கோர்ட் போட்ட உத்தரவு.. தேர்தலுக்கு முன் செந்தில் பாலாஜி வெளியே வர சான்ஸே இல்லை? முக்கிய ஆர்டர்
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 31-வது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. நீதிமன்றக் காவலை ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று முறையிட்டார். அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது ஜாமீன் மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. .உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் செந்தில் பாலாஜி மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு: முன்னதாக சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை தாக்கல் செய்து இருந்தார். ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட் அவருக்கு எதிரான வழக்கு விசாரணையை, மூன்று மாதங்களில் முடிக்க முதன்மை சிறப்பு நீதிமன்றத்துக்கு, உத்தரவிட்டது. மூன்று மாதங்களில் விசாரணையை முடிக்கச் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதற்கு எதிராகவும் செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இருப்பினும், வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிப்பது தேவையற்றது என்று கூறிய சுப்ரீம் கோர்ட், இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
நீட்டிப்பு: இந்த நிலையில்தான் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 31-வது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. நீதிமன்றக் காவலை ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வெளியே வர சான்ஸே இல்லை: இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தேர்தலுக்கு முன் வெளியே வர சான்ஸ் இல்லை. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நடக்கும் ஏப்ரல் 19ம் தேதிக்கு முன்பாக மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வர வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
இதனால் செந்தில் பாலாஜி இல்லாமலே தேர்தல் பணிகளை அவர் நியமித்த நிர்வாகிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். அவ்வப்போது சிறையில் இருந்து செந்தில் பாலாஜி கொடுக்கும் ஆலோசனைகளை கேட்டு இவர்கள் தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றனர்.
இது பற்றி நம்மிடம் பேசிய திமுகவினர் சிலர், கோவையில் செந்தில் பாலாஜி கொடுத்த பிளான்படி பணிகள் நடக்கின்றன. அதிமுக, பாஜக வலுவாக இருந்தால் அங்கே மாநகராட்சி தேர்தலில் ஒன்றிலாவது வென்று இருக்க வேண்டுமே? ஏன் இல்லை. இதை திமுக பார்க்கிறது. அதனால்தான் கோவையில் நேரடியாக களமிறங்குகிறது. சேலத்திலும், களமிறங்குகிறது. பொள்ளாச்சியிலும் மீண்டும் களமிறங்கி உள்ளனர். கோவையில் செந்தில் பாலாஜி இல்லாமலே வெற்றிபெறுவோம்.. அவரை நீங்கள் சிறையில் போட்டுவிட்டீர்கள். அதனால் எங்கள் கட்சி தோல்வி அடையும் என்று நினைக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications