தமிழகத்தில் இப்போதைக்கு ஊரடங்கு இல்லை, "ஆனால்!" முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முக்கிய முடிவு
:ஓமிக்ரான் பரவல் மேலும் அதிகரிக்காத வகையில் அதை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
சென்னை: தமிழகத்தில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் போல தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமலாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அந்த தகவலை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
தமிழ்நாட்டில் நேற்று மாலை மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியலில் கொரோனா பாதிப்பு 607ஆக உள்ளது. இதுவரை மாநிலத்தில் மொத்தம் 27,42,224 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 0.6%ஆக உள்ளது.
இருப்பினும், தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான், இப்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதனால் உலக நாடுகள் வெளிநாட்டுப் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளன.

34 பேர் பாதிப்பு
உருமாறிய கொரோனா வைரஸ் ஓமிக்ரான் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளது. தற்போது ஒமைக்ரான் தொற்றுக்கு 34 பேர் ஆளாகியுள்ளனர். 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். மேலும் 24 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியாக உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளதால் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அதிகரிக்கும் ஓமிக்ரான்
இந்திய அளவில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது. ஓமிக்ரான் பரவல் மேலும் அதிகரிக்காத வகையில் அதை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனைக் கூட்டம்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

என்னென்ன கட்டுப்பாடுகள்
ஓமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் என்னென்ன மேற்கொள்ளலாம்? புதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாமா? பள்ளி கல்லூரி மாணவர்களிடையே ஓமிக்ரான் பரவாமல் தடுப்பதற்கு அறிவிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் ஆகியவை பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகள் ஒரு வாரத்திற்கு கொண்டாடப்பட உள்ளநிலையில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

மத்திய அரசு கடிதம்
இந்திய அளவில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 300ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே ஓமிக்ரான் கொரோனை கட்டுப்படுத்த வார் ரூம்களை ஏற்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு எழுதிய கடிதத்தில் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், தீவிர கொரோனா பரிசோதனை, இரவு ஊரடங்கு உள்ளிட்ட தொடர்ச்சியான தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து மாநில அரசுகளும் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. எனவே இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

ஊரடங்கு அமலாகாது
தமிழகத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை இரவு நேரங்களில் கடற்கரைகளில் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் போல தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்று ஹேசியங்கள் ஓடின. ஆனால், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் வட்டாரத்தில் பேசுகையில், தொற்று 10% அளவில் நெருங்கினால் ஊரடங்கை அறிவிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.சுகாதாரத்துறையில் ஒப்பந்த பணியாளர்களின் பணி காலத்தை மேலும் நீட்டிப்பு செய்யவும் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.தீவிர அவசர கட்டுப்பாட்டு மையங்களை மீண்டும் தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications