ஸ்டாலின் ஏன் வரல? ஆவேசமாக கேட்ட குஷ்பு.. கூட்டத்திலிருந்த பெண் சொன்ன "கூல்" பதில்! செம பல்பு
சென்னை: முதல்வர் ஸ்டாலின் ஏன் உங்களை பார்க்க வரவில்லை என்று மக்களை பார்த்து பாஜகவைச் சேர்ந்த குஷ்பு கேட்ட கேள்விக்கு மக்கள் அளித்த பதிலால் அவர் விக்கித்துப் போய் விட்டார்.
Recommended Video
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பல்வேறு தலைவர்களும் நேரில் சென்று பார்த்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
பாஜக சார்பில் குஷ்பு உள்ளிட்ட நிர்வாகிகள் கடந்த சில நாட்களாக சென்னையில் பல பகுதிகளிலும் சென்று நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்கள்.

5 கிலோ அரிசி கொடுத்திருக்கலாம்
ஆயிரம் விளக்கு, பட்டினப்பாக்கம், கொளத்தூர் பகுதியில் குஷ்பூ மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார். ஆனால் ஒரு பாக்கெட் பிரட் மற்றும் 150 மில்லி லிட்டர் பால் ஆகியவை தான் பாஜக சார்பில் வழங்கப்பட்டன. கால் வலிக்க காத்திருக்க வைத்துவிட்டு பிரட் மற்றும் பால் ஆகியவற்றை கொடுத்ததால் பெண்கள் கடுப்பாகிவிட்டனர். "5 கிலோ அரிசி கொடுத்து இருந்தால் இரண்டு மூன்று நாட்களுக்கு சோறு பொங்கி சாப்பிட உதவும் அதை விடுத்து விட்டு பிரட் மட்டும் கொடுத்தால் எப்படி.." என்று கூட்டத்திலிருந்து குஷ்புவை நோக்கி பெண்கள் கேள்வி எழுப்பியதால் திணறிப் போய் விட்டார் குஷ்பு.

ஒரு துண்டு பிரெட் பெரிய விஷயம் என்று பேச்சு
ஒரு வழியாக சமாளித்துக்கொண்டு பசியில் இருப்பவர்களுக்கு ஒரு பிரெட் துண்டு அல்லது பால் பெரிய விஷயம், அதைத்தான் செய்துள்ளோம் போகப்போக செய்வோம் என்று தெரிவித்தார். ஆனால் ஒரு துண்டு பிரட்டால் உயிர் வாழும் அளவுக்கு, பசி பட்டினியால் வாடும் அளவுக்கு தமிழக மக்கள் சென்றுவிடவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய சில வட மாநிலங்களில் பேசுவது போல நினைத்து குஷ்பு இங்கு பேசி விட்டார் போலும். அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு பொருளாதார வலிமை பெற்றவர்கள் தமிழக அடித்தட்டு மக்கள், என்று பலரும் குஷ்புவை விமர்சனம் செய்து வருவதை பார்க்க முடிகிறது.

பல்ப் வாங்கிய குஷ்பு
இது ஒரு பக்கம் என்றால் முதல்வர் ஸ்டாலினை வம்பு இழுப்பதாக நினைத்துக்கொண்டு பல்ப் வாங்கியிருக்கிறார் குஷ்பு. கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிக்கு சென்ற குஷ்பு அங்கு செய்தியாளர்களை சந்தித்த போது கூடவே பெண்கள் மற்றும் ஆண்கள் குழந்தைகள் என அந்த பகுதி மக்களும் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் கைத்தட்டல் வாங்கலாம் என்று நினைத்துக்கொண்டாரோ என்னவோ, ஸ்டாலின் தொடர்பாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

குஷ்பு கேள்விக்கணைகள்
மழையால் பாதிக்கப்பட்டு எத்தனை நாள் ஆனது? நான்கு நாள் ஆகிவிட்டது? முதல்வர் வந்தாரா? அவரது தொகுதி தானே இது? இதுதான் முதல். முறை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம். இதைப் பார்த்து திமுகவினர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். முதலமைச்சர் அவர்கள் இந்த தொகுதியிலும், மக்கள் வாழ்கிறார்கள், இவர்களும் அவருக்கு தான் ஓட்டு போட்டு முதல்வராக தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்பது நினைத்து இங்கு வந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

பெண் அளித்த பதில்
அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு பெண்மணி குஷ்புவை பார்த்து "இந்தப் பகுதியில் மழைநீர் நிற்கவில்லை என்பதால், முதலமைச்சர் வரவில்லை என்று நினைக்கிறோம்.." என்று சட்டென்று, முகத்தில் அடித்தது போல ஒரு பதிலை சொல்லிவிட்டார். இதனால் நிலைகுலைந்து போனார் குஷ்பு. இப்படி முதல்வருக்கு ஆதரவாக மக்களே பேசுகிறார்களே என்ற ஏமாற்றம் அவரது முகத்தில் தெரிந்தது. இருந்தாலும் அரசியல்வாதி ஆயிற்றே. விட்டுக் கொடுக்க முடியுமா. அதே கேள்வியை மக்களிடம் மாற்றி கேட்டு குழப்ப முற்பட்டார். "அப்படியானால் மழைநீர் தேங்கி நின்றால்தான் முதல்வர் வருவாரா.." என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண் ஆமாம் என்று பதில் சொன்னதும், "பார்த்தீர்களா மக்களே சொல்லிவிட்டார்கள்.. மழைநீர் இருந்தால்தான் முதல்வர் வருவாராம்" என்று அதையும் தனக்கு சாதகமாக பேசுவதாக நினைத்து பேசி சமாளித்தார் குஷ்பூ. ஒருவழியாக அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள் குஷ்பு மற்றும் பாஜக நிர்வாகிகள். இந்த மழைக் காலத்தில் கொளத்தூர் முதல் குமரி வரை, நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாகவே இருப்பதால் அங்கேயிருந்து கிளம்பிச் சென்றபோது, பாஜக நிர்வாகிகள் முகத்தில் சோக ரேகை தென்பட்டது என்னவோ உண்மை.












Click it and Unblock the Notifications