"எடப்பாடி பக்கம் 4 குரங்குகள்.." கொடநாடு கொலை வழக்கை தொட்ட கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி! ஆவேச அட்டாக்
சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் தொடரும் நிலையில், ஓபிஎஸ் அணியின் மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி எடப்பாடி தரப்பை மிகக் காட்டமாக விமர்சித்து உள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பல குழப்பங்களைக் கடந்து அதிமுக எடப்பாடி- ஓபிஎஸ் இரட்டை தலைமையின் கீழ் வந்தது. இருப்பினும், மக்களவை தேர்தல் தொடங்கி அனைத்திலும் அதிமுக மோசமான தோல்வியையே சந்தித்தது.
இதன் காரணமாக அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் என இரு அணிகளாகப் பிளவுபட்டது.

அதிமுக
ஓபிஎஸ் தரப்பில் அதிமுகவுக்குக் கூட்டுத் தலைமை தேவை என்றும் கட்சியில் அனைவரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார். ஆனால் இதை முற்றிலுமாக நிராகரிக்கும் எடப்பாடி பழனிசாமி, ஒற்றை தலைமை மட்டுமே அதிமுகவுக்கு நிரந்த தீர்வு என்று அடித்துச் சொல்கிறார். அதற்கேற்ப இப்போது வரை வந்த நீதிமன்ற தீர்ப்புகளும் கூட அவருக்கு ஆதரவாகவே வந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி
தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி உள்ள நிலையில், விரைவில் தேர்தல் நடத்தி பொதுச்செயலாளராகத் திட்டமிட்டுள்ளார். அதேநேரம் ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனுவில் தனக்கு ஆதரவாகத் தீர்ப்பு வரும் என ரொம்பவே எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ்
நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் கூட மறுபுறம், இரு தரப்பும் மற்ற தரப்பை மிகக் கடுமையாகச் சாடி விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் அணியின் மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இப்போது எடப்பாடி அணியில் மொத்தம் நான்கு குரங்குகள் உள்ளதாகச் சாடி பேசினார். மேலும், மூத்த தலைவர் செங்கோட்டையனையும் அவர் விமர்சித்தார்.

கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி
ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஓபிஎஸ் தனது மனைவி இறந்ததற்குத் துக்கம் அனுசரிக்கும் வகையில் ராமேஸ்வரம் சென்றிருந்தார். ஆனால் அதனைக் கொச்சைப்படுத்தும் விதமாக உதயகுமார் அவர்கள் எங்கே சென்றாலும் இந்த பாவம் போகாது என்ன கூறியுள்ளார்.

செங்கோட்டையன்
சமீபத்தில் உதயகுமார் குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்று வழிபட்டார். அவர் எதற்காகச் சென்றார் எனக் கூற முடியுமா? தென் மாவட்டங்களில் எங்குச் சென்று உதயகுமார் நின்றாலும் அவரை மக்கள் உதைப்பார்கள்.. அந்த அளவிற்கு கெட்ட பெயர் வாங்கி உள்ளார் உதயகுமார். செங்கோட்டையன் ஜாதி ரீதியாகப் பேசுகிறார். அவர் பேசிய பேச்சை அவர்களது சமுதாயமே ஏற்றுக் கொள்ளாது. எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் ஜாதி பார்த்து கட்சி வளர்க்கவில்லை.

4 குரங்குகள்
எடப்பாடி பழனிசாமி அணியில் இப்போது நான்கு குரங்குகள் உள்ளன. இந்த நான்கு குரங்குகளும் எடப்பாடி அணியில் இருந்து சென்று விட்டால் மட்டுமே கட்சி உருப்படும். இந்தக் கட்சியை அழிப்பதற்கு இந்த நான்கு குரங்குகள் இருந்தாலே போதும். இந்த நான்கு குரங்குகளையும் ஒழித்தால் கட்சி தானாகச் சரியாகிவிடும்.

கொடநாடு வழக்கு
கட்சித் தொண்டர்கள் ஒவ்வொரு உறுப்பினர் கார்டுகளையும் எடுத்து பாருங்கள்.. அதில் ஓபிஎஸ் கையெழுத்து தான் உள்ளது. ஒட்டுமொத்தமாக அனைவரும் ராஜினாமா செய்து விட்டு மீண்டும் நியமனம் செய்யுங்கள்.. அந்த தைரியம் எடப்பாடிக்கு உள்ளதா? கொடநாடு கொலை வழக்கில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் அப்படி இல்லை என்றால் அண்ணன் ஓபிஎஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று சாடினார்.












Click it and Unblock the Notifications