அண்ணன் சொல்லிட்டாரு.. தங்கச்சி முடிச்சுட்டாங்க! தொகுதி மறுவரையறை.. கனிமொழி எடுத்த திடீர் ஆக்சன்!
சென்னை: தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மத்திய அரசு கொண்டு வர உள்ள மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி நோட்டீஸ் வழங்கியுள்ளார். குறிப்பாக தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்கள் தென் மாநிலங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது
நாடாளுமன்றத்தில் நடைபெற்று வந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடர்ச்சியாக, இன்று முதல் மூன்று நாட்களுக்கு நாடாளுமன்ற சிறப்பு அமர்வு நடைபெற உள்ளது. இந்த சிறப்பு அமர்வில் மத்திய அரசு மூன்று முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்தி, அது தொடர்பாக விவாதித்து நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.

அதில் முக்கியமானதாக கருதப்படுவது அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்யும் 131வது திருத்த மசோதா ஆகும். இந்த மசோதாவின் மூலம் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029ஆம் ஆண்டு முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
131வது திருத்த மசோதா
அதே நேரத்தில், மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதைய 543 இடங்களிலிருந்து 850 ஆக உயர்த்தவும் முன்மொழியப்பட்டுள்ளது. இதற்காக தொகுதிகளை மறுவரையறை செய்யும் திட்டமும் இதில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகுதி மறுவரையறை திட்டம் மக்கள்தொகை அடிப்படையில் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளதால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.
மு.க. ஸ்டாலின்
மக்கள்தொகை கட்டுப்பாட்டில் முன்னிலை வகித்த மாநிலங்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் பல தரப்பினரிடமும் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாநிலம் முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கருப்புக் கொடி ஏற்றும் போராட்டமும், மசோதா நகலை எரிக்கும் போராட்டங்களும் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன.
கனிமொழி நோட்டீஸ்
இதன் மூலம் இந்த மசோதாக்களுக்கு எதிரான எதிர்ப்பை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், அரசியலமைப்பு (131வது திருத்த) மசோதா - 2026, ஒன்றியப் பிரதேசச் சட்டங்கள் திருத்த மசோதா - 2026 மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா - 2026 ஆகிய மூன்று மசோதாக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் கனிமொழி நோட்டீஸ் அளித்துள்ளார். இந்த நோட்டீஸ் மூலம் இந்த மசோதாக்களை விவாதிக்கும் போது திமுக தனது எதிர்ப்பை வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசு
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மத்திய அரசு கொண்டு வர உள்ள மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிராக எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
2026 சட்டசபை தேர்தல்
2026 சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், தொகுதி மறுவரையறை மற்றும் மக்களவை இடங்கள் அதிகரிப்பு தொடர்பான இந்த மூன்று மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகமாகும் முன்பே தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக தென் மாநிலங்களின் உரிமைகள் பாதிக்கப்படும் என்ற அச்சம் அதிகரித்துள்ளதால், இந்த விவகாரம் அடுத்த சில நாட்களில் நடக்கவிருக்கும் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தும் காரணியாக மாறும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications