"இதுதான் நேரம்".. உள்ளாட்சி தேர்தலில் மொத்தமாக அள்ளி.. அதிமுகவை கூண்டோடு காலி செய்ய திமுக ஸ்கெட்ச்?!
சென்னை: என்ன நடந்தாலும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கவே கூடாது என்பதில் திமுக தீர்மானமாக இருக்கிறதாம். அதிமுகவிற்கு மேலும் செக் வைக்க இதுவே சரியான தருணம் என்ற முடிவில் திமுக இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்த 9 மாவட்டங்களுக்கும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று தகவல்கள் வருகின்றன.
இந்த தேர்தலுக்கான பணிகளை அரசு தரப்பும், தேர்தல் ஆணையமும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.
அடுத்த வாரம் பாருங்க மேட்டூர் அணைக்கு எவ்ளோ நீர்வர போகுது.. எல்லாமே புதிய வரவின் மேஜிக்.. வெதர்மேன்
தேர்தல்
இந்த தேர்தல் முடிந்ததும் ஒன்றிரண்டு மாத கேப்பில் நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களையும் நடத்தும் முடிவில் அரசு உள்ளது. எப்படியும் டிசம்பருக்குள் நகராட்சி தேர்தலை நடத்திவிடுவோம் என்று அமைச்சர் கேஎன் நேரு ஏற்கனவே பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். திமுக சில முக்கியமான விஷயங்களை மனதில் வைத்து தேர்தலை துரிதமாக நடத்தும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
நல்ல பெயர்
திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. இரண்டு மாத ஆட்சியில் முக்கியமான பல வாக்குறுதிகளை நிறைவேற்றி, கொரோனாவையும் கட்டுப்படுத்தி அரசு கொஞ்சம் நல்ல பெயர் எடுத்து இருக்கிறது. ஆட்சிக்கு எதிராக பெரிதாக குறை சொல்லும் அளவிற்கு இதுவரை எந்த தவறும் நடக்கவில்லை. இதனால் இப்போதே சூட்டோடு சூடாக உள்ளாட்சி தேர்தல்களை நடத்தி வெற்றிபெற வேண்டும் என்ற திட்டத்தில் திமுக இருக்கிறதாம்.
பணிகள் செய்ய வசதி
இன்னொரு பக்கம் நகராட்சி, மாநகராட்சி உட்பட அனைத்து பகுதிகளிலும் பொறுப்புகளை கைப்பற்றுவதை திமுக மிக முக்கியமான விஷயமாக பார்க்கிறது. மாவட்ட அளவில் ஆட்சி பணிகளை மேற்கொள்ள இது வசதியாக இருக்கும். எல்லோரும் ஆளும் கட்சியினராக இருந்தால் திட்டங்களை, உத்தரவுகளை செயல்படுத்த வசதியாக இருக்கும். இதனால் இப்போதே தேர்தலை சந்திக்கும் திட்டத்தில் திமுக உறுதியாக இருக்கிறதாம்.
அதிமுகவை காலி செய்ய திட்டம்
இதெல்லாம் போக அதிமுகவில் இப்போது பெரிய அளவில் உட்கட்சி பூசல் நிலவுகிறது. சசிகலா ஒரு பக்கம் கட்சியை மீட்கும் முடிவில் இருக்கிறார். ஓபிஎஸ் இன்னும் சமாதானம் அடையவில்லை. அதோடு அதிமுக நிர்வாகிகளும் வரிசையாக திமுக பக்கம் தாவி வருகிறார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் தேர்தலை நடத்தி அதில் வெற்றியும் பெற்றால் அதிமுகவிற்கு மொத்தமாக செக் வைத்து காலி செய்யலாம் என்று திமுக தரப்பு நினைக்கிறதாம்.
கொங்கு கைப்பற்ற திட்டம்
அதோடு மேற்கு மண்டலத்தில் உள்ள முக்கியமான மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி பொறுப்புகளை கைப்பற்றுவதன் மூலம் கொங்கு குறித்து பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்றும் திமுக நினைக்கிறதாம். இதுதான் நல்ல வாய்ப்பு. இப்போதே தேர்தலை நடத்தினால் நன்றாக இருக்கும் என்று திமுக நினைப்பதால் கண்டிப்பாக உள்ளாட்சி தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படாமல் அடுத்தடுத்து நடக்கும் என்கிறார்கள் திமுக தரப்பினர்.
முற்றுப்புள்ளி
இது தொடர்பாக பேட்டி அளித்த அமைச்சர் பெரிய கருப்பன் இதை உறுதி செய்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், தமிழ்நாடு அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை செய்து வருகிறது. தேர்தலை கண்டிப்பாக நடத்துவோம். விரைவில் தேதிகள் அறிவிக்கப்படும். தேர்தலை எந்த காரணத்திற்காகவும் ஒத்தி வைக்க மாட்டோம். அந்த எண்ணமே எங்களுக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.