கனிமொழி, வைகோ முதல் தமிழிசை வரை.. தமிழகத்தில் இவர்கள் போட்டியிட போகும் தொகுதிகள் இதுதானா?
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட போகும் முக்கிய வேட்பாளர்கள் யார், அவர்கள் போட்டியிட போகும் தொகுதிகள் என்ன என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட போகும் முக்கிய வேட்பாளர்கள் யார், அவர்கள் போட்டியிட போகும் தொகுதிகள் என்ன என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று கூறுகிறார்கள்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து மொத்தம் 40 தொகுதிகள் இருக்கிறது. இந்த 40 தொகுதிகள் லோக்சபா தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் ஆளும் கட்சியை தேர்வு செய்யும் பலம் கூட தமிழகத்திற்கு இது கொடுக்கும்.
இந்த நிலையில் இந்த 40 தொகுதிகளில் சில தொகுதிகள் ஸ்டார் வேட்பாளர்களின் தொகுதிகள் ஆகும். இந்த தொகுதிகள் என்னென்ன, யார் இதில் போட்டியிட போகிறார்கள் என்று பார்க்கலாம்.
ஒரு குட்டிக் கட்சியையும் விடாதீங்க.. வளைச்சுப் பிடிங்க.. அதிரடியில் உ.பி. காங்கிரஸ்!
கனிமொழி தொகுதி
கனிமொழி இந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட போவது உறுதியாகிவிட்டது. ராஜ்யசபா எம்.பியாக இருக்கும் அவர் லோக்சபா எம்.பியாக முடிவெடுத்து இருக்கிறார். அதன்படி கனிமொழி தூத்துக்குடி தொகுதியில்தான் போட்டியிடுவார் என்பது உறுதியாகி உள்ளது. இன்று அதற்கான விருப்பமனுவை கனிமொழி திமுக அலுவலகத்தில் அளிக்க வாய்ப்புள்ளது.
வைகோ எங்கு
அதேபோல் திமுக கூட்டணியில் மதிமுக மொத்தம் 2 இடங்களை பெறும் என்று கூறப்படுகிறது. இதில் ஒரு இடத்தில் கண்டிப்பாக மத்திய பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுவார் என்கிறார்கள். கண்டிப்பாக திருச்சி தொகுதியில்தான் வைகோ போட்டியிட போகிறார் என்கிறார்கள். இன்னும் இரண்டு நாட்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.
தமிழிசை எங்கு
அதேபோல் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இந்த முறை எம்.பி தொகுதியில் போட்டியிட உள்ளார். இவர் 90 சதவிகிதம் தென் சென்னையில் போட்டியிடுவார் என்று செய்திகள் வருகிறது. சமயத்தில் இவர் வைகோவை நேரடியாக எதிர்த்து திருச்சியில் போட்டியிட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.
திருமாவளவன் எங்கு
இந்த தேர்தலில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இரண்டு தொகுதிகளில் திமுக கூட்டணியில் போட்டியிட இருக்கிறது. பெரும்பாலும் காஞ்சிபுரம் மற்றும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் என்கிறார். இதில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
சிதம்பரம் தொகுதி
அதேபோல் இந்த லோக்சபா தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மீண்டும் போட்டியிடுவார் என்கிறார்கள். ஆனால் இவர் இந்த முறை சிவகங்கை தொகுதியில் போட்டியிடுவது சந்தேகம்தான் என்று கூறுகிறார்கள். காங்கிரஸ் சார்பாக இங்கு வேறு ஒரு நபர் போட்டியிடுவார், சிதம்பரம் வேறு ஏதாவது ஒரு தொகுதிக்கு மாறுவார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.
ஆ. ராசா எங்கு போட்டி
அதேபோல் லோக்சபா தேர்தலில் திமுக சார்பாக நீலகிரி தொகுதியில் போட்டியிட முடிவெடுத்து இருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா. நேற்று காலை திமுக அலுவலகம் வந்த அவர் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்தார். ஆ.ராசா ஆதரவாளர்களும் அவர் விருப்பமனு தாக்கல் செய்த போது உடன் இருந்தனர்.
ராகுல் காந்தி எங்கு போட்டி
அதேபோல் தமிழகத்தில் ஒருவேளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்றும் கூறுகிறார்கள். இவர் ஏற்கனவே உத்தர பிரதேசத்தில் அமேதி தொகுதியில் போட்டியிட போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கன்னியாகுமரியில் எம்.பி பொன். ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வரவில்லை.