ஓமிக்ரான் முன்னெச்சரிக்கை: தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.
Recommended Video
உலகின் பல நாடுகளில் ஓமிக்ரான் என்ற கொரோனாவின், புதிய வகை வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
டெல்லியில் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 10.60% குறைப்பு.. லிட்டருக்கு ரூ.8 விலை சரிவு!
இந்த நிலையில்தான், மதுரையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார் மா.சுப்பிரமணியன்.
அமைச்சர் பேட்டி
அமைச்சர் கூறியதாவது: அனைவரும் கவசம் அணிந்து கொள்வது, மற்றும் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டால் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படாது. தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் மதுரை மாவட்டம் மோசமான நிலையில் இருக்கிறது. முதல் டோஸ் தடுப்பூசியை 71 சதவீதம் பேர் எடுத்துக்கொண்டனர். இரண்டாவது டோஸ் 32 சதவீதம் மட்டுமே எடுத்துள்ளனர்.
மதுரை நிலவரம் மோசம்
மதுரை மக்கள் தயவு செய்து தடுப்பூசியை முழுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் இதுவரை ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை . சந்தேகத்தின் பேரில் 477 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் புதிய வகை வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது தெரிய வந்தது.
தடுப்பூசி
இந்த வகை வைரஸ் பரவல் வேகமாக இருப்பதாக சர்வதேச மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இதை தடுப்பதற்கு தடுப்பூசி செலுத்துவதும், முக கவசம் அணிவதும்தான் முக்கிய பங்காற்றும். குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் ஓமிக்ரான் வைரஸ் தொற்று உறுதியானால் அவர்களை தனியாக தங்க வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இறையன்பு ஆலோசனை
உலகின் பல பகுதிகளில் புதிய வகை வைரஸ் பரவிய நிலையில், தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இரு தினங்கள் முன்பாக நடைபெற்றது. தமிழகத்தில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. தியேட்டர்களில் 100% பார்வையாளர்கள் அமர வைக்கப்படுகின்றனர். இந்த விஷயங்களில் முதலில் கட்டுப்பாடு கொண்டு வந்த பிறகு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரக் கூடும் என்று தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் மக்கள் உரிய ஒத்துழைப்பு அளித்தால் ஊரடங்கு அவசியமில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நிபுணர்கள்
முன்னதாக, 300 கோடி செலவில் மிகப்பெரிய புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் தமிழகத்தில் அமையவுள்ளது என்று சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். சென்னை தரமணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் புரோட்டான் பீம் தெரபி புற்றுநோய்களுக்கான சிறப்பு சிகிச்சைக்காக தென் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்கா உள்ளிட்ட கண்டங்களில் இருந்து சர்வதேச நோயாளிகள் வருகை புரிந்துள்ளனர். அவர்களை மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். உடன் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய அமைச்சார் மா.சுப்பிரமணியன்: 16,00 மைல்களை கடந்து சர்வதேச நோயாளிகள் தமிழக மருத்துவம் மீது நம்பிக்கை கொண்டு வருகை தந்திருப்பது தமிழக மருத்துவ துறையின் வளர்சியை காட்டுவதாகவும் இந்நிகழ்வு பெருமைமிக்க புதிய நம்பிக்கையை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
ஆராய்ச்சி மையம்
தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் படி 24 ஏக்கர் பரப்பளவில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையினை 120 கோடி செலவில் மேம்படுத்தும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்தியாவின் முதன்மை புற்றுநோய் மருத்துவமனைக்கு இணையாக தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த மாதம் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையின் மேம்பாட்டு பணியை நேரில் ஆய்வு செய்துள்ளது. 300 கோடி செலவில் 1200 படுக்கைகளுடன் மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை உருவாக்கி கூடுதல் வசதிகள் கொண்ட மையத்தை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், ஓரிரு ஆண்டுகளில் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழக அரசின் மருத்துவமனைக்கும் வந்து சிகிச்சை பெற்று நலம் பெற்று திரும்பும் நிலை ஏற்பட இருக்கிறது என தெரிவித்துக் கொண்டார்.