முதல்வரே அவரை முதலாளினு தான் சொல்லுவாரு.. கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் எங்கள் ரோல் மாடல்.. சேகர்பாபு
கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தான் எங்கள் ரோல் மாடல் என்று சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலாளி என்றே அழைப்பார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அதேபோல், எம்ஜிஆரால் ஜமீன்தார் என்று அழைக்கப்பட்டவர் என்று கூறிய சேகர்பாபு, தங்களின் ரோல் மாடல் அவர் தான் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் சென்னை மண்ணடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு எங்கள் மேன்மை இறையாண்மை நல்லிணக்க அரங்க துவக்க விழா நடைபெற்றது.

கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில், சேகர்பாபுவை எனக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். ஏதாவது வேலை வாங்கித் தாங்க என்று என்னிடம் வேலை கேட்டு வந்தார்.

பொறாமை
நான் அப்போது அவருக்கு வேலை வாங்கிக் கொடுத்திருந்தால் இன்று உங்களுக்கு வேலை பார்க்க ஆள் இருந்திருக்காது. சேகர்பாபுவை பார்த்து எங்களுக்கு பொறாமையாக உள்ளது. ஒரு மனிதன் எப்படி எந்நேரமும் உழைத்துக் கொண்டிருக்க முடியும் என்று பொறாமையாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் முதலாளி என்பார்
இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தான் எங்களுக்கு ரோல் மாடல். அவரைப் பார்த்து தான் நாங்கள் வளர்ந்தோம். புரட்சித் தலைவரால் ஜமீன்தார் என்று அழைக்கப்பட்டவர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் முதலாளி என்று அழைக்கக் கூடிய அளவிற்கு வளர்ந்தவர். 42 ஆண்டுகளுக்கு முன் அவரை வைத்து 8 மீட்டருக்கு போஸ்டர் அடித்து கூட்டம் நடத்தியவர்கள் நாங்கள்.

ஜெ. அணிக்கு ஆதரவாக இருந்தவர்
அப்போதெல்லாம் விதவிதமான போஸ்டர்கள் அடித்திருக்கிறோம். எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜா மற்றும் ஜெ அணியாக இருந்த போது, 26 எம்எல்ஏ-க்களை விருதுநகரில் உள்ள தனது நெல்குடோனில் தங்க வைத்தவர் தான் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன். ஆட்சி அதிகாரத்தை எதிர்த்து அனைவரையும் சென்னைக்கு கொண்டு வந்து சேர்த்தவர். 9 முறை ஒரே தொகுதியில் எம்எல்ஏ-வாக இருந்து எங்களுக்கு ரோல் மாடலாக இருந்த கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வாழ்த்தியதை பிறவிப் பயனாக கருதுகிறேன் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications