'அமைதியான முதல்வரை கோபப்பட வைத்துவிட்டார்கள்'! நாட்டுப்புறக் கலைஞர்களுடன் கனிமொழி கொண்டாடிய பொங்கல்
சென்னை: எப்போதும் அமையான முறையில் பேசக்கூடிய முதலமைச்சரையே, தமிழ்நாடு பெயர் விவகாரத்தில் கோபப்பட வைத்த காரணத்தால் தான் அவர் சற்று கறாராக பேச வேண்டிய சூழல் உருவானதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
சென்னையில் நாட்டுப்புற கலைஞர்களுடன் பொங்கல் கொண்டாடிய கனிமொழி, அவர்களுக்கு புத்தாடைகள் வழங்கி மகிழ்ந்தார்.
தமிழ்நாட்டை தமிழ்நாடு என அழைக்கக் கூடாது எனச் சொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது என கனிமொழி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை அன்று எஸ்.பி.ஐ தேர்வு..தமிழர்களின் வேலைவாய்ப்பினை பறித்திடும் செயல் - கனிமொழி எம்.பி
நாட்டுப்புற கலைஞர்கள்
சென்னை சங்கமம் -நம்ம ஊரு திவிழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் நாட்டுப்புற கலைஞர்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடிய கனிமொழி எம்.பி., அவர்கள் தனது சொந்த நிதியின் மூலம் புத்தாடைகள் வாங்கிக் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் நாட்டுப்புற கலைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களது கலை நிகழ்ச்சிகள் குறித்து பாராட்டவும் செய்தார். இதனிடையே அப்போது செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி., தமிழர்களை யார் சீண்டிப்பார்க்க நினைத்தாலும் தமிழர்களுக்குள் இருக்கும் இன உணர்வும், சுயமரியாதையும் உணர்த்தப்படும் எனத் தெரிவித்தார்.
தனித்த அடையாளம்
மேலும், எப்போதும் அமையான முறையில் பேசக்கூடிய முதலமைச்சரையே, தமிழ்நாடு பெயர் விவகாரத்தில் கோபப்பட வைத்த காரணத்தால் தான் அவர் சற்று கறாராக பேச வேண்டிய சூழல் உருவானதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் தனித்த அடையாளங்களை அழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக தான் தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தச் சொன்னதை தாம் பார்ப்பதாக கனிமொழி எம்.பி. கூறினார்.
நாட்டுப்புற கலை
ஒவ்வொரு நாட்டுப்புற கலைஞருக்கும் இதுவரை வழங்கப்பட்ட ஒருநாள் மதிப்பூதியத்தை 2000 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாக முதல்வர் உயர்த்தி வழங்க இருப்பதாகவும் மேலும் சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் கலை பண்பாட்டுத்துறை சார்பில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்த அரசு முன் வந்திருப்பதாகவும் கனிமொழி எம்.பி.தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர்
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதி வளாகத்தில் கனிமொழி கலந்துகொண்ட பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சென்னை வடபழனியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவிலும் கனிமொழி கலந்துகொண்டார்.