தி.மலையில் கருணாநிதி சிலை நிறுவ எதிர்ப்பு.. இடைக்கால தடையை நீக்ககோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை: திருவண்ணாமலையில் கிரிவல பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் வேங்கைக்கால் இடத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதை, மாநில நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் வேங்கைக்கால் பகுதி உள்ளது. இங்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில்சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் ஜி கார்த்திக். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

சிலை அமைக்க எதிர்ப்பு
அந்த மனுவில், திருவண்ணாமலை கிரிவல பாதையும், மாநில நெடுஞ்சாலையும் இணையும் வேங்கைக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 92.5 அடி நிலத்தை வாங்கிய ஜீவா கல்வி அறக்கட்டளை, அருகே உள்ள நிலத்தையும் ஆக்கிரமித்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கிரிவல பாதையில் சிலை அமைப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவர் எனவும், அப்பகுதியில் கால்வாய் அமைந்துள்ளதால், அங்கு கட்டுமானம் மேற்கொண்டால் நீர் போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் கூறப்பட்டு இருந்தது.

இடைக்கால தடை
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்பு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. மேலும், குறிப்பிட்ட நிலத்தில் சிலை அமைக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையே இடைக்கால தடையை நீக்க கோரி ஜீவா கல்வி அறக்கட்டளை சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தடைநீக்க வழக்கு
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் முகமது சபீக் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜீவா கல்வி அறக்கட்டளை மற்றும் தமிழக அரசுத்தரப்பில், குறிப்பிட்ட அந்த நிலம் பட்டா நிலம் எனவும், அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தவர் யார் என்ற விவரங்களை கூறாமல், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் தாக்கல் செய்துள்ள இந்த பொது நல வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிடப்பட்டது.

ஒத்திவைப்பு
மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் குறிப்பிட்ட அந்த நிலம் பட்டா நிலம் எனக் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பிரதான வழக்கு மற்றும் தடை நீக்க கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications