வாட்டாள் நாகராஜை கன்னட திரையுலகம் கண்டிக்க வேண்டும்.. தாய்மொழி கூட்டமைப்பின் எஸ்.டி.குமார் கோரிக்கை
சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவில் தமிழ் திரைப்படங்களை ஓட விடமாட்டோம் என சொல்லும் வாட்டாள் நாகராஜை கன்னட திரையுலகம் கண்டிக்க வேண்டும் என தாய்மொழி கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
வாட்டாள் நாகராஜிக்கு, பெங்களூரைச் சேர்ந்த, தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ். டி. குமார் தனது கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: நேற்று சில கன்னட அமைப்புகள் கர்நாடக தமிழக எல்லை பகுதியில் மேகதாது அணை கட்ட தமிழக அரசு தடை ஏற்படுத்த கூடாது என்றும் கலசா பந்தூரி மகதாயி யோஜனா திட்டங்களை கர்நாடக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரியும் சாலை மறியல் நடத்தினர்.

என்ன காரணமோ தெரியவில்லை. கிருஷ்ணா நதி நீர் பிரச்சினையை மையப்படுத்தவில்லை. மேகதாது அணைக் கட்ட தொடர்ந்து கர்நாடக தமிழர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் . அண்மையில் நடைபெற்ற கன்னடர் தமிழர் ஒற்றுமை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி கர்நாடக தமிழர்கள் இந்த மண்ணின் விசுவாசத்தை காட்டியுள்ளார்கள்.
இச்சூழலில் வாட்டாள் நாகராஜ் தேவையில்லாமல் தமிழ் திரைப்படங்களை ஓட விடமாட்டோம் என்று கூறி இருக்கிறார். நீண்ட காலத்திற்கு பிறகு தற்போது தான் கேஜிஎப் 2 , காந்தாரா போன்ற கன்னட திரைப்படங்கள் தமிழ் நாடு உட்பட மிகப்பெரிய வெற்றி பெற்று கன்னட திரைத்துறை வளரும் சூழலில் இது போன்று தமிழ் திரைப்படங்களை ஓட விடமாட்டோம் என்று கூறுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
கன்னட திரையுலகம் வாட்டாள் நாகராஜ் போன்றவர்களை கண்டித்து திரைத்துறையில் வளர்ச்சி பெற கேட்டுக் கொள்கிறேன் என எஸ்.டி.குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் கடந்த 8-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டதாகவும் மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மேகதாது அணை கட்டி முடிக்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார்.
மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிரமாக முயன்று வருவது தெரிகிறது. இந்த நிலையில் இது குறித்து தமிழக நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் தலைகீழாக நின்றாலும் கர்நாடகாவால் மேகதாது அணையை கட்ட முடியாது என பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் மேகதாது அணையை கட்ட வலியுறுத்தி தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது வாட்டாள் நாகராஜ் கூறுகையில் மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் அனுமதிக்கவில்லை என்றால் தமிழ் படங்கள் ஓடாது. காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவே மேகதாது அணை கேட்கிறோம் என நாகராஜ் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications