ஹேப்பியா.. நிலம் இல்லா ஏழைகளுக்கு இலவச நிலம்! மத்திய அரசு திட்டம் தமிழ்நாட்டில் அமல்- வெளியான அரசாணை
சென்னை: நிலம் இல்லாத ஏழைகளை கண்டறிந்து அவர்களுக்கு நிலம் வழங்கும் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு, இன்று, அரசாணை பிறப்பித்துள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்துமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியிருந்தது. மேலும், இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக குழுவை அமைக்கவும் அறிவுறுத்தியிருந்தது.
மேலும், இரண்டு மாதங்களுக்குள் நிலமற்ற ஏழைகளை கண்டறிந்து நிலம் வழங்கவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

அரசாணை
இந்த அடிப்படையில் நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் அளிக்கும் "பிரதம மந்திரி" திட்டத்தை செயல்படுத்தும் விதமாக வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மை துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் கோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார். நிலம் இல்லாத, ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

குழுவினர்
இந்தக் குழுவின் துணைத் தலைவராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் இருப்பார் என்றும், உறுப்பினராக நில நிர்வாக ஆணையரும், உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர் இருப்பார் என்றும் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு மாதங்கள்
இந்த குழு மூலமாக இரண்டு மாதங்களுக்குள் நிலமற்ற ஏழைகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு நிலம் அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது.

பலனாளிகளை கண்டுபிடிப்பது
தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு, விரைவில், ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடக்க உள்ளன. எனவே, நிலமற்ற ஏழைகளை கண்டறிவதில் பெரிய சிரமம் இருக்காது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் முன்னோடி
நிலமற்ற ஏழைகளுக்கான இலவச நிலம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வராக கருணாநிதி பதவி வகித்தபோது 2006ம் ஆண்டு தொடங்கி வைத்தார். அந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவின் மிகவும் பிரபலமான வாக்குறுதிகளில் அதுவும் ஒன்றாக இருந்தது. அதிமுகவின் தோல்விக்கு, இந்த வாக்குறுதி, முக்கிய காரணமாக அரசியல் பார்வையாளர்களால் அப்போது சுட்டிக் காட்டப்பட்டது.

நிலமற்றவர்களுக்கு நிலம்
"இதை என் வாழ்வின் மிகப்பெரிய சாதனையாக நான் கருதுகிறேன்" என்று முதல்வராக இருந்த கருணாநிதி, இத்திட்டத்தின் துவக்க விழாவில் தெரிவித்தார். முதல்கட்டமாக அவர், 1,000 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நிலப் பத்திரங்களை வழங்கினார். தற்போது பிரதமர் நரேந்திர மோடி அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்துகிறது. இதனால் நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications