"துரைமுருகன்.." நிலோபர் கபில் நீக்கத்தின் அதிரடி பின்னணி.. போட்டு உடைத்த கே.சி.வீரமணி
சென்னை: முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுகவை விட்டு நீக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்பது பற்றி முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளருமான கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
அதிமுக அரசில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், திருப்பத்தூர் மாவட்ட அதிமுக துணைச் செயலாளராகவும் பதவி வகித்தவர் நிலோபர் கபில்.
சில தினங்களுக்கு முன் அதிமுகவிலிருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார்.
பண மோசடி
இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிலோபர் கபில், கட்சியிலிருந்து என்னை நீக்கியதற்கு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிதான் காரணம் என்று குற்றம்சாட்டினார். பண மோசடிப் புகார்கள்தான் என்னை நீக்க காரணம் என்றால், அதிமுகவில் அமைச்சர்களாக இருந்த பலர் மீதும் மோசடிப் புகார்கள் இருக்கின்றன. முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீதே கூட ஊழல் புகார் உள்ளது என்று சரமாடியாக ஆவேசமாகினார்.
திமுகவில் இணைய திட்டம்
இந்த நிலையில்தான், நிலோபர் கபில் திமுகவில் இணைவதற்கான முயற்சியிலும் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் என்றால், நிலோபர் கபில் நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது வீரமணியே ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
வாக்குகள் குறைவு
அவர், இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: வாணியம்பாடியில், நிலோபர் வார்டில் அமைக்கப்பட்டிருக்கிற ஒரு பூத்தில் இரண்டு ஓட்டுகள் மட்டுமே அதிமுகவுக்கு விழுந்திருக்கிறது. மேலும் சில பூத்களிலும் 12, 16, 31 என்ற அளவுக்குத்தான் வாக்குகள் விழுந்துள்ளன. இவ்வளவுதான் அவர் செல்வாக்கு.
மக்கள் செல்வாக்கு
நான் அமைச்சர் என்ற பெருமிதத்தில்தான் மிதந்து கொண்டிருந்தார் நிலோபர் கபில். ஆனால், கிராம மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. நான் கூறியபடி செயல்பட்டிருந்தால் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருக்கலாம். அவருக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பதால்தான், வாணியம்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரவில்லை.
துரைமுருகனுடன் சந்திப்பு
தேர்தல் முடிந்ததும், திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளர் தேவராஜ் வீட்டுக்குப் போய் நிலோபர் சால்வைப் போட்டிருக்கிறார். சென்னை கோட்டூர்புரத்திலுள்ள திமுக பொதுச் செயலாளரான, அமைச்சர் துரைமுருகனின் வீட்டுக்கு போய் அவரைச் சந்தித்துள்ளார். பிறகு, எப்படி கட்சியிலிருந்து எடுக்காமல் இருப்போம். இவ்வாறு கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். துரைமுருகன் வீட்டுக்கு போய் நிலோபர் கபில் சந்தித்ததுதான், அவர் மீதான நடவடிக்கைக்கு முக்கிய காரணம் என்று தெரிகிறது.