கோயம்பேட்டில் விஜயகாந்த் பிறந்த நாளுக்காக குவிந்த ஜனம்.. வறுமை ஒழிப்பு தினத்தில் தேமுதிகவினர் அதிரடி
சென்னை: மறைந்த தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்தின் 73வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் விஜயகாந்தின் பிறந்தநாளில் அவரது இனிய நிகழ்வுகளை பகிர்ந்து வருகிறார்கள்.. அதேபோல விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நலத்திட்ட உதவிகளை கோயம்பேட்டில் வழங்கினார்.
வருடந்தோறும் விஜயகாந்தின் பிறந்தநாள், தேமுதிக சார்பாக வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வறுமை ஒழிப்பு தினத்தை கடைப்பிடிப்பது தேமுதிகவின் முக்கிய பாரம்பரியமாகும்.. ஒவ்வொரு வருடமும் இந்நாளில் ஏழை மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுவது வழக்கமாகும்.

விஜயகாந்த் பிறந்தநாள்
விஜயகாந்த் இல்லாத நிலையில், தொடர்ந்து அவரது பிறந்த நாளில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.. அந்தவகையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் பிறந்தநாள், வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடப்பட்டது. இதனால் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது.
கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மருத்துவ முகாம், ரத்ததான முகாமை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து தள்ளுவண்டி, அயன் பாக்ஸ், தையல் இயந்திரம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலிகள், மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அன்னதானம்
அதேபோல, ராமாபுரம் எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளிக்கு மதிய உணவு மற்றும் நிதியுதவியாக ரூ.50 ஆயிரம், டெல்லி தமிழ் சங்கத்துக்கு கல்விக்காக ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்பட்டது. தொடர்ந்து கேப்டன் முரசு புத்தகத்தையும் பிரேமலதா வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா சொல்லும்போது, கேப்டன் விஜயகாந்த்தை பற்றி நினைவுகூர்ந்து, நெகிழ்ச்சியாக பேசினார்.. பிறகு தவெக தலைவர் விஜய் பற்றியும் கூறியிருந்தார்.
விஜய் -கேப்டன்
"விஜய் பெரியவராக தெரிகிறார்.. ஆனால் அவர் சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே பார்த்து வருகிறோம்.. எனக்கு பார்த்தால் அவர் மகன் போன்றவர்.. அவருக்காக விஜயகாந்த் செந்தூரபாண்டி படத்தில் நடித்து தந்தார்.. இன்று அவர் நன்றாக இருக்கிறார்.. அதற்கு வாழ்த்துக்கள்.. ஆனால், அதனை அரசியலுக்காக பயன்படுத்தினால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்..
ஏனென்றால் எங்களுக்கு என்று ஒரு கட்சி உள்ளது. எங்கள் கட்சி 20 ஆண்டு கட்சி, எதிர்க்கட்சியாகவும் இருந்துள்ளது. விஜயகாந்த் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. விஜயகாந்த் பெயரை சொல்லி விஜய் வாக்குகளை எடுக்கிறார் என்றால் மக்கள் அதை ஏற்றுகொள்ள மாட்டார்கள்" என்றார்.
வறுமை ஒழிப்பு தினம்
இதனிடையே, இன்றைய தினம் முழுவதுமே விஜயகாந்தின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மாவட்டந்தோறும் தேமுதிகவினர் நலத்திட்ட உதவிகளை இன்று செய்து வருகின்றனர்.. ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், மரக்கன்று வழங்குதல், மாற்று திறனாளிகளுக்கு உதவி, பள்ளி குழந்தைகளுக்கு இலவச பாட புத்தகங்கள், சீருடைகள், முதியோர் இல்லத்திற்கு உதவிகளையும் இன்று வழங்கி வருகிறார்கள்.
நாமக்கல் - அன்னதானம்
அந்தவகையில், தேமுதிக நாமக்கல் மாவட்டத்தில் 5 ஆயிரம் பேருக்கு இன்று அன்னதானம் வழங்கப்பட உள்ளது.. இதுகுறித்து வடக்கு மாவட்ட செயலாளர் விஜய்சரவணன் வெளியிட்ட அறிக்கையில், தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, இன்று நாமக்கல் மாவட்டம் முழுவதும் 50,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
அன்னதானம் நடைபெறும் இடங்கள்: காலை, 9:30 மணிக்கு, பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, 11:00 மணிக்கு குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, 1:00 மணிக்கு, ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட், 5:00 மணிக்கு திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே என, மேற்கண்ட இடங்களில், கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை, வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அதேபோல தேமுதிக ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் விஜயகாந்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை கூறி அவரது இனிய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்..
"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.. என்ற கேப்ஷனை பதிவிட்டு, இணையத்திலும் ரசிகர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications