”கடலில் போட்டாலும் கட்டுமரமாக மிதப்பேன்” ..கருணாநிதியின் இந்த டயலாக் பிறந்தது எப்போது?
சென்னை: பேசிப் பேசியே வளர்ந்த இயக்கம் திமுக. ஆகவேதான் 'கலைஞர்' தொலைக்காட்சி தொடங்கப்பட்டபோது 'தமிழர்களே, தமிழர்களே.. நீங்கள் என்னைக் கடலில் தூக்கி எறிந்தாலும் நான் கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்; கவிழ்ந்துவிடமாட்டேன்' என்ற வசனத்தை ஒலிக்க வைத்தார்கள்.
இவ்வளவு பிரபலமான இந்த வாசகத்தை, கருணாநிதி எப்போது சொன்னார், ஏன் சொன்னார் என்பது, இன்றைய இளம் தலைமுறைக்கு மட்டும் இல்லை; அவரை அதிகம் அறிந்த அரசியல்வாதிகளுக்குகூட தெரியாது.

எத்தனையோ மேற்கோள்களை அவர் எடுத்துக்காட்டி இருந்தாலும், இன்றைக்கும் அவரது அடையாளமாக மேற்சொன்ன இந்த வாசகம்தான் மறக்க முடியாமல் அப்படியே நிலைத்து நிற்கிறது.
அந்த வாசகம் பற்றிய ரகசியத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால், கருணாநிதி அரசியல் மேடைகளில் அடிக்கடி சொன்ன சில வாசகங்களை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

மு.கருணாநிதி பிறந்தது அன்றைய தஞ்சை ஜில்லா. அதிக எழுத்தாளர்களை தமிழுக்கு அள்ளி வழங்கிய பூமி. அந்த அளவுக்கு இசையும் தமிழும் மணம் வீசிய மண்.
அங்குள்ள மக்களும் அப்படித்தான். தாங்கள் வாழ்க்கையில் பட்டுத் தெரிந்துகொண்ட அனுபவங்களை அப்படியே பழமொழிகளாகப் பதிய வைத்துள்ளனர் இந்த வட்டாரத்து மக்கள்.

அதன் தொடர்ச்சியாகத்தான் கருணாநிதி, தனது எல்லா விமர்சனங்களிலும் பழமொழிகளை மேற்கோள் காட்டி எதிராளிகளை எளிதாய் மடக்குவார்.
தனது அரசியல் எதிரிகளை விமர்சிக்க அவர் அடிக்கடி பயன்படுத்திய பழமொழி, 'ஒய்யாரக் கொண்டையில் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்' என்ற பழமொழி. அவர் இதை 'முரசொலி'யில் எத்தனை இலட்சம் முறை பயன்படுத்தி இருப்பார் என்பதற்கு கணக்கே கிடையாது.

அச்சு ஊடகத்தைத் தாண்டி, அவர் ஃபேஸ்புக்கில் இயக்கிய காலத்திலும்கூட இதே பழமொழியைப் பயன்படுத்தி இருக்கிறார். ஜெயலலிதா ஊழல் பற்றிய தீர்ப்பு வழங்கப்பட்ட காலத்தில், அவர் ஃபேஸ்புக்கில் (2014 அக்டோபர்) 'ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்!' என்ற தலைப்பில் தொடர் கட்டுரை வரைந்தார்.
அதைப்போலவே அவரது அக்மார்க் வாசகம் 'உடன்பிறப்பே' என்பது. அது எப்போது பிறந்தது என்பது பலருக்கும் தெரியாது. அண்ணாதுரை 'தம்பி' என்று கூறி உறவு கொண்டாடினார். கருணாநிதியோ, 'கழகக் கண்மணிகளே' என்று உரிமை கொண்டாடினார்.
அந்த 'உடன்பிறப்பு' என்ற வார்த்தையை கருணாநிதி பின்னாளில்தான் சொல்லத் தொடங்கினார். மேடைப் பேச்சு என்றால், 'என் உயிரினும் மேலான உடன்பிறப்புக்களே' என்பார். 'முரசொலி'யில் கடிதம் என்றால், 'உடன்பிறப்பே' என்பார்.
உடல்நிலை சரியில்லாமல் எம்.ஜி.ஆர். மறைந்தபோது சென்னை அண்ணா சாலையில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி சிலையை உடைத்து நொறுக்கினார்கள். அப்போது ஒரு இளைஞன் வேல் கம்பு கொண்டு சிலையைச் சிதைத்தான். அந்தப் படம் அடுத்த நாள் பத்திரிகைகளில் வெளியானது.

அப்போது கருணாநிதி, "செயல்பட விட்டோர் சிரித்து மகிழ்ந்து நின்றாலும், அந்த சின்னத்தம்பி, என் முதுகில் குத்தவில்லை- நெஞ்சில்தான் குத்தினான்; அதனால் நிம்மதி எனக்கு!" என்றார்.
அவர் அந்நாளில் பயன்படுத்திய 'சின்னத்தம்பி முதுகில் குத்தவில்லை; நெஞ்சில்தான் குத்தினான்' என்ற டயலாக் அவரது கட்சியினர் மத்தியில் அழியாத வாசகமாக அப்படியே தங்கிவிட்டது.
மீண்டும், விட்ட இடத்திற்கு வருவோம். எப்போதிலிருந்து வந்தது இந்த உடன்பிறப்பு? விடையைச் சொல்லிவிடுவோம்.

அண்ணாதுரை மறைவுக்குப் பின் 1969, பிப்ரவரி 10 அன்று ஆளுநர் சர்தார் உஜ்ஜல்சிங் கருணாநிதிக்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
புதிய அமைச்சரவையில் கருணாநிதி, திட்டம், காவல்துறை, கல்வி, பொதுப்பணித்துறை, போக்குவரத்து ஆகியவற்றை ஏற்றார். அன்று முதல் 'முரசொலி' நாளேட்டில் தமது தொண்டர்களுக்குக் கடிதம் எழுத ஆரம்பித்தார். அந்தக் கடிதம் 'உடன்பிறப்பே' என்ற உணர்ச்சிகரமான வார்த்தையுடன் தொடங்கியது.
அன்று உருவான அந்த உறவுச் சொல்லை அவர் இறுதிவரை விடாமல் பயன்படுத்தினார்.
இந்தச் சொல்லைப்போல் அரசியல் வட்டாரத்தில் அதிகம் அடிப்பட்ட அவரது வாசகம், 'நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக'. ஏனென்றால் அதற்குமுன் இருந்த மத்திய ஆட்சி அற்ப ஆயுளில் அல்லாடியது.
அதனை மனதில் வைத்தே 'நிலையான ஆட்சி', அதாவது 5 ஆண்டுகள் வரை ஆடாமல் அசையாமல் உள்ள ஓர் ஆட்சி என்ற அர்த்தத்தில் அதைப் பயன்படுத்தினார் கருணாநிதி.

அரசியலில் தனது தொண்டர்களுக்கு அவர் அன்புக் கட்டளையிடும் போது எல்லாம், ''அஞ்சாமல்- கண் துஞ்சாமல் ஆற்றிடுக கடமை' எனக் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இனி, இறுதியாக 'தமிழர்களே; தமிழர்களே' கதைக்கு வருவோம்.
எம்.ஜி.ஆர் கட்சித் தொடங்கிய பிறகு பல்வேறு வழிகளில் அவரது ஆட்சியின் குறைபாடுகளை புட்டு புட்டு வைத்து பக்கம் பக்கமாக எழுதி வந்தார் கருணாநிதி.
குறிப்பாக எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் சாராயத்திற்கு எதிராக திமுக பல வழிகளில் போராடியது. அதேபோல் அவர் கொண்டுவர நினைத்த உயர்சாதியினருக்கான 10% இடஒதுக்கீட்டை, கருணாநிதி அசராமல் எதிர்த்தார். வருமான வரியைக் கூட எம்.ஜி.ஆர். சரியாகக் கணக்கு சமர்ப்பிக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுப்பினார்.
அவை எல்லாம் அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டன. தேர்தலின் போது இந்தக் குற்றச்சாட்டுகளைக் கட்டம் கட்டிப் போட்டு விளம்பரம் கூட கொடுத்தது திமுக.
ஆனாலும் எல்லாவற்றையும் தாண்டி எம்.ஜி.ஆர் தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார். அது திமுகவுக்கும் குறிப்பாகக் கருணாநிதிக்கும் சோதனையான காலம்.
ஆனாலும் கருணாநிதி அசரவே இல்லை. அவர் மேலும் உற்சாகமாக மேடைகளில் முழங்கி வந்தார். தனது தொண்டர்களைக் கட்டுக் குலையாமல் காத்துவந்தார்.

அப்போதுதான் கருணாநிதியின் 57 ஆவது பிறந்தநாள் வந்தது. அதாவது 1981 ஆம் ஆண்டு. சென்னையில் அதற்காக ஒரு விழா. அன்று மேடையில் ஏறிய கருணாநிதி, தனது தொண்டர்களுக்குப் புதிய ரத்தத்தைப் பாய்ச்சும் படி பேசினார்.
அந்தப் பேச்சில், "ஓ! தமிழர்களே, நீங்கள் என்னைக் கடலில் தூக்கி எறிந்தால் நான் கட்டுமரமாக மிதப்பேன். நீங்கள் அதன் மீது பயணம் செய்யலாம். நீங்கள் என்னை நெருப்பில் எறிந்தால் உங்கள் உணவைச் சமைப்பதற்கு எரியும் விறகாவேன்.
நீங்கள் என்னைப் பாறை மீது எறிந்தால் பயனற்ற சிறு துண்டுகளையும் சிதறவிட மாட்டேன். நீங்கள் உண்பதற்குப் பொருளாவேன் உடைபட்ட தேங்காயைப் போல்! எனவே என் சக தமிழர்களே நீங்கள் விரும்பியபடி என்னை ஆக்கிக்கொள்ள முடியும். நான் எப்போதும் உங்களுக்குப் பயன்படுவேன்" என்றார்.

இதைக் கேட்ட கூட்டத்தில் கூச்சல் ஆர்ப்பரித்தது, அங்கே நிரம்பி நின்ற கடல் அலையைவிட மிக அதிவேகமாக!
முதன்முதலாக அப்போதுதான் இந்தக் கதையும் பிறந்தது.












Click it and Unblock the Notifications