ஸ்வாதி முதல் சத்யா வரை.. கொலைக்கு சினிமா தான் காரணம்! கொந்தளிக்கும் ’கொங்கு’ ஆறுமுகம்! பரபர அறிக்கை!
சென்னை : பெண்களை திரைப்பட பாணியில் மக்கள் கூடும் பொது வெளியிலேயே கொடூரமாக கொலை செய்யும் மோசமான கலாச்சாரத்தை திரைப்படங்களை கொண்டாடும் இளைஞர்கள் மத்தியில் தற்போது பரவிவிட்டது எனவும், இரண்டு மரணத்திற்கு காரணமுமான கொலை குற்றவாளி சதீஷ் கடுமையாக தண்டிக்கபட வேண்டும் என கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.ஆறுமுகம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," சென்னை பரங்கிமலை புறநகர் தொடர்வண்டி நிலையத்தில் மாணவி சத்யா அவர்களை தொடர்வண்டி முன் தள்ளிவிட்டு கொடூரமாக கொலை செய்ததோடு, தன் மகளின் மரண செய்தியறிந்து மறுகணமே மீளாத்துயரில் தற்கொலை செய்து கொண்டார் சத்யாவின் தந்தை
இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெற்றோர் மத்தியில் பெரும் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது! மக்களின் அச்ச உணர்வு நீங்கவும், இரண்டு மரணத்திற்கு காரணமுமான கொலை குற்றவாளி சதீஷ் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்

திரைப்பட பாணி
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கடந்தும், பெண் உரிமை, சமத்துவம், சமூக நீதி என்று பேச்சளவில் உள்ள விஷயங்கள் இன்று வரை செயல் வடிவம் பெறவில்லை என்பதற்கு சமகால சான்று தான் மாணவி சத்யாவின் படுகொலை! சதீஷின் காதலை ஏற்க மறுத்த ஒற்றை காரணத்திற்காகவே சத்யா கொலை செய்யப்பட்டுள்ளார். காதலை ஏற்க மறுக்கும் பெண்களை திரைப்பட பாணியில் மக்கள் கூடும் பொது வெளியிலேயே கொடூரமாக கொலை செய்யும் மோசமான கலாச்சாரத்தை திரைப்படங்களை கொண்டாடும் இளைஞர்கள் மத்தியில் தற்போது பரவிவிட்டது.

சுவாதி, ஸ்வேதா
அதன் வெளிப்பாடு தான் சுவாதி, ஸ்வேதா என கொலைகள் தொடர்ந்து நடைபெற்றதோடு இன்று ஒரு சத்யாவும் பலியாகிவிட்டார். சத்யா தரப்பு காவல்துறையில் 5 முறை புகாரளித்தும், சதீஷ் மீது வழக்கு பதியாமல் காவல் துறையினர் பொறுப்பை தட்டி கழித்ததன் விளைவு தான் இன்று இரண்டு உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது! சதீஷ் கஞ்சா போதையில் சத்யாவிடம் பல முறை தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது!

தமிழக அரசு
கஞ்சா, வடநாட்டு உற்பத்தி புகையிலை பொட்டலங்கள், மது போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவது தான் நாகரீகம் என இளைஞர்கள் நினைத்து கொண்டு போதைக்கு அடிமையாவது மட்டுமின்றி, மிதமிஞ்சிய போதையில் பெண்களை கொலை செய்வது, பாலியல் சீண்டல்களை அரங்கேற்றுவது போன்றவற்றை கடும் நடவடிக்கை மூலம் தடுத்து நிறுத்த வேண்டும்! போதை பொருளை பயன்படுத்தும் இது போன்ற இளைய தலைமுறையினர் பெண்களை மிரட்டி காதலிக்க வைப்பதும், மறுப்பவரை பொது வெளியில் கொலை செய்து மற்ற பெண்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் அச்ச உணர்வை ஏற்படுத்தும் கொடூரமான செயலை உடனடியாக தமிழக அரசு தடுத்து நிறுத்திட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

திரைப்படங்களுக்கு தடை
இது போன்ற காட்சிகளை முன்னிலைப்படுத்தி எடுக்கும் திரைப்படங்களை தடை செய்ய வேண்டும்! போதை பொருட்கள் பயன்பாட்டை அறவே தடுத்து நிறுத்துவதோடு பெண்களுக்கு எதிரான இது போன்ற புகார்களுக்கு பல இடங்களில் காவல் துறையினர் அலட்சியம் காட்டுகின்றனர், இது போன்ற பெண்களுக்கு எதிரான புகார்களில் காவல் துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டு, குற்றவாளிக்கு ஆதரவாக இருந்தார்கள் என்று குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட காவலர் மற்றும் அதிகாரி மீது துறை சார்ந்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

கடும் தண்டனை
போதை பொருட்கள் பயன்பாட்டை முழுமையாக தமிழ் நாட்டில் ஒழிக்கப்பட வேண்டும்!
மாணவி சத்யா மரணம் போல இனி ஒரு மரணம் நடக்கவே கூடாது என்பதே தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த பெற்றோர்களின் எதிர்பார்ப்பு! தமிழக அரசு இதை உணர்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! இப்படிப்பட்ட கொலை குற்றவாளிகளுக்கு ஆண்டுக்கணக்கில் விசாரணை என்ற பெயரில் கால அவகாசம் கொடுக்காமல் விரைந்து விசாரித்து கடும் தண்டனையை நீதிமன்றம் வழங்க வேண்டும்" என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications