காவிரி டெல்டாவில் தண்ணீர் வருவதற்கு முன் தூர்வாரிவிடுவோம்.. சொல்கிறார் துரைமுருகன்
வருகிற 31-ம் தேதிக்குள் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் நிறைவடையும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் 31ஆம் தேதிக்குள் நிறைவடையும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். போர்க்கால அடிப்படையில் கூடுதல் இயங்திரங்களை பயன்படுத்தி தண்ணீர் சென்றடைவதற்கு முன் மீதமுள்ள பணிகள் முழுமையாக முடிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
டெல்டா குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன் மூலம் சுமார் ஐந்தரை லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மேட்டூர் அணையிலிருந்து மே மாதத்தில் நீர் திறப்பது இதுவே முதல் முறையாகும்.
இதுவரை ஜூன் 12ஆம் தேதி 18 முறை நீர் திறக்கப்பட்டுள்ளது. திறக்கப்படும் தேதியை கடந்து 60 முறை தாமதமாக நீர் திறக்கப்பட்டது.
முதல்முறையாக முன்கூட்டியே மே மாதம் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பது என்பது இதுவே முதல் முறையாகும். மேட்டூர் அணை வரலாற்றில் ஜூன் 12ம் தேதிக்கு முன்பே 11வது முறையாக அனைத்து திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஜூன் 12க்கு முன்பாகவே நீர் திறக்கப்பட்டது . மேட்டூர் நீரால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் லட்சக்கணக்கான விவசாய நிலங்கள் பயன் பாசனம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் உள்ள காவிரி பாசன வாய்க்கால்களை தூர்வார தமிழக பட்ஜெட்டில் ரூ.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. குறுவை சாகுபடிக்கு முன்பாக கடைமடை வரை தடையின்றி தண்ணீர் செல்ல 4,964 கி.மீட்டர் தொலைவுக்கு இருக்கும் வாய்க்கால்களை தூர்வார இருப்பதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் 5 ஆயிரம் கி.மீட்டர் தூரத்துக்கு பாசன வாய்க்கால்கள் உள்ளன. இந்த நிதி போதுமானதல்ல என்று விவசாயிகள் தெரிவித்தனர். பல பகுதிகளில் தூர்வாராமல் தண்ணீர் வீணாக வாய்ப்பு உள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேட்டூர் அணையில் இன்று திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பாசன கால்வாய்கள் வரை சென்று சேரும் வகையில் தண்ணீரை தூர்வார வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வருகிற 31ஆம் தேதிக்குள் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் நிறைவடையும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு தூர்வாரும் பணிகள் 23.04.2022 அன்று துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
4,964 கி.மீ. தூரம் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இதுவரை 4.047 கி.மீ. நீளத்திற்கு அதாவது 82 சதவிகிதம் பணிகள் முடிவடைந்துள்ளது. இதில் ஆறுகள் தூர்வாரும் பணி முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளது. கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாய்க்கால்களுக்கு தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணிகள் தினசரி 210 கி.மீ. நீளத்திற்கு போர்க்கால அடிப்படையில் கூடுதல் இயங்திரங்களை பயன்படுத்தி தண்ணீர் சென்றடைவதற்கு முன் மீதமுள்ள பணிகள் 31.05.2022ற்குள் முழுமையாக முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.