மோடி, ராகுல் அடுத்தடுத்து தமிழகம் வருகிறார்கள்.. தேர்தல் திருவிழா களை கட்டுகிறது
Recommended Video

சென்னை: பிரதமர் மோடி ஏப்ரல் 8 ஆம் தேதி தமிழகம் வர உள்ளதை அடுத்து, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக ஏப்ரல் 2வது வாரம் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து, கூட்டணி கட்சி தலைவர்கள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் அடுத்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த 13ம் தேதி சென்னை வந்த ராகுல் காந்தி, தனியார் மகளிர் கல்லூரியில் கலந்துரையாடினார்,
பின்னர், கன்னியாகுமரி சென்ற அவர் திமுக-காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழகத்தில் தேர்தல் களம் அனல் பறந்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 2வது வாரம் தமிழகம் வருகிறார் என்றும் விரைவில் தேதி முடிவாகும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்பட்டுள்ளது.
அதே போன்று, ராகுல் காந்தியின் சகோதரியும், உத்தரப்பிரதேச கிழக்கு பிராந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியையும் பிரச்சாரத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதேபோல், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி ஏப்ரல் 8 ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக, கடந்த 6 ஆம் தேதி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, சென்னை வண்டலூர் அருகே நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். தமிழகத்திற்கு அடுத்தடுத்து தேசிய கட்சி தலைவர்கள் வருவதை ஒட்டி தேர்தல் திருவிழா களைகட்டி உள்ளது .












Click it and Unblock the Notifications