திமுக பந்தில் சிக்சர் அடித்த எடப்பாடியார்...டெல்டா விவசாயிகள் ஓட்டுக்கள் யாருக்கு?
சென்னை : தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் ஓய இன்னும் சில நாட்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் முழு வீச்சில் ஓட்டு சேகரிப்பில் இறங்கி உள்ளன. குடும்ப தலைவிகள், பெண்கள், இளைஞர்கள் ஓட்டுக்களை குறிவைத்து அரசியல் கட்சிகள் பல அறிவிப்புக்களை தங்கள் தேர்தல் அறிக்கையில் அள்ளி வீசி உள்ளன.
ஆனால் நாட்டின் முழுகெலும்புகள் என வர்ணிக்கப்படும் விவசாயிகளின், அதிலும் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்ட விவசாயிகளின் ஓட்டுக்களை அள்ளப் போவது யார் என இங்கே பார்க்கலாம்.

அதிமுக.,வின் கடைசி நிமிட அறிவிப்பு
தேர்தல் அறிவிப்பு வர போகும் சமயத்தில், சட்டசபையில் 110 விதியின் கீழ் அதிமுக அரசு 2 முக்கிய அறிவிப்புக்களை வெளியிட்டது. கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் பெற்ற 6 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி, பயிர் கடன் மற்றும் மகளிர் சுயஉதவி குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி ஆகிய அறிவிப்புக்கள் விவசாயிகள் மற்றும் பெண்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

விவசாயிகள் வரவேற்பு
ஏற்கனவே மீத்தேன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த டெல்டா மாவட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அதிமுக அரசு அறிவித்தது விவசாயிகளிடம் அதிமுக.,விற்கு நல்ல மதிப்பை பெற்று தந்தது. இத்துடன் விவசாயிகளின் நகைக்கடன், பயிர்க்கடன் ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டது அதிமுக.,விற்கு கூடுதல் பலமாக அமைந்து விட்டது.

பாதிப்பில் இருந்த விவசாயிகள்
கொரோனா லாக்டவுனால் சந்தைகள் மூடப்பட்டதால் நெல் மட்டுமின்றி வாழை விவசாயிகள் பலரும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகினர். இதனால் வங்கிகளில் பெற்ற வேளாண் பயிர் கடன்களை திருப்பி செலுத்த முடியாமல், வட்டியும் பலமடங்கு உயர்ந்திருந்தது. புதிதாக ஆட்சிக்கு வருபவர்கள் கடன் நிலுவை தொடர்பாக என்ன முடிவெடுப்பார்களோ என விவசாயிகள் கலங்கி இருந்த சமயத்தில், அதிமுக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

திமுக பந்தில் சிக்சர் அடித்த எடப்பாடியார்
ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பயிர் கடன்கள், நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் அறிக்கைக்கு பதிலாக, ஜனவரி மாதமே திமுக அறிவிப்பை வெளியிட்டது. இந்த யோசனையை பயன்படுத்தி, தேர்தல் அறிவிப்பு வெளியாகும் அன்று காலை சட்டசபையில் அதிமுக அரசு உத்தரவாகவே வெளியிட்டு, அதனை ஓட்டாக மாற்றிக் கொண்டுள்ளது.

பயனடைந்த விவசாயிகள்
அதிமுக அரசு வெளியிட்ட பயிர் கடன் தள்ளுபடியால் அதிகம் பயனடைந்தது டெல்டா மாவட்ட விவசாயிகளும், அதிமுக பலம் மிகுந்த தேனி, சேலம், ஈரோடு மாவட்ட விவசாயிகளும் தான். திமுக அறிவிப்பாக வெளியிட்ட கடன் தள்ளுபடியை, அதிமுக உத்தரவாகவே வெளியிட்டு, அதனை தேர்தலுக்கு முன்பே அவசர அவசரமாக நடைமுறையும் படுத்திவிட்டது. இதனால் விவசாயிகள் ஓட்டுக்கள் அதிக அளவில் அதிமுக.,விற்கு கிடைக்கவே வாய்ப்புள்ளது.

எல்லாம் ஓட்டுக்கள் தான்
அதிமுக அரசின் அறிவிப்புக்கள் விவசாயிகள், விவசாய சங்கத்தினரிடம் வரவேற்பை பெற்றாலும், அரசியல் கட்சிகள் வெளியிடும் அறிவிப்புக்கள் அனைத்தும் தேர்தலுக்காக தான் என சிலர் சொல்லி வருகின்றனர். அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையை ஒப்பிட்டு பார்த்தால் பெரும்பாலும் ஒரே மாதிரியான அறிவிப்புகள் தான் உள்ளன. ஒரு சில விஷயங்கள் மட்டும் மாறுகின்றன. இதனால் யாருக்கு ஓட்டு போட்டாலும் ஒரே மாதிரியான நிலை தான் நீடிக்கும் என சிலர் விரக்தியும் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications