியத் ரஷ்யா வரை... கமலின் தொழிலாளர் தின வாழ்த்து... பின்னணி என்ன
சென்னை: ‛‛சிகாகோ வீதிகளில் புறப்பட்டு சோவியத் ரஷ்யாவில் ஆக்க நெருப்பானது'' எனக்கூறி வித்தியாசமான முறையில் நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தொழிலாளர் தின வாழ்த்தை கூறியுள்ளார். இவரது இந்த வாழ்த்துக்கு பின்னணியில் பல உண்மைகள் மறைந்துள்ளன.
ஆண்டுதோறும் மே மாதம் முதல் நாள் தொழிலாளர் தினமாக கடைப்பிடித்து வருகிறோம். இதற்கு பின்னணியில் தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டங்களும், தியாகங்களும் உள்ளன.
அதாவது ஒரு காலக்கட்டத்தில் உலகின் பல நாடுகளில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 18 மணிநேரம் வரை தொழிலாளர்கள் வேலை வாங்கப்பட்டனர். இதனால் தொழிலாளர்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.
8 மணிநேர பணி முறை
இதற்கு எதிராக பல்வேறு நாடுகளில் தொழிலாளர்கள் போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் செய்து தங்களுக்கான உரிமையை மீட்டெடுத்தனர். குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் முதல் முறையாக 8 மணிநேர வேலை என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வெற்றியும் கண்டது. 18 ம் நூற்றாண்டின் இறுதியில் துவங்கிய இந்த போராட்டம் 19ம் நூற்றாண்டின் துவக்கத்திலும் தொடர்ந்தது. இந்த போராட்டங்களின் பலனாக தான் தற்போது தொழிலாளர்களுக்கான 8 மணிநேர பணி முறை நடைமுறையில் உள்ளது.
கமல்ஹாசன் வாழ்த்து
இந்நிலையில் மே மாதம் முதல் நாளான இன்று தொழிலாளர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொழிலாளர் தின வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தொழிலாளர் தின வாழ்த்து கூறியுள்ளார்.
சிகாகோ முதல் சோவியத் ரஷ்யா வரை
அதில், ‛‛சிகாகோ வீதிகளில் பொறியாய்ப் புறப்பட்டு, ஐரோப்பாவில் படர்ந்து, சோவியத் ரஷ்யாவில் ஆக்க நெருப்பாகக் கொழுந்துவிட்ட சர்வதேச தொழிலாளர் நாள் இயக்கம் இன்று உலகம் முழுமையும் தொழிலாளருக்கு பாதுகாப்பாய் நிற்கிறது. தொழிலாளர் இயக்கச் செயல்பாட்டாளர்களை வாழ்த்துகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
ஏன் இப்படி கூறுகிறார் கமல்
அதாவது 1886ம் ஆண்டு சிகாகோவில் நடந்த தொழிலாளர் போராட்டமும் ஹேமார்க்கெட் படுகொலை சம்பவமும் தொழிலாளர் போராட்டங்களின் மைல்கல்லாகும். அதன்பிறகு ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் போராட்டம் பரவியது. சோவியத் ரஷ்யாவில்(தற்போதைய ரஷ்யா) சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றத்தின் மூலம் மே ஒன்றாம் தேதியை தொழிலாளர் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதை தான் கமல் தனது டுவிட்டர் பதிவின் மூலம் குறிப்பிட்டு தொழிலாளர் தின வாழ்த்து கூறியுள்ளார்.