PTR Palanivel thiagarajan: மொத்தம் 2.26 ஏக்கர்.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது ஹைகோர்ட்டில் நில அபகரிப்பு புகார்
சென்னை: தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மதுரை மாவட்டம் கொடிக்குளத்தில் 2.22 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்றதாகவும், இதுதொடர்பாக லோக்ஆயுக்தா விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெய் பாலாஜி சுப்பிரமணியன். இவருக்கு வயது 42. இவரது மனைவி பெயர் கலாவதி. இந்நிலையில் தான் ஜெய் பாலாஜி சுப்பிரமணியன், தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நானும், எனது மனைவி கலாவதியும் மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள கொடிகுளம் கிராமத்தில் 2.26 ஏக்கர் நிலத்தை வைத்திருக்கிறோம். இதனை கடந்த 2024 மே மாதம் 20ம் தேதி வாங்கினோம். இந்த நிலத்தை குடியிருப்பு மனையாக மாற்ற முடிவு செய்தோம்.
உதவி செய்வதாக..
ஆனால் நகர மற்றும் கிராம திட்டமிடல் இயக்ககம் (DTCP), ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (RERA) போன்ற பல்வேறு அதிகாரிகளிடமிருந்து பெறப்பட வேண்டிய சட்டப்பூர்வமான அனுமதிகள் குறித்து எங்களிடம் தெளிவு இல்லாமல் இருந்தது.
இந்த வேளையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தானாகவே முன்வந்து நிலம் சார்ந்த நடைமுறைகள் அனைத்தும் அறிந்தவர்கள் தனக்கு தெரியும். இதனால் உதவி செய்வதாக உறுதியளித்தார்.
போலி சான்று
இதனை நம்பி 2024 ஜூன் 24ம் தேதி சார்ட்டடர் அக்கவுண்ட்ன்ட் பெயரில் பவர் பத்திரம் செய்யப்பட்டது. மேலும் டிசிசிபி, ரெராவிடம் ஒப்புதல் பெற ஆவணங்கள் தேவை என்பதால் ஒரிஜினல் ஆவணங்களையும் வழங்கினோம். ஆனால் 2025ம் ஏப்ரல், மே மாதத்தில் எனது சொத்தை சட்டவிரோதமாக கைப்பற்றும் வகையில் பவர் பத்திரம் தவறாக பயன்படுத்தபட்டது.
போலி லைப் சான்றிதழ் பயன்படுத்தி நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு விற்க முயற்சி செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒத்தக்கடை போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
லோக்ஆயுக்தா விசாரணைக்கு..
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக 2025 டிசம்பர் 9ம் தேதி லோக்ஆயுக்தாவிடம் புகார் அளுிக்கப்பட்டது. ஆனால் லோக்ஆயுக்தா போலீசார் விசாரிக்கவில்லை. லோக்ஆயுக்தா விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் கூறப்ட்டு இருந்தது.
நீதிமன்றம் விசாரணை
இந்த மனு நீதிபதி பிடி ஆஷா முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் சார்பில் வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜரானார். அப்போது அவர், ‛‛இந்த மனு முற்றிலும் தவறான எண்ணத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நியாயமான காரணம் இன்றி இந்த மனு உள்ளது. இந்த வழக்கின் பின்னணியில் நான் முழுமையாக அம்பலப்படுத்துவேன்'' என்றார்.
திருத்தங்கள் செய்ய அவகாசம்
இதற்கிடையே தான் மனுவில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும். இதற்கு காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி பிடி ஆஷா அனுமதி வழங்கினார். திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்த பிறகு மீண்டும் வழக்கை பட்டியலிட நீதிமன்ற பதிவுத்துறைக்கு அவர் உத்தரவிட்டார்.
இந்த மனுவை மனுதாரர் கடந்த ஜனவரி 23ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். பிப்ரவரி 2ம் தேதி இந்த மனு பட்டியலிடப்பட்டது. அதன்பிறகு பிப்ரவரி 4ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிறகு லோக்ஆயுக்தா சார்பில் மனுதாரரருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் அமைச்சர் வற்புறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு உறுதியானதாக இல்லை. ஏன் புகாரை நிராகரிக்க கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் மனுவில் திருத்தம் செய்ய வேண்டி உள்ளதாக மனுதாரர் காலஅவகாசம் கேட்டதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications