எனக்கு இன்னொரு முகம் இருக்கு.. நிர்வாகிகளுக்கு விருந்து கொடுத்து எச்சரித்த கமல்ஹாசன்
Recommended Video
சென்னை: கட்சி ஆரம்பித்த 14 மாதங்களில் முதல் முறையாக தேர்தலை சந்தித்த கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி நல்லதொரு துவக்கத்தை கண்டுள்ளது. இதற்கான நிர்வாகிகளுக்கு நேற்று விருந்து அளித்த கமல்ஹாசன், தீவிரமாக கட்சி பணியாற்றுபவர்களுக்கு பரிசும், ஏமாற்றுபவர்களுக்கு தண்டனையும் கட்டாயம் அளிப்பேன் என எச்சரித்தார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தார். இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டார். 37 தொகுதிகளில் மநீம போட்டியிட்டது. இதில் 14 லட்சத்து 74 ஆயிரத்து 916 வாக்குகளை கமலின் கட்சி பெற்றுள்ளது.
இந்த தேர்தலில் தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் வாக்கு வங்கியை இழந்த நிலையில், கட்சி தொடங்கப்பட்ட 14 மாதங்களில் 3.78 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது மக்கள் நீதி மய்யம். குறிப்பாக வடசென்னை, தென்சென்னை, கோவை, உள்ளிட்ட தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது.
ரஜினியை அழைத்த கையோடு.. மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமலுக்கும் அழைப்பு!
அசத்திய மநீம
இதேபோல் கோவை, திருப்பூர், நீலகிரி, தென் சென்னை, வடசென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர், சேலம், புதுச்சேரி என 11 தொகுதிகளில் 3வது இடத்தை பிடித்துள்ளது.
நிர்வாகிகளுக்கு விருந்து
இதனால் உற்சாகமாக உள்ள கமல்ஹாசன், ஞாயிற்றுக்கிழமை மதியம் கட்சி நிர்வாகிகளுக்கு விருந்து அளித்தார். அந்த விருந்தில் மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள், வேட்பாளர்கள், நிர்வாகிகள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஏமாற்றினார்கள்
அப்போது நிர்வாகிககளிடம் பேசிய கமல், நாம் நல்ல வாக்கு சதவீதம் பெற்று இருக்கிறோம். ஆனால் டெல்டா மாவட்டம், வடமாவட்டங்களில் வாக்குகளை மிகக் குறைவாக வாங்கி உள்ளோம். தேர்தல் முடிந்ததே என்று இல்லாமல் தினமும் மக்கள் பணியாற்றுங்கள். இந்த தேர்தலில் யார், வேலை செய்தார்கள், யார் வேலை செய்யாமல் ஏமாற்றினார்கள் என்பது எனக்கு தெரியும். அவர்களின் பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை. இனி அப்படி இருக்காதீங்க. என்னுடைய ஒரு முகத்தை பார்த்து உள்ளீர்கள். இன்னொரு முகத்தை நீங்கள் பார்த்ததில்லை.
பணியாற்றினால் பரிசு
அது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கும் முகம். நமது பொறுப்பு கூடி உள்ளது. 14 மாதத்தில் நம்மை மக்கள் இவ்வளவு வாக்குகள் கொடுத்து ஆதரித்து உள்ளார்கள். அதுக்கு ஏற்ற மாதிரி நாமும் நடக்க வேண்டியது அவசியம். இல்லை என்றால் கட்சியில் இருந்து நீக்கவும் தயங்க மாட்டேன். தீவிரமாக கட்சி பணியாற்றுபவர்களுக்கு பரிசும் ஏமாற்றுபவர்களுக்கு தண்டனையும் கட்டாயம் அளிப்பேன். மக்கள் நம் மீது வைத்த நம்பிக்கையை சரியாக பயன்படுத்தி அந்த நம்பிக்கையை அதிகப்படுத்துங்கள்" இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.