“மகாபாரதத்தில் கிருஷ்ணர்.. எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின்”.. களத்தில் திமுக.. நெகிழ்ந்த கே.எஸ்.அழகிரி!
முதல்வர் மு.க.ஸ்டாலினை மகாபாரத கிருஷ்ணரோடு ஒப்பிட்டுப் புகழ்ந்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.
சென்னை : "திமுக தலைமையிலான எங்களது கூட்டணி மிகுந்த ஒற்றுமையுடன் கொள்கை உணர்வோடு இடைத்தேர்தலை எதிர்கொள்கிறது. மகாபாரதத்தில் கிருஷ்ணர் தேரை ஓட்டி, மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் கொடுத்தது போல், முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்." என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடும் நிலையில், திமுகவினர் தீவிரமாக தேர்தல் பணி ஆற்றிவருகின்றனர்.
திமுக அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டு நாள்தோறும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைக் குறிப்பிட்டு திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினை புகழ்ந்துள்ளார் கே.எஸ்.அழகிரி.

கே.எஸ்.அழகிரி
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைபயணம் வெற்றி பெற்றதை வரவேற்கும் வகையில், கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கொடியேற்றும் விழா மற்றும் துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார். ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை குறிக்கும் வகையில் கையோடு கைகோர்ப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு வழங்கினர்.

கிருஷ்ணர் போல எங்களுக்கு ஸ்டாலின்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மாபெரும் வெற்றி பெறுவார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான எங்களது கூட்டணி மிகுந்த ஒற்றுமையுடன் கொள்கை உணர்வோடு இடைத்தேர்தலை எதிர்கொள்கிறது. மகாபாரதத்தில் கிருஷ்ணர் தேரை ஓட்டி, மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் கொடுத்தது போல், முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அதிமுக குழப்பத்திற்கு மூலகாரணம்
ஆனால் எதிர்க்கட்சியில் இந்த நேரம் வரை மாபெரும் குழப்பம் நிலவுகிறது. பல உலக நாடுகளில் உள்ள குழப்பத்தைக் கூட தீர்த்து விடலாம். அதைவிட அதிமுகவில் பெரிய குழப்பமாக உள்ளது. இந்த குழப்பத்திற்கான மூலகாரணம் பாஜக தான். பாஜக, தனது எதிர் சித்தாந்தத்தை உடையவர்களுக்கு எதிராகச் செயல்படுவதை விட, உடனிருப்பவர்களுக்கு தான் அதிகமாக எதிராகச் செயல்படுகிறார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியை இரண்டாக உடைத்து, அங்கு குழப்பத்தை உருவாக்கினார்கள். இதேபோல் கோவாவில் செய்தார்கள்.

அண்ணாமலை குறி
தற்போது தமிழ்நாட்டிலும் செய்து கொண்டிருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் அதிமுகவை உருக்குலைத்து ஒன்றுமே இல்லாமல் போகும் அளவிற்கு வீழ்த்தியிருக்கிறார்கள். ஈபிஎஸ், ஓபிஎஸ் 2 பேரும் சேர்ந்து விடக்கூடாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை குறியாக இருக்கிறார். யாரையாவது ஒருவரை ஆதரிக்க வேண்டும் என்பதால் பாஜகவிற்கு தற்போது இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நரி போலத் தத்தளிக்கின்றார்கள் என்பது தான் பாஜகவின் உண்மையான முகம். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியது போல் பாஜகவை கவனத்துடன் அணுகுகிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications