தீயாகப் பரவிய வதந்தி.. கொதித்த லட்சுமி ராமகிருஷ்ணன்.. “பாஜகவில் சேரவே இல்லை.. எப்படி விலக முடியும்?”
சென்னை : "நான் பாஜகவில் இணையவே இல்லை. பிறகு எப்படி விலக முடியும்?" என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். பாஜகவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதால் லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்ததாக ஒரு தகவல் வேகமாகப் பரவியது.
லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவில் இருந்து விலகிவிட்டதாக தகவல் பரவிய நிலையில், தான், பாஜகவில் இணையவே இல்லையே எப்படி விலக முடியும் எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
மேலும், நான் எந்தக் கட்சியிலும் இல்லை, நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. அரசியலில் நுழையும் திட்டம் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
தமிழ்நாடு பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்த நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில், சமீபத்தில் காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் தான் விலகியதற்கு அண்ணாமலை தான் காரணம் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார் காயத்ரி ரகுராம்.

லட்சுமி ராமகிருஷ்ணன் விலகல்?
இந்நிலையில் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜவில் இருந்து விலகியதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு டிவி சேனலுக்கு அளித்த பேட்டி இணையத்தில் வெளியானது. அதில், லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவில் இருந்து விலகுவதாகத் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இது தொடர்பாக லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

சேரவே இல்லையே
லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நான் பாஜகவில் இணையவே இல்லை. பிறகு எப்படி விலக முடியும்? நான் கூறிய தகவலை தவறாக பதிவிட்டுள்ளார்கள். இந்த விவாதத்தில் அண்ணாமலை கூறியது சரியே. தங்களுக்கான ஒழுக்கங்களை வளர்த்துக் கொள்ளாமல் பிறரை கேள்வி கேட்க எந்த தகுதியும் ஊடகங்களுக்கு இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வரமாட்டேன்
மேலும் மற்றொரு பதிவில், "இதன் மூலம் நான் தெளிவுபடுத்துவது, நான் எந்தக் கட்சியிலும் இல்லை, நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை, எந்தக் கட்சியாக இருந்தாலும் எனது பார்வையில் நல்லது கெட்டதுகளை மட்டுமே விமர்சிக்கிறேன். எனக்கு அரசியல் தொடர்புகளோ எந்த அரசியல் கட்சியின் ஆதரவோ இல்லை. வரும் காலத்தில் அரசியலில் நுழையும் திட்டம் இல்லை, நான் ஆன்மிகத்தை மட்டுமே தொடர விரும்புகிறேன், மதம் அல்லது மத அடையாளங்களை அல்ல." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications