திருமலை மலைப்பாதை சரியாகும் வரை பக்தர்கள் வரவேண்டாம் - தேவஸ்தானம் கோரிக்கை
திருமலை மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் யாரும் இப்போதைக்கு கோவிலுக்கு வர வேண்டாம் என்று திருமலை, திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை: தொடர் கனமழை காரணமாக திருப்பதி மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு மலைப்பாதையில் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மலைப்பாதை சீரமைப்பு செய்யப்படும்வரை யாரும் கோயிலுக்கு வரவேண்டாம் என கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கன மழை காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருப்பதியில் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது. கோயில் நகரமான திருப்பதி முழுவதும் முழங்கால் அளவுக்கு மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. மழையால் பல்வேறு மரங்கள் சாய்ந்துள்ளன. மரங்கள் சாய்ந்திருப்பதால் பல்வேறு பகுதிகளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது.
திருப்பதியில் உள்ள பவானி நகர், ஸ்ரீஹரி காலனி, பழைய மகப்பேறு மருத்துவமனை சாலை, கிழக்கு தேவாலயம் சாலை, லட்சுமிபுரம், மதுரா நகர் ஆகிய பகுதிகள் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், பழைய மகப்பேறு மருத்துவமனை சாலை, கலிகோபுரம் ஆகிய பகுதிகளில் பெரிய மரங்கள் சாலையில் சாய்ந்து விழுந்ததால், வாகன ஓட்டிகள் பெருமளவுக்குப் பாதிப்புக்கு உள்ளாகினர்.

திருமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பெருமளவில் கன மழை பெய்துள்ளதால், மலைக்குப் பயணிக்கும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, திருமலை தேவஸ்தானம் மலைக்குச் செல்லும் சாலையைக் கடந்த நவம்பர் 17 அன்று மூடியது. சில தினங்களுக்குப் பிறகு பயணிகள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே திருப்பதி திருமலைக்கு இடையிலான இரண்டாவது மலைப்பாதையில் பெரிய சேதம் ஏற்பட்டது. அங்கே பெய்துவரும் கனமழை காரணமாக இந்த மண்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. காலை நேரத்தில் மலைப்பாதையில் பயணம் செய்த வாகன ஓட்டிகள் கவனமாக செயல்பட்டதால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மண் சரிவின் போது பாறை உருண்டு விழுந்ததில் 3 சாலைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. திருமலைக்கும் திருப்பதிக்கும் இடையே போக வர இரண்டு மலைப்பாதைகள் உள்ளன. மண் சரிவு காரணமாக 2வது மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாறைகள் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணியில் தற்போது தேவஸ்தான பொறியாளர்கள், வனத்துறை அதிகாரிகள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். காத்திருந்த வாகனங்களை இணைப்பு சாலை மூலம் முதலாவது பாதை வழியே திருமலைக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாலைகள் சேதம் அடைந்த பகுதியில் தேவஸ்தான அறங்காவல் குழு தலைவர் ஆய்வு செய்தார்.
இந்நிலையில் திருப்பதி பயணத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று முன்பதிவு செய்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் 15 நாட்களுக்கு பின் அதே தரிசன டிக்கெட்டில் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என்றும், சாலை சீரமைப்பு பணி நடைபெறுவதால் திருப்பதிக்கு வருவதை தவிர்க்குமாறும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications